மதிப்புமிக்க EY உலக தொழில்முனைவோர் விருது வென்று வெள்ளையன் சுப்பையா சாதனை!
என்.ஆர்.நாராயண மூர்த்தி, உதய் கோடக், கிரண் மஜும்தார் ஷாவுக்குப் பிறகு EY-ன் மதிப்புமிக்க விருதைப் பெற்ற இந்திய தொழில்முனைவர் வெள்ளையன் சுப்பையா.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் (TII) செயல் துணைத் தலைவரும், சோளமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் தலைவருமான வெள்ளையன் சுப்பையா 2024-ம் ஆண்டுக்கான எர்னஸ்ட் & இளம் தொழிலதிபர் விருதான EY உலகத் தொழில்முனைவோர் விருதைப் பெற்றுள்ளார்.
மதிப்புமிக்க இந்த விருதைப் பெறுவது உலகளாவிய வணிக சமூகத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு தொழில்முனைவோர் இந்த விருதைப் பெறுவது இது நான்காவது முறையாகும். இந்த குறிப்பிடத்தக்க சாதனை தொழில்முனைவோர் உலகில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
தொலைநோக்கு கொண்ட தலைமை பண்பு மற்றும் உத்திகளால் டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் சோளா ஃபைனான்ஸ் இரண்டையும் முன்னெப்போதும் இல்லாத வெற்றியை பெறவைத்தற்காக சர்வதேச அரங்கில் வெள்ளையன் சுப்பையாவுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
![vellayan](https://images.yourstory.com/cs/18/d26dafc008d911e9bb473d9d98ed1e05/vellayan-1718170074544.jpg?fm=png&auto=format&w=800)
தொழில்முனைவோர் பயணம்....
இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற சென்னையைச் சேர்ந்த சுப்பையா, தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறன்களில் உறுதியான அடித்தளத்துடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார்.
ஆரம்ப காலக்கட்டத்தில் புகழ்பெற்ற மெக்கின்சி & கம்பெனியில் பணிபுரிந்த போது உத்திகள் வகுக்கவும், அதனை செயல்படுத்துவதிலும் நிபுணத்துவம் பெற்றவர், இதன்பின், சோளமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் தொடங்கி, தனது குடும்ப வணிகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
சவாலான காலகட்டத்தில் சோளா நிறுவனத்தை வழிநடத்தி, சந்தை மூலதனத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய வைத்தது, நிதிச் சேவைத் துறையில் சோளா ஃபைனான்ஸை நிலைபெற வைத்து என தலைவராக செயல்பட்ட காலத்தில் தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, டியூப் இன்வெஸ்ட்மென்ட் ஆஃப் இந்தியா (TII) நிறுவனத்தில் தலைமை பொறுப்பை ஏற்று, நிறுவனத்தின் பிசினஸ் மாடலை புதுப்பித்து நிறுவனத்தின் ஷேர் மார்க்கெட் விலையை அதிகப்படுத்தினார்.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, புதுமை மற்றும் நிலைத்தன்மை... இதுவே சுப்பையாவின் தலைமைத்துவ பாணி.
டியூப் இன்வெஸ்ட்மென்ட் வளர்ச்சியில் அவரின் உத்திகளே முக்கிய கருவியாக இருந்தது. அவரது வழிகாட்டுதலின் கீழ், டியூப் இன்வெஸ்ட்மென்டின் துணை நிறுவனமான CG பவர், இந்தியாவின் முதல் அவுட்சோர்ஸ் செமிகண்டக்டர் மற்றும் சோதனை வசதியை உருவாக்கத் தொடங்கியது.
இந்த முன்முயற்சியானது, தொழில்துறையை முன்னேற்றுவதற்கும் உலகளாவிய செமிகண்டக்டர் சந்தையில் இந்தியாவை ஒரு முக்கிய பங்காக நிலைநிறுத்துவதற்கும் உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம்...
தனது திறமைக்கு அங்கீகாரமாக EY உலகத் தொழில்முனைவோர் விருதைப் பெற்றதும் நன்றி தெரிவித்த சுப்பையா,
தனக்கு முந்தைய தலைமுறையினரால் தன்னில் விதைக்கப்பட்ட தொழில்முனைவோர் உணர்வை வெளிப்படுத்தினார். மேலும், இந்த மைல்கல்லை அடைவதில் தனது குழுவின் கூட்டு முயற்சிகள் மற்றும் தனது குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததையும் நெகிழ்வுடன் கூறினார்.
விருதினை தாண்டி மற்றொரு அங்கீகாரமாக, EY இந்தியாவின் தலைவர் ராஜீவ் மேமானி, குளோபல் தலைவர் கார்மைன் டி சிபியோ ஆகியோர் சுப்பையாவின் சாதனையைப் பாராட்டி பேசுகையில், வாடிக்கையாளர் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அவரின் தலைமைத்துவ பாணி உள்ளிட்ட சுப்பையாவின் தனித்திறமைகளை கூறி வெகுவாக சிலாகித்தனர்.
![vellayan](https://images.yourstory.com/cs/18/d26dafc008d911e9bb473d9d98ed1e05/vellayan-1718170353614.jpg?fm=png&auto=format&w=800)
உலகளாவிய தாக்கம்:
சுப்பையாவின் வெற்றி, இந்தியாவின் தொழில் முனைவோர் திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. 47 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 5,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட EY விருது விழாவில், சுப்பையா தனது தொழில் முனைவோர் மனப்பான்மை, நோக்கம் சார்ந்த முன்முயற்சிகள், வளர்ச்சிப் பாதை மற்றும் தொழில்துறையில் தாக்கம் ஆகியவற்றுக்காக தனித்து நின்றார். உலக அரங்கில் அவருக்கு கிடைத்த அங்கீகாரம், இந்திய தொழில்முனைவோரின் திறமைகளுக்கு ஒரு சான்றாக அமைந்தது.
பாரம்பரியத்தின் தொடர்ச்சி:
என்.ஆர்.நாராயண மூர்த்தி, உதய் கோடக் மற்றும் கிரண் மஜும்தார் ஷா ஆகியோரின் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக அவர்களுக்கு அடுத்து EY-ன் மதிப்புமிக்க விருதைப் பெற்ற இந்திய தொழில்முனைவோராக வெள்ளையன் சுப்பையா உள்ளார்.
அவருக்கு கிடைத்த அங்கீகாரம் தொழில்முனைவோர் உலகில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. சுப்பையாவின் வெற்றி ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, எதிர்கால இந்திய தொழில்முனைவோருக்கு உத்வேகம் தரும் விஷயமாகும்.
டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் சோளமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கோ லிமிடெட் ஆகியவற்றில் அவரது தலைமைப் பண்பானது புதுமை, நிலைத்தன்மையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறது.
இரண்டு நிறுவனங்களையும் புதிய உயரங்களை நோக்கிக் கொண்டு சென்று தொலைநோக்கு பார்வை கொண்ட தொழில்முனைவோராக வணிக உலகில் தன்னை வலுவாக நிலைநிறுத்தி வருகிறார். அவரது கதை தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் தரக்கூடியது.
Edited by Induja Raghunathan