தற்கொலைகளைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாண்டி தன்னார்வ அமைப்பு!
இந்தியாவிலேயே பாண்டிச்சேரியில் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்று வந்ததாக மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரம் அறிவித்ததை அடுத்து தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இளைஞர்கள், குழந்தைகள் மனதில் தற்கொலை எண்ணத்தை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
100 இளைஞர்களைத் தாருங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய விவேகானந்தரின் பொன்மொழியையும், இன்றைய குழந்தைகளே எதிர்கால இந்தியாவின் தூண்கள் என்று கூறிய அப்துல் கலாமின் கனவையும் இணைத்து செயல்பட்டால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது பாண்டிச்சேரி இளைஞர் மற்றும் குழந்தை தலைமைத்துவ மையம் 'டிரஸ்ட் பார் யூத் அன்ட் சில்ரன்ஸ் லீடர்ஷிப்' (TYCL) என்ற கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம்.
2011ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து உருவாக்கியதே டிரஸ்ட் பார் யூத் அன்ட் சில்ரன்ஸ் லீடர்ஷிப். முனைவர் சிவா மதியழகன் தலைமையில் சுமார் 8 பேர் இணைந்து தொடங்கிய இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் இன்று சுமார் 290 நபர்களுக்கு மேல் தன்னார்வலர்களாக இணைந்து தொண்டாற்றி வருகின்றனர்.
நாட்டில்தான் நூற்றுக்கணக்கில் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றனவே, இவர்கள் என்ன சிறப்பாக செய்து விடப் போகிறார்கள் என்று கேட்பவர்களுக்காக ஓர் சிறு உதாரணமாக இவர்களின் சமீபத்திய சாதனை.
இந்தியாவிலேயே பாண்டிச்சேரியில்தான் அதிகளவில் தற்கொலைகள் நடைபெற்று வந்ததாக மத்திய அரசின் குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரம் 2013ல் வெளியிட்ட தகவலில் தெரியவந்தது. விலைமதிப்பில்லாத மனித உயிர்களைக் காக்க, தற்கொலையைத் தடுப்பதற்காக TYCL தன்னார்வ அமைப்பினர் ஓர் இலவச தொலைபேசி எண்ணை (9655507090) வெளியிட்டனர். இந்த உதவி எண்ணுக்கு மாதமொன்றுக்கு சுமார் 60 முதல் 70 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அழைப்புகளை ஏற்க தினசரி ஷிப்ட் முறையில் தன்னார்வலர்கள் பணியாற்றினர்.
இதன் விளைவாக கடந்த மூன்றாண்டுகளாக பாண்டிச்சேரியில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது சமீபத்தில் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்ற தகவல்.
இளைஞர்களின் மனத் தளர்ச்சியைப் போக்கி, அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையூட்டி, வாழும் எண்ணத்தை அதிகப்படுத்தி, தற்கொலை எண்ணத்தை கைவிடச் செயவதாக கூறும் இவர்கள், இதற்கு முழுக்கமுழுக்க நாங்கள் மட்டுமே காரணம் எனக் கூறமாட்டோம். ஆனால் இந்த தற்கொலையைத் தடுக்கும் பணியில் எங்களின் பங்கும் இருக்கிறது என்பதை பெருமையுடனும், அடக்கத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம் என்கின்றனர்.
இதுகுறித்து இந்த அமைப்பின் ஓருங்கிணைப்பாளர் மற்றும் தன்னார்வத் தொண்டர் சுரேஷ் கிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்ததாவது,
"பாண்டிச்சேரியின் தற்கொலை விகிதம் தேசிய சாரசரியை விட நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இதனைக் குறைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியில் எங்கள் டிரஸ்ட் ஈடுபடுகிறது."
எங்களின் முக்கிய நோக்கமே Zero Youth sucide, Zero Anti Environmental behavior, Zero violence against the women and childrens ஆகும். இத்திட்டத்துக்கு நாங்கள் Vision 20 – 30 எனப் பெயரிட்டு, கடந்த 2 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
இன்றைய இளைய சமுதாயத்தின் முக்கியp பிரச்னையான தற்கொலை, மனித சமூதாயத்தின் முக்கிய பிரச்னையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை போன்றவற்றின் புள்ளிவிவரத்தை பூஜ்ஜியமாக மாற்றுவதே எங்கள் டிரஸ்டின் முக்கிய குறிக்கோளாகும். இதை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோம் என்கிறார்.
