கொரோனா நிவாரணத்திற்கு கோலி- அனுஷ்கா ரூ.2 கோடி நன்கொடை!
கூட்டு நிதி மேடையான கெட்டோ மூலம் வீராட் கோலி மற்றும் அனுஷ்கா கோவிட்-19 நிவாரணத்திற்காக நிதி திரட்டி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் வீராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அன்ஷ்கா ஷர்மா, கோவிட்-19 பெருதொற்றிற்காக ரூ.7 கோடி நிதி திரட்டும் திட்டத்திற்காக ரூ.2 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.
கோலி மற்றும் அனுஷ்கா, கூட்ட நிதி திரட்டும் மேடையான கெட்டோ இணையதளம் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.
"விராட் கோலி மற்றும் அனுஷ்கா, இந்தியாவில் கோவிட்-19 நிவாரணத்திற்காக ரூ.7 கோடி திரட்டத் திட்டமிட்டுள்ளனர்,” என இந்த தம்பதி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ketto இணையதளம் மூலம், #InThisTogether எனும் பொருளில் நிதி திரட்டும் திட்டத்தை துவக்கி, அதற்கு ரூ.2 கோடி தங்கள் சார்பில் அளித்துள்ளனர்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கெட்டோ (Ketto ) இணையதளத்தில் ஏழு நாட்கள் அமலில் இருக்கும். இதன் மூலம் கிடைக்கும் நிதி, ஏசிடி கிராண்ட்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்படும். மருத்துவ ஆக்சிஜன், மருந்துகள் மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும்.
"நம்முடைய நாட்டின் வரலாற்றில் சந்தித்திராத கடினமான காலத்தை எதிர்கொண்டு வருகிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு, இயன்றவரை அதிக மக்களை காப்பதை நம் தேசம் எதிர்பார்க்கிறது. கடந்த ஆண்டு முதல் ஏற்பட்டு வரும் துயரத்தை கண்டு நானும், அனுஷ்காவும் திகைத்து போயுள்ளோம்,” என்றும் குறிப்பிட்டுள்ளார் கோலி.
"பெருந்தொற்று காலத்தில் அதிகமானவர்களுக்கு உதவ முயன்று வருகிறோம். இப்போது இந்தியாவுக்கு உங்கள் ஆதரவு அதிகம் தேவைபப்டுகிறது,” என்றும் கோலி இந்த அறிக்கையில் கூறியுள்ளார். இதை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
"உதவி தேவைப்படுபவர்களுக்கு நிதி திரட்டும் இந்த திட்டம் மூலம் கணிசமான நிதி திரட்ட முடியும் என நம்பிக்கைக் கொண்டுள்ளோம். கஷ்டத்தில் இருக்கும் சக மனிதர்களுக்கு நாட்டு மக்கள் உதவுவார்கள் என நம்புகிறோம். நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம். இந்த நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்வோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல், மருத்துவக் கட்டமைப்பு திணறுவதை பார்த்தால் வேதனையாக இருக்கிறது என அனுஷ்கா கூறியுள்ளார்.
"கோலி மற்றும் அனுஷ்கா போன்ற செல்வாக்கு மிக்கவர்கள், இந்த நிதி திரட்டுலுக்கு குரல் கொடுப்பது இலக்கை அடைய உதவும். இந்திய ஸ்டார்ட் அப் சூழல் சார்பாக, ஏசிடி கிராண்ட்ஸ் அவர்களுக்கு நன்றி சொல்கிறது,” என ஏசிடி கிராண்ட்ஸ் செய்தி தொடர்பாளர் காயத்ரி யாதவ் கூறியுள்ளார்.
செய்தி – பிடிஐ