வட்டார மொழிகளில் மக்களை ஒன்று சேர்க்கும் ’பாரதம்’ ஆப்!
நொய்டாவைச் சேர்ந்த பாரதம் செயலி உள்ளூர்மயமாக்கலில் பிரத்யேக கவனம் செலுத்துகிறது.
2025-ம் ஆண்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 900 மில்லியனாக இருக்கும் என அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. கிராமப்புற பயனர்களின் எண்ணிக்கை மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து வருகிறது. இதனால் வட்டார மொழிகளில் உள்ளடக்கம் உருவாக்கும் வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன.
பல்வேறு தொழில்முனைவு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நீரஜ் பிஷ் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். ’பாரதம்’ (Bharatham) என்கிற சமூக நெட்வொர்க்கிங் செயலியை 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அறிமுகப்படுத்தினார்.
இந்தச் செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் 9,000-க்கும் மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இறுதியில் 2-3 மில்லியன் பதிவிறக்கங்களை இந்தச் செயலி எதிர்நோக்கியுள்ளது.
நீரஜ் தனது தனிப்பட்ட சேமிப்புத் தொகையான 10 லட்ச ரூபாயைக் கொண்டு சுயநிதியில் தொடங்கிய Bharatham செயலி சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் திட்டத்தின்கீழ் 25,000 டாலர் நிதியுதவி பெற்றுள்ளது.
“பலர் எங்கள் செயலியை உள்ளடக்கம் உருவாக்கும் ஆப் என தவறாகப் புரிந்துகொள்கின்றனர். எங்களுடைய செயலி உள்ளூர்மயமாக்கலில் பிரத்யேக கவனம் செலுத்தும் சமூக நெட்வொர்க்கிங் செயலி,” என்று தெளிவுபடுத்துகிறார் நீரஜ்.
இந்தியர்களுக்காக, இந்தியாவில் உருவாக்கப்பட்டது
சட்டம் படித்த நீரஜ் Thomas Reuters நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். தொழில்முனைவில் ஆர்வம் ஏற்பட்டதால் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். 2014-ம் ஆண்டு கார்ப்பரேட் கிஃப்ட் வழங்கும் giftooz.com தொடங்கினார்.
இந்த முயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையாததால் அடுத்ததாக டெலிவரி மற்றும் புரொமோஷன் சேவை வழங்கும் Delivree King தொடங்கினார். 2016-ம் ஆண்டு இதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.
‘மேக் இன் இந்தியா’ பற்றியும் இந்தியாவில் தொடங்கப்படும் தொழில் முயற்சிகள் அதிகரித்து வருவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் நீரஜிற்கு ’பாரதம்’ செயலி தொடங்கும் எண்ணம் தோன்றியுள்ளது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தீர்மானித்த நீரஜ், ஒரு கணக்கெடுப்பு நடத்தினார். சில சுவாரஸ்யமான தகவல்கள் அவருக்குத் தெரியவந்தன.
“நகர்புறங்களுக்கு வெளியே இருக்கும் பயனர்களில் 90 சதவீதம் பேர் வீடியோக்கள் உருவாக்குவதைக் காட்டிலும் பார்ப்பதற்கே விரும்புகிறார்கள். வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றைத் தாண்டி உள்ளூர் மக்கள் முழுமையாக இணைந்திருக்கும் வகையில் ஒரு தளத்தை உருவாக்குவதற்கான தேவை இருப்பது புரிந்தது,” என்கிறார் நீரஜ்.
செயலியின் செயல்பாடுகள்
இந்தியாவிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி நான்கு வெவ்வேறு மொழிகளில் உள்ளது. இவை போனுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். பயனர் இதில் சைன் செய்துவிட்டால் பதிவுகள் போடலாம், வலைப்பதிவு உருவாக்கலாம், நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம், புகைப்படங்கள், வீடியோக்கம் போன்றவற்றை பதிவேற்றம் செய்யலாம், மெசென்ஜர் மூலம் சாட் செய்யலாம், பொருட்களை விற்பனை செய்யலாம்.
