லீவுக்கு குலதெய்வத்தை கும்பிட வந்த அமெரிக்கவாழ் மாணவி மேற்கொண்ட ஊருணி சீரமைப்புப் பணி!
ஆண்டுக்கொரு முறை தனது குடும்பத்துடன் இந்தியா வந்து, சொந்த ஊரில் குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழக்கமுடைய இவர், தற்போது அப்பகுதியில் மழைநீரை சேமிக்க சீரமைப் பணியை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
மழைக்காலம் நெருங்க நெருங்க மழைநீர் சேமிப்பு குறித்த மக்களின் செயல்பாடுகளும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன. பல்வேறு தரப்பினரும் மழை நீர் சேமிப்புப் பணிக்காக வீடுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்பை ஏற்படுத்துதல், மரங்களை வளர்த்தல், ஏரி, குளங்களை தூர்வாருதல் என களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதில் ஓர்படி மேலே போய் விட்டார் அமெரிக்காவைச் சேர்ந்த 12ஆம் கிரேடு பயின்று வரும் மாணவி காவியா சரவணன். ஆண்டுக்கொரு முறை தனது குடும்பத்துடன் இந்தியா வந்து தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்குச் செல்லும் வழக்கமுடைய இவர், தற்போது அப்பகுதியில் உள்ள ஊருணியைச் சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
மதுரையில் எல்லீஸ் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவர் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள்தான் காவியா சரவணன்.
இவர்களது பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேலவெள்ளூர் கிராமமாகும். இங்குள்ள குலதெய்வம் கோயிலுக்கு நிகழாண்டு வந்த இவர்கள், வழக்கம் போல சாமி கும்பிட்டு விட்டு கிளம்பினர். அப்போதுதான் இப்பகுதியில் நீர்நிலைகளை சரிவர பராமரிக்காததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அறிந்து வருத்தமடைந்தார்.
அப்போது கோயிலுக்கு அருகேயுள்ள ஊருணி புதர்கள் மண்டி, குப்பைக்கூளங்களால் நிறைந்து காண்படுவதை கண்டார். இதனை முறையாக சீரமைத்தாலே இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படும் என்பதை உணர்ந்த காவியா சரவணன், இதுகுறித்து தனது பெற்றோர் அனுமதியுடன், மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டார். மேலும், தனது சொந்த செலவில் இந்த ஊருணியை சீரமைக்கவும் ஆட்சியரிடம் அனுமதி கோரினார்.
ஏற்கெனவே நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர், இதுகுறித்து அப்பகுதி வட்டாட்சியரிடம் அறிக்கை கேட்டார். அவர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் அந்த ஊருணியைத் தூர்வார காவியாவுக்கு அனுமதியளித்தார்.
இதையடுத்து ஊருணியைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக முதலில் வரத்து கால்வாய்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஊருணியில் உள்ள குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டு, கருவேல மரங்கள் வெட்டப்பட்டு, ஊருணி தூய்மையாக்கப்பட்டது.
இதுகுறித்து திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா ஹிந்து தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஏற்கெனவே மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைத்து வருகின்றார். இப்பணியில் ஈடுபட தன்னார்வலர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
”இந்நிலையில் தங்கள் சொந்த ஊருக்கு குலதெய்வம் கோயிலுக்கு வந்திருந்த அமெரிக்கவாழ் தமிழக மாணவி காவியா, அப்பகுதியில் உள்ள ஊருணியை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரினார். அவரது அனுமதியின் பேரில் அந்த ஊருணியில் தூய்மைப் பணிகளும், சீரமைப்புப் பணிகளும் நடைபெற்ற வருகின்றன,” என்றார்.
இவரைப் போல வெளிநாடு வாழ் தமிழகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால் வரும் மழைக்காலத்துக்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் மழைநீரை சேமிக்க ஏதுவானதாக மாறி விடும். பிறகு தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது.