ஒரே நாளில் பில்லியனர் கிளப்பில் இணைந்த ஜோமாட்டோ சி.இ.ஓ. தீபிந்தர் கோயல்!
ஜொமாட்டோவில் தீபிந்தர் கோயலின் பங்கு மதிப்பு 8,498 கோடி ரூபாயாக அதிகரிக்க அவர் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தார்.
மும்பை பங்குச் சந்தையில் ஜொமாட்டோ பங்குகள் 2.75% ஆக உயர்ந்ததை அடுத்து, ஜொமாட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல், ஒரே நாளில் பில்லியனர் ஆனார். பங்கு ஒன்றின் விலை ரூ.232 ஆக உயர்ந்ததையடுத்து இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜொமாட்டோவில் தீபிந்தர் கோயலின் பங்கு மதிப்பு 8,498 கோடி ரூபாயாக அதிகரிக்க அவர் பில்லியன் டாலர் கிளப்பில் இணைந்தார்.
நிறுவனத்தின் 2022-2023 ஆண்டு அறிக்கையின்படி, ஜொமாட்டோ நிறுவனத்தில் கோயல் 36.95 கோடி பங்குகள் அல்லது 4.1% பங்குகளை வைத்திருக்கிறார். இந்நிலையில், நேற்றைய (15-07-24) பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது ஜொமாட்டோவின் பங்குகள் விலை தேசியப் பங்குச் சந்தையிலும், மும்பைப் பங்குச்சந்தையிலும் பங்கு ஒன்றிற்கு ரூ.232 ஆக எகிறியது. இதனையடுத்து, கோயலின் நிகர மதிப்பு ரூ.8,498 கோடியாக உயர்ந்தது.
Zomato தனது பிளாட்ஃபார்ம் கட்டணத்தை 20% உயர்த்தி ஒரு ஆர்டருக்கு ரூ.6 ஆக அதிகரித்ததையடுத்து பங்குகள் விலை உயர்ந்தன. மேலும், ஜொமாட்டோவின் வர்த்தகப் பிரிவான Blinkit கையாளுதல் கட்டணமாக ஒரு ஆர்டருக்கு ரூ.4 விதித்ததும் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.
![zomato](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/zomato-1721110902881.jpg?fm=png&auto=format&w=800)
உணவு விநியோக ஆர்டர்களில் 2% வசூல் கட்டணத்தை உணவகங்கள் மறுத்ததை அடுத்து, ஜொமாட்டோவின் போட்டி நிறுவனமான ஸ்விக்கியும் பிளாட்பார்ம் கட்டணத்தை ரூ.5-லிருந்து ரூ.7 ஆக அதிகரித்தது.
2024-ம் ஆண்டை ஜொமாட்டோ நிறுவனம் அதன் வருவாயில், 71% உயர்வுடன் நிறைவு செய்து ரூ.12,114 கோடி வருவாயுடன் முடித்தது. நிகர லாபம் ரூ.351 கோடி. அதன் நான்காவது காலாண்டில் ஆண்டு வருவாய் வளர்ச்சி 73% உடன் ரூ. 175 கோடி நிகர லாபம் ஈட்டியது, வருவாய் ரூ.3562 கோடியாக இருந்தது.
பிளிங்கிட்டில் மாதாந்திர பரிவர்த்தனை செய்யும் பயனர்களின் எண்ணிக்கை (MTU) எதிர்காலத்தில் ஜொமாட்டோவின் மாதாந்திர பரிவர்த்தனை பயனர்கள் எண்ணிக்கையை கடக்கக்கூடும் என்று நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.