தற்போதைக்கு இந்தத் தளம் பிசினஸ் அக்கவுண்ட் வழங்குவதில்லை. இருப்பினும் பரிவர்த்தனைகளுக்கு பாரதம் ஆப் கேட்வே எஸ்க்ரோ சேவை போல் செயல்படுகிறது. விரைவில் பிசினஸ் அக்கவுண்ட் வழங்க உள்ளது. அதுமட்டுமின்றி பிராண்ட் பார்ட்னர்ஷிப் பணிகளும் மும்முரமாக நடந்து வருவதாக நீரஜ் தெரிவிக்கிறார்.
பார்ட்னர்ஷிப் மூலம் வாடிக்கையாளர்கள், பிராண்ட் இரு தரப்பினரும் பலனடைவார்கள் என்கிறார். சாத்தியமுள்ள வாடிக்கையாளரின் விவரங்கள் செயலி மூலம் தெரிவிக்கப்படுவதால் பிராண்டுகள் உடனடி ஆஃபர் வழங்கி பயனடையலாம். அதேபோல் வாடிக்கையாளர்களும் கூடுதல் சலுகைகள் பெற்று பலன் பெறலாம்.
பிராண்ட் பார்ட்னர்ஷிப் தொடர்பான மாதிரியை இன்னும் தெளிவாக உருவாக்கவில்லை என்று குறிப்பிடும் நீரஜ் தரவுகளின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
செயலியில் சில குறிப்பிட்ட அம்சங்கள் இலவசமாகவும் மற்றவை கட்டணத்துடனும் வழங்கப்படுகிறது. ஆண்டு சந்தா கட்டணம் 99 ரூபாய். விளம்பரங்கள், சந்தைப்பகுதி, கட்டணத்துடன்கூடிய மெம்பர்ஷிப் போன்றவற்றின் மூலம் இந்தச் செயலி வருவாய் ஈட்டுகிறது. செயலியை இலவசமாகப் பயன்படுத்தியவர்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தி கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்வோராக மாறியுள்ளனர்.
சந்தை வாய்ப்பு
சீன செயலிகளுக்கு அரசு பிறப்பித்த தடை உத்தரவு, ஆத்மநிர்பார் பாரத், குறைந்த விலையில் இணைய இணைப்பு கிடைப்பது போன்றவை காரணமாக Sharechat, Koo, Helo, Roposo, Josh போன்ற உள்நாட்டு செயலிகள் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.
இருப்பினும் சந்தை அளவு மிகப்பெரியது என்பதால் வாய்ப்புகள் அதிகம் இருப்பதை நீரஜ் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் 750-க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கும் நிலையில் 90 சதவீத மக்கள் வட்டார மொழிகளிலேயே பேசுகிறார்கள் என்கிறார்.
உள்ளூர் சந்தை
ஒரு குறிப்பிட்ட பயனர் எண்ணிக்கையை அடைந்ததும் உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோரிடையே இணைப்பை ஏற்படுத்துவதே இந்த செயலியின் முக்கிய நோக்கம்.
”பயனர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் அர்காரிதம் இணைக்கப்படும். இதனால் செயலியை சிறப்பாக உள்ளூர்மயமாக்கமுடியும். பயனர்களுக்கு அருகிலுள்ள தயாரிப்புகள், சேவைகள், நபர்கள் போன்ற தகவல்கள் கிடைக்கும். இது போட்டியாளர்களிடமிருந்து எங்களை வேறுபடுத்திக் காட்டுகிறது,” என்கிறார்.
விரைவில் செயலியை சந்தைப்படுத்தவும் குழுவை விரிவாக்கம் செய்யவும் இந்த ஸ்டார்ட் அப் திட்டமிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் செல்வாக்குள்ளவர்களுடன் ஏற்கெனவே இணைந்துள்ளது.
அதேபோல் விரைவில் iOS சாதனங்களில் இந்த செயலி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 60 மொழிகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: நயினா சூட் | தமிழில்: ஸ்ரீவித்யா