குடியரசுத் தலைவர் மாளிகையின் அதிகாரப்பூர்வ கிஃப்டிங் பார்ட்னர் – Diviniti வளர்ந்த கதை!
Diviniti இந்திய ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களுக்கான பேட்ஜ், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவர் கையால் விருது வாங்குவது என்பது வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய பாக்கியம். யார் எந்த விருதுகளை வாங்குகிறார்கள் என்பது பற்றி நாம் நிச்சயம் தெரிந்து வைத்திருப்போம்.
ஆனால், இந்த விருதுகள், சான்றிதழ்கள், பதக்கங்கள் இவற்றை எல்லாம் யார் தயாரிக்கிறார்கள் என்று எப்போதாவது நாம் யோசித்துப் பார்த்திருப்போமா?
1956-ம் ஆண்டு நிறுவப்பட்ட Diviniti என்கிற நிறுவனம் இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ கிஃப்டிங் பார்ட்னர். மேலும், இந்நிறுவனம் இந்திய ராணுவம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களுக்கான பேட்ஜ், நினைவுச்சின்னங்கள் போன்றவற்றை வடிவமைக்கிறது.
”எங்கள் கலைப்படைப்புகள் மரியாதைக்குரிய டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் வரை இந்தியாவின் அனைத்து குடியரசுத் தலைவர்களின் ஆசிகளைப் பெற்றுள்ளது. இவை பரிசளிப்பு முதல் வழிபாடு வரை அனைத்து இடங்களிலும் அனைவராலும் கொண்டாடப்படுகின்றன,” என்று Diviniti வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் இந்திய ராணுவத்திற்கான பதக்கங்களையும் சான்றிதழ்களையும் (Certificate of Honor, Badge of Sacrifice) வடிவமைத்துள்ளது. ஜம்முவில் இருக்கும் வைஷ்ணவ தேவி கோவில், நாசிக்கில் இருக்கும் ஷீரடி சாய் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவிகளுக்கு ஆன்மீக தயாரிப்புகளை இந்நிறுவனம் சப்ளை செய்கிறது.
“இந்திய கலாச்சாரத்துடன் பின்னிப்பிணைந்த ஆன்மீக பிராண்டை உருவாக்கவேண்டும் என்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு உதித்த யோசனை,” என்கிறார் Diviniti இயக்குநர் டாக்டர் அம்முஸ்ரீ ஜா.
அம்முஸ்ரீ, அவரது கணவர் டாக்டர் தபாஸ் கே மாலிக் இருவரும் இணைந்து இந்நிறுவனத்தின் மரபை கொண்டு செல்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஆஃப்லைன் விற்பனை தடைபட்டதால் அம்முஸ்ரீ, தபாஸ் இருவரும் ஆன்லைன் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை தடைபடாமல் பார்த்துக்கொண்டனர்.
"இன்று ஒரு மாதத்திற்கு 50,000-க்கும் அதிகமானோர் எங்கள் வலைதளத்தைப் பார்வையிடுகிறார்கள். ஒட்டுமொத்த வணிகமும் ஒவ்வொரு ஆண்டும் 30% வரை வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்கமுடிகிறது. ஆஃப்லைன் மாடலிலும் செயல்படவேண்டும் என்று விரும்புவதால் டெல்லி எம்ஜி ரோட் பகுதியில் ஒரு ஸ்டோர் திறந்திருக்கிறோம்,” என்கிறார்.
பெருந்தொற்றுக்கு முன்பு Diviniti முக்கியமாக ஆஃப்லைன் மாதிரியில் கவனம் செலுத்தியது. இதில் பி2பி கிளையண்ட்களுக்கு விநியோகஸ்தர்கள் மூலம் சப்ளை செய்து வந்தது.
2021-22 நிதியாண்டில் Diviniti டர்ன்ஓவர் 78 கோடி ரூபாய். அடுத்த மூன்றாண்டுகளில் 200 கோடி ரூபாயை எட்டுவதை இந்நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது.
