பில் கட்டலைனா இன்று இரவுடன் மின் இணைப்பு துண்டிப்பா? - மின்சார வாரியம் எச்சரிக்கை!
மின் கட்டணம் கட்டாததால் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பரவும் தவறான தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின் கட்டணம் கட்டாதவர்களின் வீடுகளில் இன்று இரவு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என பரவும் தவறான தகவலை மக்கள் நம்ப வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மக்களுக்கு எந்த அளவிற்கு தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறதோ அதே அளவிற்கு ஆன்லைன் மோசடி கும்பலுக்கும் தகவல்களை சுரண்டவோ, தவறான தகவல்களை பரப்பவோ பயன்படுகிறது. என்ன தான் சமூக வலைத்தளங்கள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டு, பயனர்களின் தரவுகளை பாதுகாக்க முயன்றாலும் ஹேக்கர்கள் புதிது புதிதாக ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மின்சார வாரியம் குறித்து வாட்ஸ்அப்பில் வேகமாக பரவி வரும் மெசெஜ் போலியானது என்றும், அதனை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“அன்புள்ள நுகர்வோர் உங்கள் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படாததால், உங்கள் மின்சாரம் இன்றிரவு 09:30 மணிக்கு துண்டிக்கப்படும். மின்சார அலுவலகத்திலிருந்து துண்டிக்கப்படுவதை தவிர்க்க தயவு செய்து உடனடியாக எங்கள் மின்சார அதிகாரியைத் தொடர்புகொள்ளவும் அல்லது WhatsApp மின் கட்டண ரசீதை ஸ்கிரீன்ஷாட் அல்லது பில் விவரங்களை அனுப்பவும். (+91XXXXXXXXXX) நன்றி,” என்ற குறுச்செய்தி வாட்ஸ்அப் மூலமாக அனைவருக்கும் பரப்பப்பட்டு வருகிறது.
மின்வாரியம் தொடர்பாக டெக்ஸ்ட் மற்றும் வாட்ஸ்அப் மூலம் மோசடி செய்திகள் பரப்பப்படுவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மின் வாரியத்திலிருந்து மின்கட்டண ரசீது அனுப்பக் கோரி செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றும், மின்சார வாரியத்தின் பெயரால் இது போன்ற தவறான தகவல் வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இத்தகைய செய்திகளுக்கு நுகர்வோர் பதிலளிக்கத் தேவையில்லை என்றும், மின் வாரியம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“மின் வாரியத்திலிருந்து இதுபோன்ற செய்திகள் எதுவும் வெளிவரவில்லை என்றும், அத்தகைய செய்திகளுக்கு நுகர்வோர் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் இதன் மூலம் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் பொதுவாக EB பில்களை ஆன்லைனில் அல்லது EB அலுவலக கவுன்டர்களில் சரியான நேரத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மின்சார வாரியத்தின் பெயரால் இது போன்ற பொய்யான தகவல் வந்தால் கவனத்தில் கொள்ள வேண்டாம்,” எனவும் மின்வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மின் கட்டணம் தொடர்பான மோசடிகளில் ஹேக்கர்கள் ஈடுபடுவதாக புகார்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளது.
பல்வேறு நகரங்களில் உள்ள மின்சார வாரியம் மக்கள் தங்கள் மின் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த நினைவூட்டும் செய்தியை வாட்ஸ்அப் மற்றும் குறுச்செய்திகள் மூலமாக அனுப்பியுள்ளன. இத்தகைய செய்திகள் முன்னதாகவே மக்களுக்கு அனுப்பப்படும் நிலையில், மின்கட்டணம் செலுத்த கடைசி தேதிக்கு மிக நெருக்கமாக குறுச்செய்திகள் அனுப்பப்படுகிறது.
அப்படி வாட்ஸ்அப்பில் வந்த ஒரு எச்சரிக்கை மெசெஜ், தொழில்நுட்பம் பற்றி நன்றாக அறிந்த ஒருநபரையே அலறியடித்துக் கொண்டு போலி கணக்கிற்கு பணம் செலுத்த வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இ-காமர்ஸ் தளங்களில் இனி போலி ஆன்லைன் ரிவ்யூக்களுக்கு ‘செக்’ - அரசின் அதிரடி விதிமுறைகள்!