Vantara திட்டம் - ‘இது லாபத்திற்காக அல்ல; இந்தியாவை வனவிலங்கு பாதுகாப்பு மையமாக மாற்ற விரும்புகிறோம்’ - அனந்த் அம்பானி!
இந்தியாவிலேயே முதன்முறையாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் அறக்கட்டளை இன்று தங்கள் “வந்தாரா (ஸ்டார் ஆஃப் தி ஃபாரஸ்ட்” திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
வன விலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் ரிலையன்ஸ் அறக்கட்டளை 'வந்தாரா' என்ற விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் அறக்கட்டளை இன்று தங்கள் “Vantara (ஸ்டார் ஆஃப் தி ஃபாரஸ்ட்” திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.
முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, நாட்டில் கோவிட் தாக்கம் கடுமையாக இருந்த நேரத்தில் சிந்திக்க தங்களுக்கு நிறைய நேரம் கிடைத்ததாகவும், அப்போதுதான் இந்தத் திட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது, என்றும் தெரிவித்துள்ளார்.
லாப நோக்கமற்ற அமைப்பு
காயமடைந்த, கைவிடப்பட்ட, வேட்டையாடுபவர்களால் பிடிக்கப்பட்ட விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்தல், பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் விலங்குகள் காப்பாற்றப்பட்டு வருகின்றன. இது குஜராத்தில் உள்ள ஜாம்நகர் சுத்திகரிப்பு வளாகத்தில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் பெல்ட்டில் 3000 ஏக்கர் பரப்பளவில் பரவியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் அனந்த் அம்பானி, தனது முழு குடும்பமும் காட்டு விலங்குகள் மீது அன்பும் கருணையும் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் "ZOO" ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த உயிரியல் பூங்கா குறித்து அனந்த் அம்பானி கூறுகையில்,
“மிருகக்காட்சி சாலையின் வளர்ச்சிக்கு எனது பெற்றோர்கள் தான் உத்வேகம். யானைகளுக்கான பராமரிப்பு மையம் அமைத்துள்ளோம். மீட்பு மையத்தில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. மிருகக் காட்சிசாலையில் 100க்கும் மேற்பட்ட வகையான விலங்குகள் உள்ளன. அரிய வகை விலங்குகளை பாதுகாக்கவும் முயற்சித்து வருகிறோம்.”
மிருகக்காட்சிசாலையைப் பார்வையிட எங்களிடம் 3,000-4,000 பேர் கொண்ட குழு உள்ளது. இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். மிருகக்காட்சிசாலையில் சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறோம். இதற்காக குஜராத் அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த திட்டத்திற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது, என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த திட்டத்திற்கு நாங்கள் லாப நோக்கமற்ற அணுகுமுறையை எடுத்துள்ளோம். வனவிலங்கு ஆய்வகங்களின் எதிர்காலம் பிரகாசமாகத் உள்ளதாகவும் கூறினார்.
இது சும்மா டிரெய்லர் தான்:
இந்தத் திட்டத்தில் உங்களுடைய உடன்பிறப்புகள் எவ்வளவு உதவியுள்ளனர்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அனந்த் அம்பானி,
“ரிலையன்ஸ் கிரீன் சிட்டி என் அம்மாவின் இதயத்திற்கு நெருக்கமானது. ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மிருகக்காட்சிசாலையின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய விலங்கு பிரியர்கள். என் தந்தை எங்களை சிறுவயதிலிருந்தே காட்டுக்கு அழைத்துச் செல்வார். என் தாத்தாவுக்குக் கூட காடுகளுக்குச் செல்வது மிகவும் பிடிக்கும். என் தாத்தாவுடன் கிர் காட்டில் பலமுறை சுற்றியிருக்கிறோம். ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களை நடத்தி வரும் எனது சகோதரி, எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளார். இதில் என் அம்மா தான் எனது இன்ஸ்பிரேஷன் என்பது அனைவருக்கும் தெரியும். எங்களின் பெற்றோரின் பங்களிப்பின் காரணமாக எங்களால் இதனை உருவாக்க முடிந்தது,” என்றார்.
இத்திட்டத்தை பிற்காலத்தில் விரிவுபடுத்துவீர்களா, அதற்கான நிலம் மற்றும் நிதி ஆதாரம் உள்ளதா? என்ற CNBC TV 18 கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
“நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றோம். குஜராத் வனத்துறை எங்களுக்கு நிறைய ஆதரவளித்துள்ளது. அவர்கள் ஏற்கனவே இதுபோன்ற நல்ல வேலையைச் செய்கிறார்கள், அது கிர் மற்றும் குஜராத்தில் நன்கு அறியப்பட்டதாகும். நாங்கள் அவர்களுடன் கூட்டு சேர்ந்து, அவர்களின் ஆதரவுடன் பணியாற்றுவோம்.நீங்கள் இங்கு பார்ப்பது ஒரு டிரெய்லர் மட்டுமே. இன்னும் நிறைய வர இருக்கிறது” என்றார்.
வந்தாரா திட்டத்தின் நோக்கம் என்ன?
விலங்கு பராமரிப்பு மற்றும் நலனில் முன்னணி நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், வந்தாரா 3,000 ஏக்கர் நிலத்தை காடு போன்ற சூழலாக மாற்றியுள்ளார். பாதுகாக்கப்பட்ட இனங்கள் செழிக்க இயற்கையான, வளமான, பசுமையான வாழ்விடங்களை உருவாக்குகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் அனந்த் அம்பானி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இவர் ரிலையன்ஸின் முதன்மையான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்திற்கும் தலைமை தாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வந்தாரா சிறந்த விலங்கு பராமரிப்பு நடைமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இது அதிநவீன சுகாதாரம், மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்களை நிறுவியுள்ளது. எனவே, மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
இது புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்கள், இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN), உலக வனவிலங்கு நிதியம் (WWF) போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது.
பல ஆண்டுகளாக இந்த திட்டம் 200க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை மீட்டுள்ளது. காண்டாமிருகம், சிறுத்தைகள் மற்றும் முதலைகள் போன்ற முக்கிய உயிரினங்களை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.
என்னென்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன?
ஒரு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஐசியூ, எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், எண்டோஸ்கோபி, டெண்டல் ஸ்கேலர், லித்தோட்ரிப்சி, டயாலிசிஸ், ஓஆர்1 தொழில்நுட்பம் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பம் உள்ளது.
அறுவை சிகிச்சைகளுக்கான நேரடி வீடியோ கான்ப்ரன்ஸிங் அமைப்பும் உள்ளன. இரத்த பிளாஸ்மாவை பிரிக்கும் தொழில்நுட்பமும் உள்ளது.
இந்த மையத்தில் 2000 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் 43 இனங்கள் பாதுகாக்கப்படுகின்றன.இவற்றில் 7 இனங்கள் இந்தியாவில் அழிந்து வரும் உயிரினங்கள்.
தற்போது 200க்கும் மேற்பட்ட யானைகள், 300க்கும் மேற்பட்ட சிறுத்தைப்புலிகள், புலிகள், சிங்கங்கள் மற்றும் ஜாகுவார் இனங்கள் உள்ளன. மேலும், மான் போன்ற 300க்கும் மேற்பட்ட சைவ உயிரினங்களும், முதலை, பாம்பு, ஆமை என 1200க்கும் மேற்பட்ட ஊர்வனவும் உள்ளன.