இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படக் காரணம் என்ன?
கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு தீவிரமாகி உள்ள நிலையில், ஆக்சின் தட்டுப்பாடு நிலைமையை மேலும் மோசமாகி இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கான காரணங்களை பார்க்கலாம்.
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ ஆக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், சரியான நேரத்தில் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் பல நோயாளிகள் பரிதவிப்பது தொடர்பான கவலைதரும் செய்திகளும் வெளியாகி வருகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தனியார் நிறுவனங்களும் ஆக்சிஜன் உற்பத்தியில் கை கொடுத்து வருகின்றன.
இந்த பின்னணியில் மருத்துவ ஆக்சிஜன் தேவை மற்றும் திடிரென ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கான காரணங்கள் மற்றும் இதற்கான தீர்வுகளைப் பார்க்கலாம்.
ஆக்சிஜன் அருமை
உயிர் வாழ்வதற்கு ஆக்சிஜன் எனும் பிராணவாயு இன்றியமையாதது என நமக்குத்தெரியும். காற்று மண்டலத்தில் ஆக்சிஜன் கலந்திருக்கிறது. நம்மைச்சுற்றியுள்ள இயற்கையான காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் இருக்கிறது. 78 சதவீதம் நைட்ரஜன் இருக்கிறது. எஞ்சிய ஒரு சதவீதம் மற்ற வாயுக்களாக இருக்கின்றன. நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.
மருத்துவ ஆக்சிஜன் (Medical Oxygen) என்றால் என்ன?
ஆக்சிஜனை பல்வேறு முறைகளில் காற்றில் இருந்து பிரித்தெடுக்க முடியும். இப்படி சேகரிக்கப்படும் ஆக்சிஜன் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகின்றன. பிரித்தெடுக்கப்படம் ஆக்சிஜனில் பல கிரேடுகள் உள்ளன.
மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் மிகவும் தூய்மையானது. இது உயிர் காக்கும் அரு மருந்தாகும். மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்சிஜன் மருத்துவ ஆக்சிஜன் என குறிப்பிடப்படுகிறது. மருத்துவ ஆக்சிஜனில் வேறு எந்த வாயுவும் கலந்திருக்காது.
மருத்துவ ஆக்சிஜன் பயன்பாடு
மருத்துவ ஆக்சிஜன் கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ ஆக்சிஜனும் மருந்து போன்றதே. உயிர் காக்கும் மருந்து. மருத்துவ அவசர நிலையில் மருத்துவ ஆக்சிஜன் முதலுதவிக்காக பயன்படுத்தப்படுகிறது. மயக்க மருந்து கொடுக்கும் போதும் பயன்படுத்தப்படுகிறது.
விளையாட்டு வீரர்கள், அதிக உயரத்தில் பயிற்சி மேற்கொள்ளும் போது மருத்துவ ஆக்சிஜனை நாடுகின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கும் பல்வேறு நிலைகளில் மருத்துவ ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது.
கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன்
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் நுரையீரல் பாதிக்கப்பட்டால், அவர்கள் இரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்து பாதிப்பு உண்டாகலாம். இந்த நிலையை தவிர்க்கவே மருத்துவ ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் அளிக்கப்படலாம். பாதிப்பு தீவிரமாக இருந்தால் வென்டிலேட்டர் மூலம் செலுத்தப்படும்.
ஆக்சிஜன் உற்பத்தி
ஏ.எஸ்.யு எனப்படும் காற்றை பிரிக்கும் ஆலைகள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக பிராக்ஷனல் டிஸ்டிலேஷன் எனும் முறை பயன்படுத்தப்பட்டு காற்று குளிர்விக்கப்பட்டு திரவ நிலையில் ஆக்சிஜன் பிரித்தெடுக்கப்படுகிறது. திரவ ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கு குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. முக்கிய மருத்துவமனைகளில் இவை பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்கப்படுகின்றன.
இவைத்தவிர பெரிய டாங்கர்களிலும் அனுப்பி வைக்கப்படுகின்றன. சிலிண்டர்களில் அடைத்தும் விநியோகிக்கப்படுகின்றன. ஆக்சிஜன் திட கரிசல்களாகவும் வழங்கப்படுகின்றன.
ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏன்?
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு நடுவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நோயாளிகள் பாதிக்கப்படும் காட்சிகள் நெஞ்சை பதற வைப்பதாக அமைந்துள்ளன. மருத்துவமனைகள் போதிய ஆக்சிஜன் இல்லாமல் திண்டாடும் நிலையில் நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக அல்லாடும் காட்சிகளும் கண்ணில் நீர் பெருகச்செய்கின்றன.
ஏன் இந்த அவல நிலை? இரண்டாம் அலையில் கொரோனா பாதிக்கப்படுவோர், ஒரு சில நாட்களிலே தீவிர மூச்சுத்திணறல் நிலைக்கு போய் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப திட்டமிடாமல் இருந்தது ஆக்சிஜன் தட்டுப்பாட்டிற்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.
போக்குவரத்துப் பிரச்சனை
அரசு மற்றும் மருத்துவமனை தரப்பில் சரியான திட்டமிடல் இல்லாதது மற்றும் எதிர்பாராத அளவு இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமாக இருப்பதும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருந்தாலும், நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி போதுமான அளவு இருப்பதாகவே சொல்கின்றனர்.
இந்தியாவில் 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தினமும் உற்பத்தி செய்யப்படுவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. மருத்துவமனைகளின் தேவையை இதன் மூலம் சமாளிக்க முடியும். தற்போது தொழிற்சாலை பயன்பாட்டிற்கான ஆக்சிஜனும் மருத்துவப் பயன்பாட்டிற்கு திருப்பி விடப்பட்டிருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மீறி ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது ஏன்?
பிரச்சனை ஆக்சிஜன் உற்பத்தி என்பதைவிட அதன் விநியோகத்தில் இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி போதிய அளவு இருந்தாலும் அது நாடு முழுவதும் சீராக இல்லை. குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகமாக உள்ளது. மற்ற இடங்களுக்கு ஆகிசிஜன் கொண்டு செல்லப்பட வேண்டும்.
திடீரென மருத்துவமனைகளில் தேவை அதிகரிக்கும் போது அதற்கேற்ப விநியோகத்தை அதிகரிப்பது அத்தனை எளிதல்ல என்கின்றனர். ஏனெனில் மருத்துவ ஆக்சிஜினை பாதுக்காப்பாக கொண்டுசெல்ல வேண்டும். இதற்கு கிரியோஜனிக் டாங்கர்கள் தேவை. இத்தகைய டாங்கர்கள் குறைவாகவே உள்ளன. புதிய டாங்கர்களை உற்பத்தி செய்ய நான்கு மாதங்கள் ஆகும். எனவே, தேவையான இடங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைப்பதில் சிக்கல் உண்டானது. சிலிண்டர்களில் நிரப்புவதிலும் உள்கட்டமைப்பு சார்ந்த போதாமைகள் உள்ளன.
கேரள முன்மாதிரி
மருத்துவ ஆக்சிஜனை கொண்டு செல்வதில் உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் இப்போது வெளிச்சத்திற்கு வந்து தேசத்தையே திகைக்க வைத்துள்ளது. தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டைருந்தால் நிலைமை இந்த அளவு மோசமாகி இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
கேரளா மாநிலத்தில், கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே போல், தமிழகத்திலும் மதுரையில் கொரோனா காலத்தில் மருத்துவ ஆக்சிஜன் இருப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை ஒளி
தற்போது ஆக்சிஜன் நெருக்கடியை தீர்க்க பல முனைகளில் நவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளும் உதவி வருகின்றன. எனவே வரும் நாட்களில் நிலைமை மேம்படும் எனும் நம்பிக்கை ஒளியும் பிறந்துள்ளது. எனினும், பெருந்தொற்று காலத்தில் எத்தகைய திட்டமிடலும், முன்னுரிமை சார்ந்த கவனமும் தேவை எனும் விலை மதிப்பில்லாத பாடத்தை இந்த நெருக்கடி கற்றுத்தந்துள்ளது.