இதை செய்யறீங்கனு தெரிஞ்சா வேலை காலி - ஊழியர்களை எச்சரித்த இன்போசிஸ்!
ஒரே சமயத்தில் 2 நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.
ஒரே சமயத்தில் 2 நிறுவனங்களில் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் என இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.
இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஊழியர்களிடையே வேகமாக பரவி வரும் 'மூன்லைட்டிங்' (moonlighting) கலாச்சாரம் மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. எனவே, மூன்லைட்டிங் முறையில் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவீர்கள் என இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை எச்சரித்துள்ளது.
மூன்லைட்டிங் என்றால் என்ன?
ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு பணியாற்றுவது 'மூன்லைட்டிங்' (Moonlighting) என அழைக்கப்படுகிறது. வெளிநாடுகளைப் பொறுத்தவரை ஒருவர் பல இடங்களில் வேலை செய்வதை பல்வேறு நிறுவனங்களும் அங்கீகரிக்கின்றன. இதனால் வெளிநாட்டில் காலையில் ஒரு அலுவலகத்தில் மாலையில் வேறு ஒரு அலுவலகத்திலும் என மாறி, மாறி பணியாற்றும் மூன்லைட்டிங் கலாச்சாரம் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஸ்விக்கி தனது ஊழியர்களை மூன்லைட்டிங் செய்து கொள்ள அனுமதித்துள்ளது. ஆனால், தகவல் தொழில்நுட்பப் பிரிவைப் பொறுத்தவரை இந்தியாவில் முன்னணியில் உள்ள பல ஐ.டி.நிறுவனங்களும் மூன்லைட்டிங் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
வொர்க் ப்ரம் ஹோம் பாலிசியைப் போலவே நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை ஆதரிப்பது ஊழியர்களுக்கு புதுப்புது ஐடிக்களை உருவாக்க வழிவகுக்கும் என நிபுணர்கள் தெரிவித்தாலும் ஐ.டி.நிறுவனங்கள் தொடர்ந்து அதனை எதிர்த்து வருகின்றன.
இன்போசிஸ் அனுப்பிய இ-மெயில்:
கடந்த திங்கட்கிழமை இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய இ-மெயிலில்,
”மூன்லைட்டிங், இரட்டை வேலை, இரட்டை பணி நேரம்” என்பது விதிமீறல் என்றும், மீறி செயல்படும் ஊழியர்கள் பணியை விட்டு நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் வழங்கிய ஆஃபர் லெட்டரிலேயே மூன்லைட்டிங் போன்ற இரட்டை வேலைகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள நிர்வாகம், வேறு ஏதாவது வேலையை செய்ய நினைத்தால் நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம் எனக்குறிப்பிட்டுள்ளது. மற்றொரு வேலைக்கு அனுமதிப்பது குறித்து,
"நிறுவனம் பொருத்தமானது என்று நினைக்கும் எந்தவொரு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒப்புதல் வழங்கப்படலாம் மற்றும் நிறுவனத்தின் விருப்பப்படி எந்த நேரத்திலும் திரும்பப் பெறப்படலாம்," என மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வேலைகளைச் செய்யும் ஊழியர்களின் உற்பத்தித்திறன் பாதிக்கப்படும் அல்லது தரவு திருட்டு போன்ற மீறல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் காரணமாக ஐடி நிறுவனங்கள் மூன்லைட்டிங்கை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
கடந்த மாதம், விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தனது ட்விட்டர் பதிவு மூலமாக மூன்லைட்டிங் முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவரது பதிவில் மூன்லைட்டிங் பற்றிய பேச்சுக்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் அடிபட ஆரம்பித்துள்ளது. இது ஒரு முழு ஏமாற்று வேலை என கடுமையாக சாடியிருந்தார்.
தொகுப்பு - கனிமொழி