இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானி தேர்வு; யார் இந்த சோம்நாத்?
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக சோம்நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த கே சிவன் செயல்பட்டு வந்தார். இவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய தலைவராக மூத்த ராக்கெட் விஞ்ஞானியான எஸ்.சோம்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சோம்நாத் தான் இஸ்ரோவின் தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
யார் இந்த சோம்நாத்?
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சோம்நாத் அங்குள்ள டிகேஎம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிப்பையும், பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் சயின்ஸில் முதுகலை விண்வெளிப் படிப்பையும் முடித்தார்.
1985ம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இணைந்தார். ஜூன் 2010 முதல் 2014 வரை GSLV Mk-III திட்ட இயக்குநராகவும், விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள ‘ஸ்ட்ரக்சர்ஸ்’ நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பொறுப்பு வகித்தார்.
GSLV Mk-III ஏவுகணை திட்டத்தின் வளர்ச்சியில் சோம்நாத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் உள்ள ‘Propulsion and Space Ordinance Entity’ துணை இயக்குநராக பதவி வகித்தார்.
மூத்த ராக்கெட் விஞ்ஞானி சோம்நாத் சாதனைகள்:
சோம்நாத், ஏவுகணை கட்டமைப்பு அமைப்புகள், கட்டமைப்பு இயக்கவியல், இயங்குமுறைகள், பைரோ அமைப்புகள் மற்றும் ஏவுகணை வாகன ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். உலகெங்கிலும் உள்ள மைக்ரோ சாட்லைட்டுகளுக்கு பிஎஸ்எல்வியை மிகவும் விரும்பக்கூடிய ஏவுகணையாக மாற்றிய இயந்திர ஒருங்கிணைப்பு வடிவமைப்புகளுக்கு சோம்நாத் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
ஆரம்பக் கட்டங்களில் பிஎஸ்எல்வி ஒருங்கிணைப்புக்கான குழுத் தலைவராக இருந்தவர், பின்னாளில் பிஎஸ்எல்வி திட்ட மேலாளராக உயர்ந்து, பிஎஸ்எல்வி திட்டத்தின் வழிமுறைகள் மற்றும் செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்கு வகித்துள்ளார். உள்நாட்டு கிரையோஜெனிக் நிலைகளைக் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் மூன்று வெற்றிகரமான பயணங்களிலும், பிஎஸ்எல்வியின் பதினொரு வெற்றிகரமான பயணங்களிலும் சோம்நாத்தின் பங்கு அளப்பறியது.
சந்திரயான்-2 மிஷனில் தரையிறங்கும் இயந்திரங்களை உருவாக்கியது மற்றும் ஜிசாட்-9 மிஷனில் மின்சார உந்துவிசை அமைப்பை முதன்முறையாக வெற்றிகரமாகப் பறக்கவிட்டது போன்றவை சோம்நாத்தின் சாதனைகளில் முக்கியமானவை ஆகும்.