இறந்தவரின் சவப்பெட்டி முன் சிரிப்புடன் உறவினர்கள்’ - வைரல் போட்டோ பின்னணி!
கேரளாவில் இறுதி சடங்கு ஒன்றில் உறவினர்கள் அனைவரும் இறந்த உடல் இருக்கும் சவப்பெட்டி முன்பு அமர்ந்து சிரித்தபடியே போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் இறுதிச் சடங்கு ஒன்றில் உறவினர்கள் அனைவரும் இறந்த உடல் இருக்கும் சவப்பெட்டி முன்பு அமர்ந்து சிரித்தபடியே போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மனிதன் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கிறான்.. இறக்கும் போது சுற்றி இருப்பவர்கள் அனைவரையும் அழுவைக்கிறான்... இது தான் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.
ஆனால், கேரளாவில் நடந்த இறுதி சடங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் உறவினர்கள் அனைவரும் பல் தெரியும் அளவுக்கு சிரித்துக்கொண்டே போஸ் கொடுத்திருக்கும் போட்டோ இணையத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஸ்மைலிங் போட்டோ பின்னணி:
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த 95 வயதான மாரியம்மாள் என்பவர் கடந்த 17ம் தேதி காலமானார். வயது மூப்பு காரணமாக கடந்த ஒராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு கிடந்த மாரியம்மாள், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அவருக்கு 9 குழந்தைகள் மற்றும் 19 பேரக்குழந்தைகள் படிப்பு மற்றும் வேலை தொடர்பாக பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இருப்பினும் மாரியம்மாள் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டதும், பிள்ளைகள், பேரக்குழந்தைகள் என மொத்தம் 40 பேர் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கேரளா வந்துள்ளனர்.
ஓஹோ... உலகம் முழுவதும் வேறு வேறு திசையில் இருந்து வந்த சொந்தங்கள் ஒன்றுகூடியதால் இப்படியொரு மகிழ்ச்சியான புகைப்படத்தை எடுத்துள்ளார்கள் என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல.
95 வயது வரை மகிழ்ச்சியாக வாழ்ந்த மாரியம்மாளுக்கு மரியாதை செய்யும் விதமாகவே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாரியம்மாளின் உறவினரான பாபு உம்மன் என்பவர் மலையாள செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,
இது வைரலாக வேண்டும் என்பதற்காக செய்த காரியம் அல்ல. 95 ஆண்டுகள் வாழ்ந்த மாரியம்மாள், 9 குழந்தைகளை வளர்த்து நல்ல நிலைக்கு ஆளாக்கியுள்ளார். பேத்திகள், பேரன்கள் என அனைவருடனும் தனது வாழ்க்கை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடிந்துள்ளார். அவருடைய பிள்ளைகளும், பேரக்குழந்தைகளும் அவரை மிகவும் நேசிக்கின்றனர். எனவே அவருடன் குடும்பமாக மகிழ்ச்சியாக கழித்த தருணங்களை நினைவுகூரும் வகையிலேயே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த போட்டோ, இறுதிச்சடங்கு நிறைவு பெறும் தருணத்தில் ஆகஸ்ட் 19ம் தேதி அதிகாலை 2.15 மணி அளவில் சவப்பெட்டிக்கு அருகில் எடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு குடும்ப உறுப்பினர் அளித்துள்ள பேட்டியில்,
“இந்த புகைப்படத்தை பலராலும் ஒப்புக்கொள்ள முடியாது. ஏனெனில் நாம் எல்லோருமே மரணம் என்றாலே கண்ணீரை மட்டுமே பார்த்து பழக்கப்பட்டுள்ளோம். நாங்கள் இறந்தவரை நினைத்து புலம்பி அழுவதற்கு பதிலாக, அவர் மகிழ்ச்சியுடன் எங்களிடம் இருந்து பிரியா விடை பெற வேண்டும் என நினைத்தோம். இதில் யார் மீதும் எந்த தவறும் இல்லை,” எனக்கூறியுள்ளார்.
கேரளாவில் விவாதங்களை கிளப்பியுள்ள இந்த வைரல் போட்டோவில் கேரள அமைச்சர் வி சின்வன்குட்டியும் சேர்ந்து உள்ளார்.
சாவு வீட்டில் இப்படி சிரிப்பும், கொண்டாட்டமும் தேவையா? என்ற கேள்வி எழுந்தாலும், தனது வாழ்க்கையை பிள்ளைகள், பேரக்குழந்தைகள், அவர்களது குழந்தைகள் என சந்ததிகள் தழைப்பதை பார்த்து மகிழ்ந்த முதியவர்கள் இறக்கும் போது, தாரை தப்பட்டை, பட்டாசு, கரகாட்டம், மயிலாட்டம் என கொண்டாட்டமாக அடக்கம் செய்ய எடுத்துச் செல்லும் கலாச்சாரம் நம்மிடையே இன்று வரை வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.