[Tech 30] அடையாளம் சரி பார்த்தலுக்கு டச்லெஸ் சேவை அளிக்கும் ஸ்டார்ட் அப்!
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் அடையாளத்தை தொடுதல் இல்லாத முறையில் சோதித்து அறிய உதவும் சேவையை டச்லெஸ் ஐடி பிரைவெட் லிட் வழங்குகிறது. இதற்காக, யுவர்ஸ்டோரி டெக் 30 பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகம் தொடுதலை தவிர்த்து, எல்லாவற்றிலும் நேரடி தொடர்பில்லா முறைக்கு மாறி வரும் நிலையில், அடையாளம் சரி பார்த்தலுக்கும் இதே முறை தேவை என யோசிக்காமல் இருக்க முடியுமா?
டச்லெஸ் ஐடி நிறுவனம் (Touchless ID Private Limited) இது பற்றி யோசித்ததோடு அல்லாமல், இதற்கான தீர்வை IDENTY மென்பொருள் வடிவில் அறிமுகம் செய்துள்ளது. பத்து பேருக்கும் குறைவான குழுவுடன் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட் அப், யுவர்ஸ்டோரியின் டெக் 30ம் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டனி வேந்தன் மற்றும் ஜீசஸ் ஆரகோனால், 2018 ஜூலை மாதம் இந்த ஸ்டார்ட் அப் துவக்கப்பட்டது. ஆண்டனி, 15 ஆண்டு காலம் அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.
நெட்பிளிக்ஸ் மற்றும் யாஹு நிறுவனங்களில் அவர் மென்பொருளாலர் மற்றும் தொழில்நுட்ப தலைவராக பணியாற்றி இருக்கிறார். 2011ல், இந்திய ஸ்டார்ட் அப் சூழலால் ஈர்க்கப்பட்டு நாடு திரும்பினார். ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்த போது, 2017ல் அவருக்கு IDENTY மென்பொருளை உருவாக்கும் எண்ணம் உண்டானது.
"வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்ததோடு, சேவை மையங்களுக்கு பல முறை செல்ல வேண்டியிருந்தது, இது சுவாரஸ்யம் தரும் அனுபவம் அல்ல," என்கிறார்.
இந்த அனுபவம், தனது மொபைல் போன் காமிரா சக்தி மிக்கது என்பதையும் அவருக்கு உணர்த்தியது. ஸ்கேனர் உதவி இல்லாமல் பயோமெட்ரிக் தகவல்களை போன் மூலம் அனுப்பினால் என்ன என யோசித்தார்.
“இது அனைவருக்கும் நிதிச்சேவை சாத்தியமாக்குவதற்கும் உதவும் என நினைத்தார். நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வங்கி செயலிகளில் இணைக்கப்படக்கூடிய மொபைல் செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.
ஸ்பெயினைச்சேர்ந்த ஆரகோனுடன் இணைந்து அடுத்த ஆண்டு IDENTY மென்பொருளை அறிமுகம் செய்தார். ஆரகோன், அதற்கு முன், கலிபோர்னியாவின் ஆடியன்ஸ் நிறுவனம் மற்றும் Agnitio Voice ID நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வகித்திருக்கிறார்.
IDENTY மென்பொருள், ஒருவரின் விரல்களை ஸ்கேன் செய்து, கைரேகை தகவல்களை சேகரிக்கிறது. இந்த மென்பொருள் வாயிலாக விரல்கள் மூலம் சரி பார்த்தல் நிகழ்கிறது. இதற்காக புதிய பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டச்லெஸ்
இந்த சேவை இந்திய நிதிநுட்பத் துறைக்கு நிறைய சாத்தியங்களை கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய நேரடி நிதி வழங்கல் திட்டத்தை இந்தியா மேற்கொள்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம், 5 பில்லியன் டாலர் சேமிப்பு உண்டாகிறது.
மேலும், கொரோனா தொற்று காலம், டச்லெஸ் முறைக்கு பலரை மாற வைத்துள்ளது. எனவே பயோமெட்ரிக் சேவைக்கு தொடர்ந்து தேவை இருக்கும். IDENTY மென்பொருள் (SDK) ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் இயங்குகிறது. இந்த மென்பொருள், C++ மொழியில், ஆழ்கற்றல் மற்றும் கம்ப்யூட்டர் விஷன் நுட்பங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
“கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்பவர் அல்லது தனது அடையாளத்தை உறுதி செய்ய விரும்பும் எவரும். இந்த செயலியை நிறுவி பயன்படுத்தலாம் என்கிறார் ஆண்டனி. இதில் உள்ள ‘liveness’ கண்டறிதல் வசதி முக்கியமானது என்கிறார் அவர். அடையாளத்தை உறுதி செய்பவர் போலி அடையாளத்தை அளிக்கவில்லை என்பதை இது உறுதி செய்கிறது.
நிறுவனம் உறுப்பினர் கட்டண மாதிரியை பின்பற்றுகிறது. அமைப்பில் ஒருங்கிணைத்து, பரிவர்த்தனை அடிப்படையில் கட்டணம் பெறப்படுகிறது. நிறுவனம் நிதித்துறையில் பெரும்பாலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. சுயநிதியில் இயங்கும் நிறுவனம் ஆறு காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது.
தமிழில்: சைபர்சிம்மன்