‘வயதானவர்கள் மத்தியில் கொரோனா பற்றி அச்சம் இல்லை’ - ஆய்வில் தகவல்
கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 52% பேர், கொரோனா தொற்று ஏற்படும் என்பது தொடர்பாக அச்சம் கொள்ளவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு வயதானவர்கள் அதிகத் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையிலும், பேபி பூமர்ஸ் எனப்படும் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவர்களில் 52 சதவீதம் பேர், கொரோனா தொற்று ஏற்படும் என்பது தொடர்பாக அச்சம் கொள்ளவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்திய நகர்புறங்களைச்சேர்ந்த வயதான தலைமுறையினர், கொரோனா பாதிப்பு தொடர்பாக அச்சம் கொள்ளாமல் இருப்பதாக யுகவ் (YouGov ) நடத்திய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
பேபி பூமர் எனப்படும் கடந்த கால தலைமுறையினர் மத்தியில் அச்சம் குறைவாக இருப்பதாகவும், 52% கொரோனா பாதிப்பு ஏற்படும் என அச்சம் கொள்ளவில்லை என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
ஜென் இசட் தலைமுறை (37%) மற்றும் மில்லினியல் தலைமுறையை (32%) விட இது அதிகம் என ஆய்வு தெரிவிக்கிறது.
பேபி பூமர் எனும் பதம், 1946 முதல் 1964 வரை பிறந்தவர்களை குறிக்கிறது. ஜென் இசட் தலைமுறை என்பது 1995 முதல் 2015 வரை பிறந்தவர்களை குறிக்கிறது. இந்த கருத்துக்கணிப்பு மார்ச் 10 ம் தேதி முதல் 15 ம் தேதி வரை இந்தியாவில் 1,054 பேர் மத்தியில் யுகவ் ஆம்னிபஸ் சார்பில் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டது.
நகர்ப்புற இந்தியர்களில் 53 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பு தொடர்பான அச்சம் கொண்டிருப்பதாகவும், 38 சதவீதம் பேர் கவலைப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. ஆண்களை விட பெண்கள் மத்தியில் அச்சம் அதிகமாக உள்ளது. ஆண்களில் 47 சதவீதமாகவும், பெண்களில் 59 சதவீதமாகவும் உள்ளது.
பிராந்திய அளவில் வட இந்தியர்கள் மத்தியில் அதிகம் அச்சம் நிலவுகிறது. 61 சதவீதத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். மேற்கத்திய பகுதியில் உள்ளவர்கள் குறைந்த அளவே அச்சம் கொண்டுள்ளனர். 46 சதவீதத்தினர் அச்சம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வரை, தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு தெரிய வந்தது. எனினும். இந்த வாரம் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே வரும் வாரத்தில் இந்த பகுதிகளில் அச்சத்தின் போக்கு மாறலாம்.
கைகளை அடிக்கடி கழுவுவது (69%), கூட்டங்களை தவிர்ப்பது (59%) சுற்றுலா பயணிகளுடனான நேரடி தொடர்புகளைத் தவிர்ப்பது (53%) உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பலரும் தெரிவித்துள்ளனர். 20 சதவீதத்தினர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இருக்கின்றனர். 16 சதவீதத்தினர் பணிக்கு செல்வதை நிறுத்தியுள்ளனர்.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்