‘புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது...’ - பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன்!
பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு உழைப்பாளர் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது பேசுபொருளாகியுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டனில் சுமார் 14 ஆண்டுகளாக பழமைவாத கட்சி எனப்படும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் இருந்தது. 2010 முதல் இந்தக் கட்சியின் ஆட்சி பிரிட்டனில் நடந்து வருகிறது.
2019 வரை டேவிட் கேமரூன், தெரசா மே என இரண்டு பிரதமர்கள் ஓரளவு நிலைத்தன்மையுடன் ஆட்சி நடத்தினர். அதன் பின்னர், தற்போது வரை போரிஸ் ஜான்சன், லிஸ் ஸ்டிரஸ், ரிஷி சுனக் என ஐந்து ஆண்டுகளில் பிரிட்டன் 3 பிரதமர்களை சந்தித்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கின் பதவிக்காலம் ஜனவரி மாதத்துடன் முடிவடையும் நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தி கட்சியிலும் ஆட்சியிலும் தனது இருப்பை வலுப்படுத்த ரிஷி சுனக் முடிவு செய்தார். இதன்படி, ஜூலை 4ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது.
![britain parliament](https://images.yourstory.com/cs/18/8eea5c8008d911e9bb473d9d98ed1e05/britainparliament-1720242632155.jpg?fm=png&auto=format)
Change என்கிற வாசகத்தை முன்னெடுத்து உழைப்பாளர் கட்சியான Labour கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது. எதிர்க்கட்சியான உழைப்பாளர் கட்சிக்கே வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக கருத்துகணிப்புகளும் தெரிவித்தன. அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மருக்கு மக்களின் ஆதரவு அதிகளவில் இருந்தது. இதனை தேர்தல் முடிவுகளும் உறுதிப்படுத்தி இருக்கின்றன. 650 மக்களவை தொகுதிகளில் உழைப்பாளர் கட்சி 412 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றியை பெற்றது. இதனையடுத்து கீர் ஸ்டார்டரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்த பிரிட்டன் தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியதும் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உமா குமரன் உலகத் தமிழர்களை பெருமைப் படவைத்துள்ளார். இலங்கை வம்சாவளி தமிழரான இவர், உழைப்பாளர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவர் போட்டியிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியில் மொத்தம் 54.18 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர். அதில், 19,415 வாக்குகளை உமா குமரன் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
![uma kumaran](https://images.yourstory.com/cs/18/8eea5c8008d911e9bb473d9d98ed1e05/uma1-1720242671749.jpg?fm=png&auto=format&w=800)
உமா குமரன், எம்.பி, ஸ்டார்ட்ஃபோர்டு அண்ட் போ
இலங்கை தமிழ்ப்பெண் உமா குமரன்
உமா குமரனின் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். கடந்த 1980-களில் உள்நாட்டு போரின் போது பிரிட்டன் நாட்டில் குடியேறிய புலம்பெயர் தமிழர்களாவர். கிழக்கு லண்டனில் பிறந்து, வளர்ந்த உமா, அங்குள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். தற்போது ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவில் வசித்து வருகிறார்.
அவரது குடும்பம் சுமார் 42 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டனில் வசித்து வருகிறது. இவரது குடும்பத்தினர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறி உள்ளதாகவும், உள்நாட்டு போரினால் தங்களின் வாழ்க்கை நிலை மாறியதாகவும் உமா கூறுகிறார். பூமிக் கோளின் பல்வேறு பகுதிகளில் தங்கள் மக்கள் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
படிப்பை முடித்த பிறகு அரசியல் மீது ஆர்வம் கொண்டு தன்னை பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார் உமா. NHSல் அதிக அளவிலான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பணியில் அமர்த்தி இருக்கிறார்.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான ஐ.நாவின் திட்டமிடல் குழுவில் செயல்பட்டிருக்கிறார். லண்டன் மக்களின் வாழ்க்கையை மாற்றும் திட்டங்களான புதிய வீடுகள், உணவுத் திட்டம் போன்றவற்றை மேயருக்கு வகுத்துக் கொடுக்கும் நபராகவும் உமா இருந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் லேபர் கட்சியுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
![உமா குமரன்](https://images.yourstory.com/cs/18/8eea5c8008d911e9bb473d9d98ed1e05/uma-1720242720197.jpg?fm=png&auto=format&w=800)
பெற்றோருடன் உமா குமரன்
பாலஸ்தீன விவகாரம், காலநிலை மாற்றம், தமிழ் சமூகத்தின் முன்னேற்றம், தொகுதி மக்களுக்கு மலிவு விலையிலான வீடு, விரைவான மருத்துவ சேவை, உள்கட்டமைப்பு சார்ந்து நிதி செலவினம் போன்ற வாக்குறுதிகளை இந்த தேர்தலில் அவர் மக்களிடம் அளித்திருந்தார்.
சமூகம் தனக்கு கொடுத்ததை திருப்பி செலுத்தவே பொது வாழ்விற்கு வந்ததாகக் கூறும் உமா, தன்னுடைய அனுபவங்களை வைத்து கிழக்கு லண்டன் மக்களுக்கு அமைதியான வாழ்வையும் இன்னொரு நம்பிக்கையையும் ஏற்படுத்துவேன் என்று உறுதி அளித்திருந்தார்.
தான் வெற்றி பெற்றால் மக்கள் தங்களை அணுகும் விதத்தில் community-ன் மையப் பகுதியில் ஒரு அலுவலகம் இயங்கும் என்றும் ஸ்டார்ட்ஃபோர்டில் சிறந்த பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே இலக்கு என்றும் பிரச்சாரத்தின் போது தெரிவித்திருந்தார். இந்நிலையில், மக்களின் அபிமானத்தை வென்ற உமா தற்போது வெற்றியும் பெற்றுள்ளார்.
![உமா](https://images.yourstory.com/cs/18/8eea5c8008d911e9bb473d9d98ed1e05/uma4-1720242766778.jpg?fm=png&auto=format&w=800)
தேர்தலில் தான் போட்டியிடுவது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக கூறி இருந்த உமா,
‘புரட்சி என்பது என் ரத்தத்தில் கலந்தது...’ என்று தெரிவித்திருந்தார். அவரது தாத்தா யாழ்ப்பாணத்தின் முதல் தொழிற்சங்க உறுப்பினர்களில் ஒருவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் வாழ்த்து
உமா குமரனின் வெற்றியை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள முதல் தமிழ்ப் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் உமா குமரன் தமிழ் சமுதாயத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்,” என அவர் தெரிவித்துள்ளார்.