தடுப்பூசி நல்லதா? 1803ல் விழிப்புணர்வு ஏற்படுத்திய 'தடுப்பூசி மனிதர்’ - சென்னையில் நினைவுச் சின்னம்!
கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தடுப்பூசித் திட்டத்தை முன்னின்று நடத்திய மனிதர் பற்றி தெரிந்து கொள்வோம்.
கொரோனா பெருந்தொற்றால், கடந்த 2020 ஆண்டு பெரும் சோதனையாக அமைந்த நிலையில், பெரும்பாலனோர் மனதில் இருந்த கேள்வி, கொரோனாவுக்கு தடுப்பூசி எப்போது வரும் என்பது தான். அதற்கேற்ப ஆய்வாளர்களும் தீவிரமாகச் செயல்பட்டு வரலாற்றில் இது வரை இல்லாத வகையில் குறுகிய காலத்தில் கோவிட்-19 தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர்.
மருந்துக் கட்டுப்பாடு அமைப்புகளின் பரிசீலனைக்குப்பிறகு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணி உலகின் பல நாடுகளில் துவங்கியிருக்கிறது.
கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் துவங்கியிருக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. Covishield மற்றும் Covaxin ஆகிய உள்நாட்டு தடுப்பூசிகள் தற்போது முதல் கட்டமாக மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டம் என இந்திய அரசின் தடுப்பூசி முயற்சி வர்ணிக்கப்படுகிறது. தடுப்பூசி எதிர்வினை தொடர்பான தகவல்கள் ஆங்காங்கே வெளியானாலும், பொதுவாக தடுப்பூசி செயல்பாடு நம்பிக்கை உரியதாக இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர்.
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நம்பிக்கையை கோவிட்-19 தடுப்பூசி உண்டாக்கி இருக்கும் நிலையில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக மேற்கொண்ட சாதனை மனிதர் பற்றியும், அவரது நினைவை போற்றும் வகையில் சென்னையில் அமைந்திருக்கும் நினைவுச்சின்னத்தையும் தெரிந்து கொள்வோம்.
சாமி நாயக் எனும் தடுப்பூசி விழிப்புணர்வின் முன்னோடி
சாமி நாயக் என சுருக்கமாக அழைக்கப்படும் டாக்டர்.வுதயகிரி சிங்கடிவாக்கம் சாமி நாயக் (Dr Woodayagiri Singadivakkam Samy Nayak) தான் அந்த மனிதர். அந்த காலத்தில் கோமலீஸ்பேட்டை என அழைக்கப்பட்ட பகுதியில் கூவம் நதிக்கரையில் வசித்த குடும்பத்தில், 1760ல் இவர் பிறந்தார். பின்னர் சாமி நாயக் கிழக்கு இந்திய கம்பெனி ராணுவத்தில் சேர்ந்தார். மருத்துவ உதவியாளராக அவர் பணியாற்றினார்.
1803ம் ஆண்டு இந்தியாவில் தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்ட போது, இரண்டாம் கிளைவ், தடுப்பூசித் திட்ட கண்காணிப்பாளராக சாமி நாயக்கை நியமித்தார். தடுப்பூசி என்பது புதிய கருத்தாக்கமாக இருந்ததால், மக்களிடையே குழப்பமும், தயக்கமும் இருந்தது.
ஆனால், மக்கள் தயக்கத்தை போக்கும் வகையில் சாமி நாயக், இப்பகுதியில், தடுப்பூசி திட்டத்தை மும்முரமாக செயல்படுத்தினார். இதனால் தாக்குதலுக்கு உள்ளான போதும் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தியவர், 1829 தடுப்பூசித் துறையில் முதன்மை மருத்துவ அதிகாரியாக ஓய்வு பெற்றார்.
இந்த காலகட்டத்தில் சென்னையில் கூவம் நதி அருகே அவர் இடம் வாங்கிக் குடியேறினார். இந்த இடமே ஹாரீஸ் சாலை என அழைக்கப்படுகிறது. இவரது வீடு அருகே வள்ளல் பச்சையப்பர் வீடு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சாமி நாயக்கின் பேரன் வெங்கட்ராமஜுலு நாயுடு, சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்தார். அவர் நீதிக்கட்சியிலும் முக்கிய அங்கம் வகித்தார். அவரது பேரன் கிரிஷ்ணசாமி நாயுடு புகழ் பெற்ற வழக்கறிஞர் மற்றும் நீதிபதியாக விளங்கினார்.
வெங்கட்ராமஜுலு நாயுடு மாநகராட்சிக்கு வழங்கிய நிலத்தில், டாக்டர்.சாமி நாயக் பூங்கா அமைக்கப்பட்டது. பின்னர் இந்த பூங்காவில் சாமி நாயக் நினைவாக தூண் அமைக்கப்பட்டது. இதுவே சாமி நாயக் நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது.
சென்னையில் லாங்ஸ் கார்டன் மற்றும் ஆதித்தனார் சாலை சந்திப்பில் இந்த நினைவுச் சின்னத்தை காணலாம். அவரது இல்லம் அருகே சாமி நாயக் தெருவையும் காணலாம்.
செய்தி ஆதாரம் : The Hindu | தொகுப்பு: சைபர் சிம்மன்