உச்ச நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு: பி.வி. நாகரத்னாவின் கதை!
தந்தையின் அடிச்சுவடு டூ அதிரடி தீர்ப்பு!
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏஎம்கான்வில்கர், டிஒய் சுந்திரசூட், எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் சமீபத்தில் 9 புதிய நீதிபதிகளை நியமிக்க, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
அதன்படி, உச்ச நீதிமன்ற புதிய நீதிபதிகளாக 3 பெண்கள் உட்பட 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் நீதிபதி பிவி நாகரத்னா. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நாகரத்னா, தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் புதிய உயரங்களை தொட இருக்கிறார்.
இந்தியா குடியரசு நாடாக மாறிய பின் இந்திய வரலாற்றில் இதுவரை 48 பேர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்துள்ளனர். ஆனால் இந்த 48 பேரில் ஒருவர் கூட பெண் இல்லை. இப்போது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நாகரத்னா இந்த வரலாற்றை திருத்தி எழுதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆக அதிக வாய்ப்பிருக்கிறது.
ஏனென்றால், இவருக்கு இன்னும் பதவிக்காலம் பல ஆண்டுகள் இருப்பதால், 2027ம் ஆண்டு அவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.
பிவி நாகரத்னா யார்?
தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பணிபுரிந்து வரும் நாகரத்னாவின் பூர்வீகமும் கர்நாடகா தான். செழிப்பான பகுதியான காவிரி ஆற்றின் நேரடி பயன்பாடு பெறும் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர். இவரின் குடும்பம் நீதித்துறை பின்னணி கொண்டது எனலாம். நாகரத்னாவின் தந்தை இ.எஸ்.வெங்கடராமையா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். 1989 காலகட்டத்தில் அவர் தலைமை நீதிபதியாக இருந்தார்.
நாகரத்னாவின் குடும்பம் நீதித்துறைப் பின்னணியை கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் வெங்கடராமையா தான். நீதித்துறையை அதிகம் விரும்பிய அவரே தனது குடும்பத்தினரை, அந்தத் துறையில் இணைக்க வைத்துள்ளார். அவரின் சகோதரர் இ.எஸ்.சீதாராமையா, அவரது மகன் இ.எஸ்.இந்திரேஷ் போன்றவர்களை வழக்கறிஞராக இணைத்ததில் வெங்கடராமையாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. இதில் இந்திரேஷ் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.
மேலும், வெங்கடராமையா ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஆன முதல் கன்னடர்' ஆவார். இப்போது தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி நாகரத்னாவும் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாகரத்னாவை பொறுத்தவரை, டெல்லி சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் வாழ்வை தொடங்கினார். இளம் வழக்கறிஞராக இருந்தபோதே தனது வாதத் திறமையால் அதிக கவனம் ஈர்க்கப்பட்ட நபராக நீதித்துறை வட்டாரத்தில் வலம்வந்துள்ளார். 2008ம் ஆண்டு கர்நாடக நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகும் வாய்ப்பு கிடைக்க, அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
பின்னர், 2010ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக பல அதிரடித் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். இவரின் நியமனம் தற்போது கர்நாடக மக்கள் மற்றும் நீதித்துறை வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.