குழந்தைகள், மணமக்கள், மூதாட்டி என நீர் நிலைகளைத் தூர்வார நன்கொடை வாரி வழங்கிய முன்மாதிரி கிராமம்...
அனைவரும் தங்களது கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும். அரசின் உதவியை எதிர்பார்த்து காலவிரயம் செய்வதற்கு பதிலாக தங்களால் இயன்ற அளவுக்கு தங்கள் பகுதி மக்களின் நலனுக்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டால் தண்ணீர் தட்டுப்பாடு ஒழிந்துவிடும்.
தற்போது தமிழகம் எங்கும் தலைவிரித்தாடும் பிரச்னைகளில் மிக முக்கியமானது தண்ணீர் தட்டுப்பாடு. மரம் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை, மழை நீரை முறையாக சேமிப்பதில்லை என மக்கள் மீது ஆயிரம் குற்றச்சாட்டுகள் ஓர்புறம். மழை பெய்தாலும் நீர்நிலைகளில் தங்குவதில்லை ஆற்றில் வெள்ளமாக பாய்ந்து கடலில் சென்று கலந்துவிடுகிறது. நீர்நிலைகளை தூர்வாரவில்லை என அரசாங்கத்தின் மீது குறை கூறுபவர்கள் மற்றொருபுறம்.
இப்படி ஓருவரையொருவர் குறைகூறி ஓர் பயனும் இல்லை. முதலில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நாம்தான் களத்தில் இறங்கவேண்டும் என, அரசை எதிர்பார்க்காமல் தாங்களே நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை முன்னெடுத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள்.
இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ‘கொத்தமங்கலம் இளைஞர்கள் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இப்பகுதியில் உள்ள கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, அனவயல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாகும். ஆனால் இங்குள்ள குளம், ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து நீர்நிலைகள் மற்றும் வரத்து வாய்க்கால்களை முறையாக பராமரிக்காததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து, கடும் தண்ணீர் தட்டுப்பாடு உருவானது. இந்நிலையில் இளைஞர் அந்த ஊர் அமைப்பினர் களமிறங்கினர். கிராம மக்கள் தங்கள் உடல் உழைப்பையும், சிலர் பொருளுதவியும் வழங்கினர். இதை ஆதாரமாகக் கொண்டு கிராமத்தில் உள்ள நீர்நிலைகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நீர்நிலை சீரமைப்புப் பணிக்கு இளைஞர் பட்டாளம் இறங்கி விட்டாலும் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. தகவலறிந்த பல்வேறு தன்னார்வலர்கள் நிதி வழங்கி இளைஞர்களை ஊக்கப்படுத்தினர்.
இந்நிலையில் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்கிற மூதாட்டி, தான் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து, அதில் கிடைத்த ஊதியமாக சேமித்து வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை நீர்நிலைகளை சீரமைக்கும் பணிக்கு வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
இதையடுத்து ஊரில் உள்ள சிறுவர்கள் தங்கள் உண்டியல் சேமிப்புகளை வழங்கி, தங்கள் பங்குக்கு நிதி வழங்கினர். இந்நிலையில், கடந்த ஜுலை 11ஆம் தேதி கொத்தமங்கலத்தில் பாலமுருகன்- கார்த்திகா ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கொத்தமங்கலம் இளைஞர் மன்ற நிர்வாகிகளை மேடைக்கு அழைத்த புதுமண தம்பதிகள்,
தங்கள் பங்காக ரூ.6 ஆயிரத்தை அளித்து, எங்கள் குழந்தைகள் வளரும்போது குளத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். அதற்காக இந்த நீர்நிலை சீரமைப்பு பணிக்காக நிதியை அளிப்பதாக அறிவித்தனர்.
தொடர்ந்து ஜுலை 15ஆம் தேதி நடைபெற்ற முன்னாள் முதலவர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி (கொத்தமங்கலம் (மேற்கு)) மாணவர்கள் தங்கள் பங்களிப்பாக தங்களின் ரூ.50, 100 போன்ற சிறுசேமிப்பு தொகைகளை வசூலித்து ரூ.9,500-யை வழங்கினர்.
இவ்வாறு கிராம மக்கள் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தங்களால் இயன்ற தொகையை நீர்நிலை பராமரிப்பு பணிக்காக வழங்கி, சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை தங்களது அன்பால், சமூக அக்கறையால் திக்குமுக்காட வைத்து வருவது மிகுந்த ஆச்சரியத்துக்கும், பெருமைக்கும் உரிய நிகழ்வாகும்.
இவர்களின் இந்த செயலை பார்த்து அக்கம்பக்கத்தில் உள்ள கிராம மக்களும் தங்கள் கிராமங்களிலும் இதே போன்ற நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, இளைஞர் நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர் கூறியதாவது,
”இப்பகுதியில் முக்கியமான 4 பெரிய குளங்கள் உள்ளன. இந்த குளங்களில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்பட்டன. அவற்றை அகற்றி, குளத்தை தூர்வாரும் பணியை மேற்கொண்டோம். மேலும், குளத்தின் கரைகளை பலப்படுத்த மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இன்னும் 5 குளங்களுக்கு மேல் தூர்வாரும் பணியுள்ளது,” என்றார்.
எங்களது பணியைப் பார்த்த வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலர் நிதியுதவி அளித்தனர். எங்கள் கிராம மக்களும் பெரிதும் ஊக்கமளித்து, அவர்களால் இயன்ற அளவுக்கு நிதியுதவியும் அளித்தனர். 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இப்பணி இனி வரும் காலங்களிலும் தொய்வின்றி நடைபெறும் என்றார்.
இவ்வாறு அனைத்து கிராம மக்களும் தங்களது கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை தூர்வார முன்வர வேண்டும். அரசின் உதவியை எதிர்பார்த்து காலவிரயம் செயவதற்கு பதிலாக தங்களால் இயன்ற அளவுக்கு தங்கள் பகுதி மக்களின் நலனுக்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பாடுபட்டால் தண்ணீர் தட்டுப்பாடு எனும் கோஷங்கள் ஒழிந்து நீர்வளம் பெரும். நீர்வளம் பெருகினாலே விவசாயம் செழித்து நாடு சுபிட்சம் பெறும்.