'அன்று ஓரங்கட்டப்பட்டவர் இன்று எட்டாத உயரத்தில்' - பிரமிக்க வைக்கும் பிரியங்கா சோப்ரா!
பாலிவுட் அரசியலால் அன்று ஓரங்கட்டப்பட்ட பிரியாங்கா சோப்ரா இன்று உலக அளவில் பிரபலங்களுக்கு சொந்தமான ப்யூட்டி பிராண்டுகளில் பலரையும் பின்னுக்குத் தள்ளி சிறப்பிடம் வகிக்கும் அளவுக்கு உச்சத்தை எட்டியிருப்பது எளிதில் நிகழ்ந்தது அல்ல.
கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவுக்கு சினிமாவில் முகவரி தந்தது தமிழ்ப் படம்தான். 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானார்.
அதன்பின், பாலிவுட்டில் அவரது கிராஃப் எகிறியது. ‘அந்தாஸ்’ என்ற அறிமுக படத்திலேயே அமர்க்களப்படுத்தினார். ‘ஃபேஷன் ’, ‘7 கூன் மஃப்’, ‘பர்ஃபி’, ‘ஐத்ராஸ்’ என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் அட்டகாசமாக நடித்து அப்ளாஸ் வாங்கி முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். அவரது சாதனைகளின் மகுடத்தில் பதித்த வைரக் கல்லாக ஜொலித்தது ‘மேரி கோம்’.
அதன்பின், பாலிவுட் அரசியலால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி வந்த காலக்கட்டத்தில்தான் அமெரிக்கத் தொலைக்காட்சியில் ‘குவான்டிகோ’ (Quantico) என்ற நெடுந்தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் நடித்ததன் மூலம் உலக அளவில் பிரபலமானார். அதன் தொடர்ச்சியாக ஹாலிவுட் திரைப்பட வாய்ப்புகளும் குவிய ஆரம்பித்தன.
இதனிடையே, நடிகரும் பாடகருமான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற மகள் இருக்கிறார்.
ஊதியத்தில் பாலின சமத்துவம்
திரைப்படத் துறையில் ஊதிய விஷயத்தில் பாலின சமத்துவமின்மை என்பது அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது. இதற்கு எதிராக அவ்வப்போது குரல் கொடுப்பது மட்டுமின்றி, இதற்கு தன்னால் ஆன முடிவுகட்ட வேண்டும் என்று முனைப்புடன் நகர்ந்து, அதில் வெற்றியும் கண்டவர் பிரியாங்கா சோப்ரா. ஆனால், இந்த வெற்றியை அடைய அவருக்கு 22 ஆண்டு காலம் தேவைப்பட்டிருக்கிறது.
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர்களான ரூஸ்ஸோ பிரதர்ஸின் ‘சிட்டாடல்’ (Citadel) என்ற புதிய வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் சீரிஸ் மூலம்தான் தன் இலக்கை அடைந்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
இந்தத் தொடர் குறித்து அண்மையில் பேசிய அவர்,
“திரைத் துறையில் 22 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறேன். இதுவரை 70 திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளேன். ஆனால், இப்போதுதான், ‘சிட்டாடல்’ தொடரில் நடிக்கும்போதுதான் என் கரியரிலேயே முதன்முறையாக ஆண் நடிகருக்கு இணையான ஊதியத்தைப் பெற்றிருக்கிறேன்.
இதே அளவிலான உழைப்பையும் நேரத்தையும்தான் மற்ற படங்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஆனா, ஆண் நடிகர்களைவிட குறைவான ஊதியமே கிடைத்தது. அமேசான் நிறுவனம்தான் ‘நீங்கள் முதன்மைக் கதாபாத்திரத்திற்கு இணையாக நடித்துள்ளீர்கள். அதனால், உங்களுக்கு இந்த சம்பளம் உங்களுக்கு நியாயமானது...’ என்று சொல்லி இந்த சம்பளம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நான், ‘நீங்கள் சொல்வது சரியே. இது நியாயமான ஊதியம்தான்’ என்று சொன்னேன்” என்றார் பிரியாங்கா சோப்ரா.
விஜய்யிடம் கற்றுக்கொண்ட பாடம்
தான் கடந்து வந்த பாதையும் என்றுமே மறக்காத பிரியங்கா சோப்ரா, தன் கரியரில் சந்தித்த மனிதர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களைப் பின்பற்றும் பழக்கம் கோண்டவர். இதற்கு உதாரணம்தான் விஜய்யிடம் அவர் கற்றுக்கொண்ட பாடம் ஒன்று.
அதுகுறித்து தனது சுயசரிதை நூலில் அவர் பகிரும்போது,
“திறமையும் அன்பும் மிகுந்த விஜய்யுடன் முதல் படம் நடித்தது மிகப் பெரிய உந்துதலும் வழிகாட்டுதலும் தரும் அனுபவமாக இருந்தது. தங்கள் கண்களுக்கு விஜய் தென்படுவாரா என்று பார்க்கவே பல ரசிகர்கள் தடுப்புகளைத் தாண்டி பல மணி நேரம் ஷூட்டிங் ஸ்பாட் பகுதியில் காத்திருப்பார்கள். வெளிப்புறப் படப்பிடிப்பில் 15 மணி நேரம் உழைத்த பிறகும் தனக்காக காத்திருந்த ரசிகர்களை விஜய் சந்திப்பார். அடுத்த ஒன்றரை மணி நேரம் புகைப்படம் எடுக்கச் செலவிடுவார். விஜய்யின் பணிவும் பெருந்தன்மை என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியன.”
