விவசாயிகள் மகசூலுக்கு உதவும் புதிய ஆப்: 15 வயது திருவண்ணாமலை மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு!
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன், மண்ணின் வகை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு சரியான பயிரைத் தேர்ந்தெடுக்க விவசாயிகளுக்கு உதவும் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 வயது சிறுவன், மண்ணின் வகை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான பயிரைத் தேர்ந்தெடுக்க விவசாயிகளுக்கு உதவும் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
மண்ணில் இறங்கி விவசாயம் செய்தால் மட்டும் அல்ல, அதற்கு உறுதுணையாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை வைத்து கண்டுபிடிப்புகளை உருவாக்குவதும் வேளாண் தொழிலுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும். இதைத் தான் தமிழகத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் சாதித்து காட்டியுள்ளார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த் என்ற 15 வயது சிறுவன் விவசாயிகளுக்கு உதவுவதற்காக ‘கோல்டன் க்ராப்’ ‘Golden Crop' என்ற செயலியை உருவாக்கியுள்ளார்.
விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட கிராமங்களில் வாழும் விவசாயிகள் தவறான பயிர் செய்யும் முறை மற்றும் விதைகளை தேர்வு செய்வதால் வேளாண் தொழிலில் நஷ்டமடைவதை சிறுவன் அரவிந்த் கவனித்து வந்தார். மண் வளம் மற்றும் பருவநிலைக்கு ஏற்ற சரியான பயிரை விவசாயிகளுக்குத் தேர்வு செய்து கொடுக்க ஏதாவது வழி இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த அவர், தனது சொந்த முயற்சியால் புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார்.
‘கோல்டன் க்ராப்’ என்ற அந்த ஆப், விளைநிலத்தில் உள்ள மண்ணின் வகை மற்றும் அப்பகுதியில் உள்ள உள்ளூர் தட்பவெப்ப நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மாதத்திற்கு விவசாயிகள் சிறந்த விளைச்சலை பெறக்கூடிய பயிர் வகைகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. மேலும், ஒரு பயிரை அறுவடை செய்யத் தேவையான நாட்கள், பயிரின் சந்தை விலை, உண்மையான மகசூல் போன்ற குறிப்பிட்ட விவரங்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ள உதவுகிறது.
கோல்டன் க்ராப் செயலில் உள்ள சிறப்பம்சங்கள்:
‘கோல்டன் க்ராப்’ செயலி விவசாயிகள் மண்ணை சோதிக்க அனுமதிக்கிறது மற்றும் நேரடியாக உள்ளூர் மண் பரிசோதனை ஆய்வகங்களுடன் இணைக்கிறது, இதனால் விவசாயிகள் சரியான பயிரை தேர்வு செய்ய முடியும்.
‘உங்கள் பயிர்’ அம்சத்தைப் பயன்படுத்தி, விவசாயிகள் தங்கள் பயிர்களைக் கண்காணித்து, அடுத்து வரவிருக்கும் முக்கியமான நிகழ்வு குறித்த அறிவிப்பைப் பெறலாம்.
விவசாயிகள் தங்கள் பயிரை ஆரோக்கியமான பயிர் படத்துடன் ஒப்பிடுவதன் மூலம் தங்கள் பயிர் ஆரோக்கியத்தையும் சரிபார்க்கலாம். பயன்பாடு, தற்போது செயல்பாட்டில் இருக்கும் போது, அரவிந்தால் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் தொடர்ந்து விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையிலான விஷயங்களை இணைத்து வருகிறார்.
செயலியில் இருக்கும் மற்றொரு பயன்பாட்டு அம்சம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கருத்துக்களை பெற உதவுகிறது. அதனை அடிப்படையாகக் கொண்டு அரவிந்த் செயலியை அப்டேட் செய்து வருகிறார்.
தற்போது தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘கோல்டன் க்ராப்’ செயலி விரைவில் இந்தியாவின் பிற மொழிகளிலும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
வைட்ஹாட் ஜூனியர் மாணவரான அரவிந்த் கூறுகையில், “அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. WhiteHat Jr இல் சேர்ந்த பிறகு இந்தக் கனவு நனவாகியுள்ளது. இந்தியா மற்றும் வானவில் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக எனது நிறுவனத்திற்கு 'INBO' என பெயர் வைத்துள்ளேன். இது இந்தியாவை வானவில் போல தனித்துவமாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது பற்றிய எனது யோசனையை எடுத்துக்காட்டுகிறது.
“என்னைச் சுற்றியுள்ள விவசாயிகளைப் பார்த்து வளர்ந்தவன் நான், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி பேசுவதைக் கேட்டேன். ‘கோல்டன் க்ராப்’ அவர்கள் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களுக்கு உதவுவதன் மூலம் அவர்கள் சிறந்த விளைச்சலைப் பெற்று சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கான ஒரு சிறிய முயற்சியாகும்,” எனத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பச் சவால்களைத் தவிர, ஆராய்ச்சிப் பணிகளில் அரவிந்த் பல தடைகளை எதிர்கொண்டார். கொரோனா தொற்றுக்கு மத்தியில், கள ஆய்வுகளை மேற்கொள்வதும், தகவல்களைப் பெற மக்களை அணுகுவதும் அவருக்கு மிகவும் கஷ்டமானதாக இருந்துள்ளது. இதனால் செயலியை உருவாக்கத் தேவையான பொருத்தமான தகவலைக் கண்டறிய அவர் WhiteHat Jr ஆசிரியர்கள், அவரது பெற்றோர் மற்றும் அவரைச் சுற்றியுள்ள பிற நபர்களிடமிருந்து தகவல்களைப் பெற்றுள்ளார்.
வைட்ஹாட் ஜூனியரில் அரவிந்தின் வழிகாட்டியான நீலகண்டன் கூறுகையில்,
“அரவிந்த் தனது ஆர்வமுள்ள மற்றும் நுண்ணறிவுமிக்க யோசனைகளால் என்னைக் கவர்ந்தார். ஒரு அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வதற்கான அவரது ஆர்வமும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் இருந்த அர்ப்பணிப்பும் தான் இந்த விவசாயிகளுக்கு உதவக்கூடிய செயலியை வடிவமைக்க உதவியுள்ளது,” எனத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உதவும் வண்ணம் அரவிந்த் புதிய ஆப் கண்டுபிடித்துள்ளது, அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது மகன் விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு, அதற்காக தொழில்நுட்ப ரீதியில் தீர்வு கண்டுள்ளது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது மற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உந்துதலாக இருக்கும் என்றும் அரவிந்தின் தந்தை சரவணகுமார் தெரிவித்துள்ளார்.