‘பணிப்பெண் டூ பளுதுாக்கும் வீராங்கனை’ - பதக்கங்கள் வெல்லும் அம்மாவும்; மகளும்
ஆறு மாதங்களுக்கு முன்பு வரை பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அவர், இன்று பளுதுாக்கும் வீராங்கனை. அவரை கண்டு வியந்த அவரது மகளும் இப்போது பளுதுாக்கும் வீராங்கனையாகியுள்ளார்...
டுவிஸ்ட் அண்ட் டெர்ன்ஸ் நிறைந்த வாழ்வில் அடுத்த பக்கம் என்ன என்பது தெரியாமலிருப்பது ஆகப்பெரும் சுவாரசியம். அப்படி, திடீர் திருப்பத்தால் மாசிலாமணியின் வாழ்வே சுவாரசியம் நிகழ்ந்ததாய் மாறியுள்ளது.
அவரது வாழ்வில் நிகழ்ந்த திருப்பம், நமக்கான உத்வேகமும் கூட! ஆம், ஆறு மாதங்களுக்கு முன்பு வரை பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த அவர், இன்று பளுதுாக்கும் வீராங்கனை. அவரை கண்டு வியந்த அவரது மகளும் இப்போது பளுதுாக்கும் வீராங்கனையாகியுள்ளார்...
பணிப்பெண் பளுதுக்கும் வீராங்கனை ஆனது எப்படி?
கோயம்புத்துாரை சேர்ந்தவர் மாசிலாமணி. அவரது கணவர் ரமேஷ் தினக்கூலிக்கு வேலை செய்து வருகிறார். மாசிலாமணிக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த மகளுக்கு திருமண முடிந்திடவே, இளைய மகள் படித்து வருகிறார். திட்டமிட்டு பட்ஜெட்டுக்குள் வாழும் குடும்பம்.
40 வயதான மாசிலாமணி இரண்டு வீடுகளில் பணிப்பெண்ணாக பணிபுரிகிறார். உடல் எடை சற்று அதிகரித்த பெண்ணான அவர், தான் வேலை செய்யும் வீட்டு உரிமையாளர் ஒருவரின் ஊக்கத்தால் ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஜிம்மில் சேர்ந்தார். அதற்கான உடற்பயிற்சிக் கட்டணத்தையும் வீட்டு உரிமையாளரே செலுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில், உடல் எடையை குறைப்பதில் மும்மரமாக ஈடுப்பட்ட அவரது கவனம் பவர் லிஃப்டிங் பக்கம் திரும்பியது. அதை புரிந்து கொண்ட, ஜிம் ட்ரைனரும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற முன்னாள் பளுதுாக்கும் வீரரான சிவக்குமார், அவருக்கு இலவசமாக பளுதுாக்கும் பயிற்சி அளித்துள்ளார்.
விளைவாய், தமிழ்நாடு பவர் லிஃப்டிங் சங்கத்தின் மாநில அளவிலான போட்டியில் மாசிலாமணி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 63 கிலோ பிரிவில் 77.5 கிலோ எடையை தூக்கி எறிந்து எதிராளிகளை வீழ்த்தியுள்ளார்.
வெற்றிக் கதை இதோடு நின்றுவிடவில்லை. 17 வயதான அவரது மகள் தாரணி அவரது தாயால் ஈர்க்கப்பட்டு ஜிம்மிலும் சேர்ந்தார். அதே பாதையில் பயணித்து அதே போட்டியில் 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடையை தூக்கி வெண்கலம் வென்றார். இருவரும் இப்போது தென்னிந்திய அளவில் போட்டியிட உள்ளனர்.
''தகரக்கூரை வீட்டில் தான் நாங்கள் வசித்து வருகிறோம். அதுவும், பணிபுரியும் இடத்தில் இலவசமாக தங்க வைத்துள்ளனர். நான் கொஞ்சம் குண்டாக இருப்பேன். வீட்டு வேலைக்கு போனப்போ, அந்த வீட்டம்மா தான் ஜிம்மில் சேர்த்து விட்டார். ஜிம் ட்ரைனர் எனக்கு பளுதுாக்க பயிற்சியளித்தார்,” என்றார்.
பயிற்சி எடுத்து கொள்வதால் ஸ்பெஷல் உணவெல்லாம் உட்கொள்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் சாதம் தான் சாப்பிடுவோம். என் மகள் பள்ளியிலே மதி்ய உணவுத் திட்டத்தில் சத்துணவு சாப்பாட்டை சாப்பிட்டு கொள்வாள். தொடர்ந்து போட்டிகளில் கலந்து கொள்ள பொருளாதாரம் கைக்கொடுக்க வேண்டும்.
“ஏதேனும் பணி உதவி கிடைத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று பரிசு வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. தொடக்கத்தில், எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் சிலர் என்னைப் பார்த்து சிரித்தார்கள். இப்போது அவர்கள் என்னைப் பாராட்டுகிறார்கள்',' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பயிற்சி இலவசமாக கற்றுக்கொண்டாலும், மாதம் ரூ.4000 வருமானத்தில் முறையான உணவினை உட்கொள்வதில் சிக்கலே நிலவி வருகிறது.
"ஒவ்வொரு பளுதூக்கும் வீரரும் சரியான புரத உட்கொள்ளலுக்கு மாதம் 2,500 ரூபாய் தேவைப்படும். தாயும் மகளும் சென்னையில் நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான பளுதுாக்கும் போட்டியில் சிறப்பாக விளையாடியவுடன் அவர்களுக்கு ஸ்பான்சர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்," என்று பயிற்சியாளர் சிவக்குமார் தெரிவித்தார்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
‘அம்மாவின் பூக்கடையில் கற்ற மார்க்கெட்டிங்’ - மாதம் ரூ1.5 லட்சம் வருமானம் ஈட்டும் மகன்!