அதன்பின், ”கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து நியூயார்க் பொது நூலகத்தில் 'குவான்டிகோ' படப்பிடிப்பு நடந்தபோது மக்கள் கூட்டமாக அதை வேடிக்கை பார்க்க வந்திருந்தனர். அங்கு எனது உணவு இடைவேளையின்போது மக்களுடன் நான் புகைப்படம் எடுத்துக்கொண்டபோது, எனக்கு முன்னுதாரணமாக இருந்த விஜய்யை நினைத்துக் கொண்டேன்,” என்று பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டிருந்தார்.
சேவையும் வருவாயும்
யுனிசெஃப் அமைப்பின் டானி கே மனிதாபிமான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரான பிரியங்கா சோப்ரா, தன் கரியருடன் சமூக சேவைகளில் அக்கறையுடன் செயல்பட்டு வருபவர். கொரோனா காலத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவியவர். அத்துடன், மக்கள் நலன் சார்ந்த சமூக - அரசியல் கருத்துகளை பொதுவில் பதிவு செய்யத் தயங்காதவர். இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்குதலில் தந்தை - மகன் கொல்லப்பட்டது வரை பல பிரச்சினைகளிலும் தன் குரலைப் பதிவு செய்பவர். பதிவு செய்து வருபவர்.
உலக அளவில் அதிகம் வருவாய் ஈட்டும் இந்திய நடிகராகவும் இப்போது அறியப்படும் பிரியங்கா சோப்ரா, உலக அளவில் பிரபலங்களுக்கு சொந்தமான அழகு பிராண்டுகளில் தனது ‘அனோமலி’ (Anomaly) மூலம் பணக்கார பிராண்ட்டுக்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
‘காஸ்மேட்டிஃபை’ (Cosmetify) நிறுவனம் உலக அளவில் பிரபலங்களுக்குச் சொந்தமான பிராண்டுகளில் பணக்கார பிராண்டுகள் எவை என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரபல பாடகர் ரியானாவின் ஃபென்டி பியூட்டி பிராண்ட் 477.2 மில்லியன் பவுண்டுகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிரியங்கா சோப்ராவின் தலைமுடி பராமரிப்பு பிராண்டான ‘அனோமலி’ 429.9 மில்லியன் பவுண்டுகளுடன் வருவாய் அடிப்படையில் 2-வது பணக்கார பிராண்ட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
அமெரிக்க ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான கைலி ஜென்னர், அமெரிக்க பாடகரான செலினா கோம்ஸ் ஆகியோரின் பிராண்டுகளை பிரியாங்கா சோப்ரா பின்னுக்குத் தள்ளியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.
சரி, விஷயத்துக்கு வருவோம். அன்று பாலிவுட் அரசியலால் தான் ஓரங்கட்டப்பட்டது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்த பிரியங்கா சோப்ரா கூறியது:
“பாலிவுட் திரைத்துறையில் நான் ஓரம்கட்டப்பட்டேன். எனக்கு யாருமே வாய்ப்புக் கொடுக்க முன்வரவில்லை. இதனால்தான் பாலிவுட்டில் இருந்து விலகிவிட்டேன். பாலிவுட்டில் நடக்கும் அரசியல் விளையாட்டு எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை, அந்த நேரத்தில்தான் ஹாலிவுட் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது.”
இதன் தொடர்ச்சியாக, பிரியங்கா சோப்ராவின் உறவினரும் நடிகையுமான மீரா சோப்ரா கூறியதும் இங்கே கவனிக்கத்தக்கது. “இந்தி திரைப்படத் துறையில், வெளியில் இருந்து வந்தவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வெற்றி பெற்றவர்களாகவே இருந்தாலும் இறுதியில் அவர்கள் எப்போதும் ‘அவுட்சைடர்’களாகவே கருதப்படுவார்கள்.
”அங்கே அவர்களின் விதியைப் பின்பற்றவில்லை என்றால், நசுக்கப்படுவதும் துண்டாடப்படுவதும் ஒருபோதும் நிற்கவே நிற்காது. ஆனால், பிரியங்கா சோப்ரா தனது வெற்றியின் மூலம் அவர்கள் முகத்தில் பளார் என அறைந்திருக்கிறார்” என்று குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை.
இதுதான் தரமான சம்பவம்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து தனது கணவருடன் மும்பைக்கு வந்துள்ள பிரியங்கா சோப்ரா, ‘நீதா முகேஷ் அம்பானி கல்ச்சுரல் சென்டர்’ திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த நிகழ்வில் உதடுகளை விரித்து சிரித்தபடியே கரன் ஜோஹருக்கு ஒரு ‘ஹக்’ தந்தார். அந்தச் சிரிப்பும் அணைப்பும் இப்போது வைரல்.
சமீபத்தில் கங்கனா ரணாவத் பகிர்ந்த ஒரு ட்வீட்டே காரணத்தைச் சொல்லும். கங்கனாவின் அந்த ட்வீட் இதுதான்: “தன்னைத் தானே செதுக்கிய ஒரு நடிகையை (பிரியங்கா சோப்ரா) இந்தியாவை விட்டு விரட்டிவிட்டார்கள். கரண் ஜோஹர்தான் அவருக்கு தடை விதித்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.”
தன்னை வீழ்ந்த நினைத்தவர்கள் முன்பு வாழ்ந்து மட்டுமல்ல... வெற்றியடைந்தும் காட்டியதையே பிரியாங்காவின் அந்த ‘ஹக்’ சொல்லும் செய்தி!
IMDb 'டாப் 10 இந்திய திரை நட்சத்திரப் பட்டியல்' - நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்தது எப்படி?
Edited by Induja Raghunathan