வங்கிக் கடனில் கண்ணுக்குத் தெரியாத ‘வட்டி’க்கு ஆர்பிஐ புதிய கடிவாளம்!
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் கடன் பெறுவோரின் கைகளில் தொகை வந்து சேரும் முன்பு இனி வட்டி கணக்கிட்டு வசூலிக்க முடியாது.
வங்கிகளிலும், நிதி நிறுவனங்களிலும் தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களைப் பெறுவோருக்கு கூடுதல் வட்டி தொகையும், மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவதைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், சமீபத்திய நடவடிக்கை ஒன்று மிக மிக முக்கியமனாதாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கை ஒன்று, கடன் வழங்கும் வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் மிக முக்கிய கடிவாளம் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன் வழங்கும்போது, அந்தக் கடனுக்கான ப்ராசஸிங் தேதியில் இருந்து வட்டியை வசூலிக்கத் தொடங்கக் கூடாது என்பதே ரிசர்வ் வங்கி உத்தரவின் முக்கிய அம்சம்.
அதாவது, ‘பர்சனல் லோன்’ உள்ளிட்ட கடன்களுக்காக ஒருவர் விண்ணப்பிக்கும்போது, கடனுக்கு ஒப்புதல் கிடைக்கும் வரை பல்வேறு ப்ராசஸிங் வேலைகள் நடக்கும். அதில் முக்கியமானது, வங்கியின் ஒப்பந்தத்தில் கடன் பெறுவோர் கையெழுத்திடும் நடைமுறை. அவ்வாறு அக்ரிமென்ட்டில் கையெழுத்திட்ட உடனேயே கடனுக்கான வட்டி கணக்கிடப்படுவது உண்டு.
![rbi](https://images.yourstory.com/cs/18/d26dafc008d911e9bb473d9d98ed1e05/rbi-1720975961070.jpg?fm=png&auto=format)
குறிப்பாக, அக்ரிமென்ட் கையெழுத்திடும் நாளில் இருந்து கையில் கடன் தொகை வந்து சேரும் நாள் வரை இடையில் ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை ஆகும் சூழல் ஏற்படலாம். அந்தக் காலக்கட்டத்துக்கும் சேர்த்து வட்டி வசூலிப்பதன் மூலம் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் பல கோடிகளை ஈட்டுவது தெரியவந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில்தான் ரிசர்வ் வங்கி இந்தப் புதிய விதிகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.
ஒருவர் கடனுக்கு விண்ணப்பிக்கிறார் என்றால், அனைத்து நடைமுறைகளும் நடந்து முடிந்த பிறகு, விண்ணப்பித்தவரின் வங்கிக் கணக்கில் கடன் தொகை வந்து சேரும் நாளில் இருந்து மட்டுமே அந்தக் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட வேண்டும் என்பதே இந்த உத்தரவின் குறிப்பிடத்தக்க அம்சம்.
ஒருவேளை, வங்கிகளிலோ அல்லது நிதி நிறுவனங்களிலும் ஒருவர் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, ‘செக்’ (காசோலை) கொடுக்கப்படுகிறது எனில், அந்தக் காசோலை வழங்கப்பட்ட தேதியில் இருந்து வட்டி கணக்கிட்டு வசூலிக்கப்படாமல், அந்தக் காசோலையை மாற்றி பணமாக பெறும்போதோ அல்லது சொந்த வங்கிக் கணக்கில் தொகை வந்து சேரும் நாளில் இருந்தோ மட்டுமே வட்டி கணக்கிடத் தொடங்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது.
அதேபோல், இந்த நடைமுறைகள் அனைத்துமே வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்களில் இடம்பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கிக் கடன் பெறும் வாடிக்கையாளர்கள் பயன்பெறத்தக்க இந்த உத்தரவின் மூலம் கூடுதல் வட்டியும், மறைமுகக் கட்டணங்களும் வசூலிக்கப்படுவது தடுக்கப்படுவதை கவனத்தில் கொள்ளலாம்.
Edited by Induja Raghunathan