மதுரை அரசுப் பள்ளி மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு: ரூ.1.50 செலவில் 50 கி.மீ செல்லும் இ-பைக்!
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கும் சைக்கிளை இ-பைக்காக மாற்றி மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு இலவசமாக வழங்கும் சைக்கிளை இ-பைக்காக மாற்றி மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சாதனை படைத்துள்ளார்.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் சிலருக்கு படிப்பை விட எதையாவது புதிதாக கண்டறிவதில் ஆர்வம் இருக்கும். கற்றவற்றை ஒன்றிணைத்தோ அல்லது அனுபவ அறிவின் மூலமாகவே புதிய கண்டுபிடிப்புகளை மாணவ, மாணவிகள் உருவாக்கி வருகின்றனர்.
புதிய இந்தியாவின் எதிர்காலம் இளம் தலைமுறையினர் கையில் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் கண்டுபிடிப்பு பாராட்டுக்களை குவித்து வருகிறது.
நிரந்தரமற்ற கச்சா எண்ணெய் விலை, நாளுக்கு நாள் உயரும் பெட்ரோல், டீசல் விலை, எலெக்ட்ரிக் வாகனங்களில் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு மத்தியில் பள்ளி மாணவர்களுக்கு அரசு கொடுத்த இலவச சைக்கிளை இ-பைக்காக மாற்றியுள்ளார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுநிலை இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வருபவர் மாணவர் தனுஷ் குமார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிய சைக்கிளை இ-பைக்காக மாற்றியுள்ளார்.
இந்த சைக்கிள் 24 வோல்ட் மற்றும் 26 ஆம்பியர் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும், சார்ஜ் செய்வதால் மட்டுமல்ல பெடல் செய்யும் போதும் தானாகவே சார்ஜ் ஆகும் படி, கார்களில் பயன்படுத்தப்படும் ஆல்டர்னேட்டர்களை கொண்டு வடிவமைத்துள்ளார்.
“எனர்ஜி இயற்பியல் பாடத்தைப் படித்தபோது, மின்சாரம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் வாகனங்கள் எப்படி நமது எதிர்காலமாக மாறக்கூடும் என்பதை அறிந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்து அரசு சைக்கிளை இ-பைக்காக மாற்றக்கூடிய பாகங்களை வாங்கி, தற்போது முழு இ-பைக்கை வடிவமைத்துள்ளேன்,” என்கிறார்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த பைக் 40 கிலோ மீட்டர்கள் வரை தடையில்லாமல் ஓடக்கூடியது. அதன் பின்னர், பேட்டரி குறைந்துவிட்டால், வாகனம் தானாகவே பெடல் மோடுக்கு மாறுவது போல் தனுஷ் குமார் வடிவமைத்துள்ளார். அப்புறம் என்ன ஒருவேளை இ-பைக் நடுவழியில் நின்றுவிட்டால் கூட, ‘வேலையில்லா பட்டதாரி’ தனுஷ் போல் நீங்கள் பெடல் செய்து கொண்டே வீட்டிற்கு வந்துவிடலாம்.
தனுஷ் குமாருக்கு இதுபோன்ற கண்டுபிடிப்புகள் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னதாகவும் இவர் சோலார் பைக் கண்டுபிடித்துள்ளார். தற்போது மக்கள் அனைவரும் மாற்று சக்திக்காக எலெக்ட்ரிக் பைக்குகளை பயன்படுத்துவதையே அதிகம் விரும்புகின்றனர்.
மேலும், அதன் விலை மற்றும் பயன்பாட்டுச் செலவை குறைக்கும் விதமாக புதிய கண்டுபிடிக்க உருவாக்க நினைத்த தனுஷ் குமார், சோலார் பைக்கை மாற்றி வடிவமைத்து இ-பைக்காக மாற்றிவிட்டார்.
இதுகுறித்து தனுஷ் குமார் கூறுகையில்,
"பெட்ரோல் விலையுடன் ஒப்பிடும்போது இந்த பேட்டரிக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் விலை மிகவும் குறைவு. 50 கி.மீ. வரை பயணிக்க ரூ.1.50 செலவாகும். இந்த பைக்கை 30-40 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். மதுரை போன்ற நகருக்குள்ளேயே இந்த பைக்கை 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடிகிறது,” என்கிறார்.
இந்த இ-பைக்கை வடிவமைக்க 25 ஆயிரம் வரை செலவானதாகவும், கொரோனா காரணமாக சில உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்து விட்டதாகவும், இல்லை என்றால் 18 ஆயிரம் ரூபாயிலேயே இந்த இ-பைக்கை வடிவமைத்துவிடலாம் எனக்கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் தனுஷ் குமார்.
தகவல் உதவி: ஏஎன்ஐ | தொகுப்பு: கனிமொழி