‘விளைவுகள் மோசமாக இருக்கும்’ - ஊழியர்களை எச்சரித்த கூகுள் நிறுவனம்!
கூகுள் ஊழியர்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி கடுமையாக உழைக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்களை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள் ஊழியர்கள் முழு திறனையும் வெளிப்படுத்தி கடுமையாக உழைக்காவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்களை எச்சரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன், ரஷ்யா - உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரை நாள்தோறும் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.டி. ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்னவே அலிபாபா, மைக்ரோசாஃப்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வரும் நிலையில், கூகுள் நிறுவனம் இரண்டாவது முறையாக தனது ஊழியர்களை எச்சரித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை, நிறுவனத்தின் ஊழியர்கள் குறித்தும், அவர்களது திறமை குறித்து கருத்து தெரிவித்தது சர்ச்சையை உருவாக்கியது. நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் உள்ளதை குறிப்பிட்ட சுந்தர் பிச்சை, பலர் திறமையாக வேலை செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், திறமையாக பணியாற்றும்படியும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு உதவிடுவதில் அதிக கவனம் செலுத்தும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது தொடர்பாக ஒரு குழுவை அமைத்து மறுசீராய்வு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே புதிய ஆட்களை வேலைக்குச் சேர்ப்பதை கூகுள் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தற்போது பணி நீக்கம் தொடர்பாக இரண்டாவது முறையாக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூகுளின் உயர்மட்ட நிர்வாகிகள் சிலர், ஊழியர்கள் தங்களது திறமைக்கு ஏற்றார் போல் பணியாற்ற வேண்டும் என்றும், இல்லையெல் தெருக்களில் இறங்கி போராட வேண்டிய நிலை வரும் என்றும் எச்சரித்துள்ளனர். ஊழியர்கள் தங்களது திறமையை மேம்படுத்திக் கொண்டு, தயாரிப்புகளை மேம்படுத்துவது, வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் பணிநீக்கங்கள் நடக்குமா இல்லையா என்பதை அடுத்த காலாண்டு வருவாய் அறிக்கையை பொறுத்தது முடிவெடுக்கப்படும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம் 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் எதிர்பார்த்த வருமானம் வரவில்லை என்பதுதான் எனக் கூறப்படுகிறது. கடந்த காலாண்டை விட இந்த காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 13 சதவீதம் குறைந்து இருப்பதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது தொடர்பாக கூகுள் நிறுவன ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
தொகுப்பு: கனிமொழி