ஏழைகளின் ‘அன்னபூர்ணி’ - யார் இந்த மஹந்து பூர்ணிமா?
திருப்பதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார்.
திருப்பதியைச் சேர்ந்த 32 வயது பெண்மணி ஒருவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார்.
கொரோனா லாக்டவுனின் போது ஆதரவற்ற முதியவர்கள், வேலை வாய்ப்பின்றி தவித்த கூலித்தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள், ஏன் சாலையோரம் சுற்றித்திரியும் விலங்குகளும், பறவைகளுக்கும் கூட உணவளிக்கும் பழக்கம் அதிகரித்தது. மக்களிடையே உதயமான இந்த நல்ல பழக்கம் வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. தற்போது சாலையில் பல ஆதரவற்றவர்கள் உணவுக்காக கையெந்தி காத்திருந்தாலும், பெரும்பாலானோர் கண்டும் காணாமல் கடந்து செல்கின்றனர்.
ஆனால், ஆந்திராவில் 32 வயதான பெண்மணி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளித்து வருகிறார். வள்ளுவனும், ஒளவையும் சொன்ன பசிப்பிணியை போக்கும் இந்த பெண் யார் என்பது குறித்து பார்க்கலாம்...
யார் இந்த மஹந்து பூர்ணிமா?
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள அன்னமையா பகுதியைச் சேர்ந்தவர் மஹந்து பூர்ணிமா. யோகா பயிற்சியாளரான பூர்ணிமா, நகரில் உள்ள மாநகராட்சி பூங்காக்களில் வகுப்புகள் நடத்தி வருகிறார். இவரது கணவர் ரவிச்சந்திரா அதே ஊரில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.
எம்ஜிஎம் பள்ளியிலும், இடைநிலை படிப்பை திருப்பதியில் உள்ள அரசுக் கல்லூரியிலும் முடித்துள்ள பூர்ணிமா, குடும்பத்தினரின் ஆதரவுடன் ஏழைகளுக்கு உணவளிக்கும் சேவையை செய்து வருகிறார்.
எனது தந்தை சொக்கலிங்கம், உணவை வீணாக்காமல் இருக்கவும், மீதமுள்ள உணவை அண்டை பகுதிகளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்கவும் கற்றுக்கொடுத்தார். இப்போது, சிறு வியாபாரியான என் கணவரின் ஆதரவுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தினசரி இலவச உணவு முகாமைத் தொடர்கிறேன்.
அன்னபூர்ணியாக மாறிய பூர்ணிமா:
பால்ய நண்பர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் அண்டை வீட்டார் ஆகியோருடைய ஆதரவு மற்றும் நிதி உதவியோடு 'நண்பர்கள் உதவும் கரங்கள்' என்ற குழுவைத் தொடங்கிய பூர்ணிமா, தினமும் குறைந்தது 30 பேருக்கு உணவு வழங்குகிறார். தனது வீட்டிலேயே சாதம், பருப்பு, காய்கறிகளைக் கொண்டு உணவு தயார் செய்யும் பூர்ணிமா, மதியவேளைகளில் அதனை கோவில் நகரமான திருப்பதியில் காத்திருக்கும் ஆதரவற்ற ஏழைகளுக்கு கொடுத்து வருகிறார்.
அதுமட்டுமின்றி, பூர்ணிமா திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் எஞ்சியிருக்கும் உணவை சேகரித்து தனது பால்ய தோழியான பவானியின் ஆதரவுடன் சிறு, சிறு பொட்டலங்களைத் தயார் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்கிறார்.
ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் எஞ்சியிருக்கும் உணவைத் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். என் அப்பாவைப் போலவே எனது பிள்ளைகளையும் இதில் பங்கேற்கவைத்துள்ளேன். இப்போது என் குழந்தைகளும் உணவு பொட்டலம் தயாரிப்பது போன்ற வேலைகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவளிப்பதோடு நின்றுவிடாமல், அனாதை இல்லத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றினை தத்தெருக்கவும் மஹந்து பூர்ணிமா திட்டமிட்டு வருகிறார்.
தகவல் உதவி - நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில் - கனிமொழி