மரபை முன்னெடுத்து செல்கிறார்கள்
Diviniti என்கே தனேஜா என்பரால் தொடங்கப்பட்ட நிறுவனம். 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நிறுவனத்தை அவர் நடத்தி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தக்கூடிய நபர்களைத் தேடி வந்தார்.
“நானும் என் கணவரும் 2015ம் ஆண்டு தனேஜாவை ஒரு கண்காட்சியில் சந்தித்தோம். Pujashoppe.com என்கிற எங்கள் முதல் நிறுவனத்தின் தயாரிப்புகளை அந்தக் கண்காட்சியில் நாங்கள் காட்சிப்படுத்தி இருந்தோம். நாங்கள் சந்தித்து பேசிக்கொண்டோம். எங்கள் சிந்தனைகள் ஒத்துபோயின. அதைத்தொடர்ந்து சில முறை அவரை மீண்டும் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. 2017-ம் ஆண்டு இந்த மரபை முன்னெடுத்து செல்வதற்கான வாய்ப்பை அவர் எங்களுக்குக் கொடுத்தார்,” என்கிறார் அம்முஸ்ரீ.
இந்நிறுவனத்தைக் கையகப்படுத்தியது பற்றிய கூடுதல் தகவல்களை இந்தத் தொழில்முனைவோர் வழங்கவில்லை. தயாரிப்பு, பேக்கேஜிங், லேபிள் பணிகள், 3,000 விநியோகஸ்தர்களின் டிஸ்ட்ரிபியூஷன் லைன் போன்றவை அப்படியே தொடர்வதாக தெரிவித்தார்.
பாரம்பரியம், சமகாலம் என வகைப்படுத்தப்பட்ட பிரீமியர் கோல்ட்-பிளேடட் பரிசுப் பொருட்களை Diviniti வழங்குகிறது. உலகிலேயே 24 கேரட் கோல்ட் சர்டிஃபிகேஷன் அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் Diviniti மட்டுமே என்கிறார் அம்முஸ்ரீ.
இமாச்சலப்பிரதேசத்தின் சோலன், ராஜஸ்தானின் அல்வார் ஆகிய இடங்களில் இந்ந்றுவத்தின் தொழிற்சாலைகள் உள்ளன. மூலப்பொருட்கள் உள்நாட்டிலேயே வாங்கப்படுகின்றன.
அலங்காரப் பொருட்கள், கார் ஃபிரேம், கார்ப்பரேட் கிஃப்ட் என ஏராளமான தயாரிப்புகளை வழங்குவதுடன் நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள், பதக்கங்கள் போன்றவற்றை தயாரிக்க அரசாங்கத்துடன் பார்ட்னர்ஷிப் முறையிலும் செயல்படுகிறது.
மாருதி, மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டர்ஸ் ஃபோர்ட், ஹூண்டாய் போன்ற ஏராளமான நிறுவனங்கள் Diviniti கிளையண்டுகள்.
சந்தை நிலவரம் மற்றும் சவால்கள்
இந்திய ஆன்மீக சந்தை 40 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது என்றும் ஏராளமான அமைப்புசாரா நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அம்முஸ்ரீ சுட்டிக்காட்டுகிறார்.
“ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வணிகத்தில் வாடிக்கையாளர்களைக் கவர மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டியிருக்கிறது. உள்ளூர் நிறுவனங்கள் எங்கள் தயாரிப்பு போன்றே போலியான தயாரிப்புகளை மலிவு விலையில் கொடுக்கின்றன. இவை வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்றன,” என்கிறார்.
அம்முஸ்ரீ இரண்டு நிறுவனங்களையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார். கனடா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் Divinity டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் உள்ளபோதும் அவை வலுவாக இல்லை. எனவே சர்வதேச செயல்பாடுகளை வலுப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் தொழில்கள் லாபமடைய உதவும் கோவை நிறுவனம்!