இவர்களின் இந்த சேவைகளைப் பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபை, இவர்களுக்கு Special Consultative Staus எனும் தகுதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் டிரஸ்டில் இருந்து இவர்கள் தங்கள் பிரதிநிதிகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பலாம். தங்கள் கருத்துக்களை உலக அளவில் வலுவாகத் தெரிவிக்கலாம். உலகம் முழுவதும் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பாடுபடலாம்.
மேலும், இந்த டிரஸ்டின் கிளை அமெரிக்காவிலும் திறக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரியில் இந்த அமைப்பைத் தொடங்கிய சிவாமதியழகன் தற்போது அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருவதால் அங்கும் தங்களின் சேவைப் பணிகளைத் தொடர திட்டமிட்டுள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் உருவாக்கத் திறனை ஊக்குவித்து அவர்களை சாதனையாளர்களாக எங்கள் டிரஸ்ட் மாற்றி வருகிறது என்கிறார் சுரேஷ்.
மேலும் இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சமீபத்தில் தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற குழந்தை எழுதிய கவிதை நூல் வெளியிடப்பட்டது. இதேபோல எழுத்தார்வம் இருந்தும், தங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடியாமல் பரிதவிப்பவர்களுக்காக கனவு தள பதிப்பகம் (Dream space Publishers) எனும் ஓர் பதிப்பகத்தைத் தொடங்கி, இதுவரை சுமார் 4 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளோம். மேலும், எங்கள் கணக்கு வழக்குகளை யார் வேண்டுமானாலும் பார்வையிட்டுக் கொள்ளும் வகையில் வெளிப்படையாக வைத்துள்ளோம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சர்வதேச இளைஞர் தின விழாவில் இளைஞர் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு Change Makers award வழங்கப்பட்டது. இதே போல வரும் டிசம்பர் மாதம் குழந்தைகளுக்கான விருது வழங்கும் விழாவும் நடைபெறவுள்ளது. இதில் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக அப்துல் கலாம் விருது, அன்னை தெரசா விருது, நெல்சன் மண்டேலா விருது என10 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக தற்போது எங்களின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப் பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளிலும் விண்ணப்பத்தை நிரப்பி அனுப்பலாம். இதற்காக தற்போது நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஓவ்வொரு ஆண்டும் இதுபோன்ற விழாக்களை நடத்தி இளைஞர் சமுதாயத்தை ஊக்குவித்து வருகிறோம் என்கிறார் சுரேஷ்.
மேலும், No Profit, No Religion, No Politices என்பதை குறிக்கோளாகவே கொண்டுள்ள இவர்கள், விழாக்களுக்கு அரசியல்வாதிகளையோ, மதத் தலைவர்களையோ சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதில்லை. பொதுவாக இந்திய குடிமைப் பணி அதிகாரிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கல்லூரிப் பேராசிரியர்கள் போன்றவர்களை மட்டுமே விருந்தினர்களாக அழைக்கின்றனர்.
திறமைசாலிகளை வெளியுலகுக்கு அறிமுகம் செய்யவேண்டும், இந்திய இளைஞர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்ற ஊக்குவிப்பதே தங்களின் தலையாய குறிக்கோள் எனக் கூறும் இவர்களின் தன்னார்வ அமைப்பு அதற்காகத்தான் தற்போதிருந்தே குழந்தைகளையும் ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
சமுதாய மாற்றத்துக்காக இளைஞர்களுக்காக, இளைஞர்களால் நடத்தப்படும் இச்சேவை அமைப்பில் சேர்ந்து பணிபுரிய விரும்பினால் இவர்களின் இணையத தளத்தில் தன்னார்வலராகப் பதிவு செய்து பணிபுரியலாம். மேலும், விவரங்களுக்கு 7339222100 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.