ஜேஎன்யூ பல்கலை செக்யூரிட்டி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று பி.ஏ.வில் சேர்ந்தார்!
ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் ராம்ஜல் மீனா, பிஏ ரஷ்ய பாடப்பிரிவிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் ஏற்கெனவே பிஏ ஹிந்தி, வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய பட்டப்படிப்பை முடித்து எம்ஏ அரசியல் படித்து வருகிறார்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணிபுரியும் ராம்ஜல் மீனா அதே பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ரஷ்ய பாடப்பிரிவிற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள செய்தி வைரலாகப் பரவியுள்ளது.
ராஜஸ்தானின் கரௌலி பகுதியைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத்தக்க ரம்ஜாலுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் ஏற்கெனவே பி.ஏ. ஹிந்தி, வரலாறு, அரசியல் அறிவியல் ஆகிய பட்டப்படிப்புகளை முடித்துள்ளார். இந்தத் தேர்விற்கு தயாராகியவாறே எம்ஏ அரசியல் படித்து வந்துள்ளார். குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய சூழலில் இருந்ததால் படிப்பை இடைநிறுத்தம் செய்த இவர், இரண்டு பாடங்களையும் அஞ்சல்வழியில் கற்றுள்ளார்.
இவர் 2014-ம் ஆண்டு டெல்லி வந்துள்ளார். ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் செக்யூரிட்டியாக பணியில் சேர்ந்தார். ஒரு நாள் அதே பல்கலைக்கழகத்தில் அயல்மொழி கற்பதற்காக சேர்ந்துகொள்வோம் என்று அவர் ஒருபோதும் எண்ணியதில்லை. எனினும் அவரது விடாமுயற்சியும் நம்பிக்கையும் இதை சாத்தியமாக்கியுள்ளது.
![1](https://images.yourstory.com/cs/18/a52e2120-08d9-11e9-bb47-3d9d98ed1e05/security1564034389174.png?fm=png&auto=format)
”2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் நான் இங்கு பணிபுரியத் தொடங்கியபோது இங்குள்ள கல்விச்சூழலைக் கண்டேன். நானும் மாணவராக சேர்வது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன்,” என்று என்டிடிவி உடனான உரையாடலில் ராம்ஜல் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறும்போது,
“நான் பல்வேறு செயலிகளை தரவிறக்கம் செய்துள்ளேன். அன்றாட நிகழ்வுகளை தினமும் என் மொபைல் வாயிலாக தெரிந்துகொள்வேன். அதுமட்டுமின்றி ஜேஎன்யூ-வில் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தை நான் வெளிப்படுத்தியபோது பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பல மாணவர்கள் படிப்பிற்குத் தேவையான புத்தகங்கள், குறிப்புகள் போன்றவற்றைக் கொடுத்து உதவினார்கள்,” என்றார்.
குடும்பத்தில் மூத்தவர் என்பதால் ராஜஸ்தானில் உள்ள உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்ததும் படிப்பை தொடர முடியாமல் போனது. இருப்பினும் அவர் மனம் தளர்ந்து போகாமல் பட்டப்படிப்பை முடித்தார். குடிமைப் பணிகளில் ஈடுபட்டு நாட்டிற்கு சேவை செய்யவேண்டும் என்பதே ராம்ஜலின் லட்சியம். இதுவே அவருக்கு உந்துதலளிக்கிறது.
”குடிமைப் பணிகள் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. ஐஏஎஸ், ஐபிஎஸ் இரண்டுமே எனக்குப் பிடிக்கும்,” என்று Edex Live உடன் தெரிவித்துள்ளார்.
ராம்ஜலுக்கு வெவ்வேறு மொழிகளைக் கற்பதில் ஆர்வம் உண்டு. இதற்கு டெல்லியில் அதிக வாய்ப்புள்ளதாக கருதுகிறார். மேலும் மற்ற கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும் உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்ளவும் விரும்புகிறார்.
எனவேதான் ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ரஷ்ய பாடப்பிரிவைத் தேர்வு செய்துள்ளார்.
ஆனால் இவர் விண்ணப்பித்துள்ள இந்தப் பாடத்தை முழுநேரமாக படிக்கவேண்டும் என்பதால் அவரால் பணிபுரிந்தவாறே படிக்கமுடியாது. இருப்பினும் அவர் மனம் தளராமல் தொடர்ந்து படிக்க உள்ளார். அவரது குடும்பம் அவரையே சார்ந்துள்ளதால் இரவு நேரத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்தவாறே படிக்க திட்டமிட்டுள்ளார்.
கட்டுரை: THINK CHANGE INDIA