Techsparks 2024: 'செல்வத்தை உருவாக்க செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்' - Wow! Momo நிறுவனர் சாகர்!
"செல்வத்தை உருவாக்க நீங்கள் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் தனியாக உங்களது இலக்கினை அடைய முடியாது" என்ற வாவ்! மோமோ ஃபுட்ஸின் இணை நிறுவனரான சாகர் தர்யானி, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாட்டில் 50 மருத்துவமனைகளை திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
"செல்வத்தை உருவாக்க நீங்கள் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நீங்கள் தனியாக உங்களது இலக்கினை அடைய முடியாது..." என்ற வாவ்! மோமோ ஃபுட்ஸின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாகர் தர்யானி, அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாட்டில் ஏழைமக்களுக்காக 50 மருத்துவமனைகளை திறப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக 'டெக் ஸ்பார்க்ஸ் 2024' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக் நிகழ்வான 'Techsparks 2024'-ன் 2ம் கட்ட நிகழ்வில், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், தொழில்முனைவோர்களான ஹர்ஷ் மரிவாலா, அனுப்பம் மிட்டல் உட்பட தொழில்துறை சார்ந்த பல பிரமுகர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற வாவ் மோமோ நிறுவனத்தின் இணை நிறுவனரான சாகர் தர்யானி, நிறுவனம் அடைந்த முக்கிய மைற்கல்கள் உட்பட அவர்களது செயல்பாடுகளை பகிர்ந்து, அப்லாஸ்களை அள்ளினார்.
ஏனெனில், தொழிலாளர்களின் நலனில் முக்கியத்துவம் செலுத்தி வரும் வாவ் மோமோ, வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நாட்டில் 50 மருத்துவமனைகளை திறக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதன் முதல் படியாக, அவர்கள் நிறுவனத்தை துவக்கிய தாயிடமான கொல்காத்தாவில் முதல் மருத்துவமனையை இவ்வாண்டிலே திறக்க உள்ளதாக தெரிவித்தார்.
"வாவ் மோமோவின்" வாவ் வளர்ச்சி!
கொல்கத்தாவில் உள்ள ஸ்பென்சர்ஸ் டெய்லி அவுட்லெட்டில் 'ஷாப்-இன்-ஷாப்' வடிவமைப்பைப் பயன்படுத்தி, சாகர் தர்யானியும் அவரது இணை நிறுவனர் பினோத் ஹோமாகையும் ரூ.30,000 முதலீட்டில் மோமோ பிராண்டைத் தொடங்கினர். இன்று, துரித உணவு சங்கிலியாக பிரம்மாண்டமாய் உருவெடுத்து 35 நகரங்களில் 630 விற்பனை நிலையங்களாக வளர்ந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் மலேசியாவின் இறையாண்மை சொத்து நிதியிலிருந்து (Khazanah Nasional Berhad) ரூ.350கோடி நிதி திரட்டியுள்ளது. மேலும், ட்ரக்ஸன் (
) தரவுகளின்படி, 152 மில்லியன் டாலர் நிதியுதவியை நிறுவனம் பெற்றுள்ளது.2023ஆம் நிதியாண்டில் ரூ.400 கோடி வருவாய் ஈட்டியதாக நிறுவனம் கூறியுள்ளது. 2024ம் நிதியாண்டில் ரூ.500 கோடியைத் தாண்டி தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளில் அவர்களது இருப்பை நிலைநிறுத்தும் என்று நம்பிக்கையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
"எனது நிறுவனத்தில் 20 சதவீதப் பங்குகளை என்னுடைய ESOPகள் மற்றும் இணை நிறுவனர்களான எனது ஊழியர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதை பெருமையுடன் கூறுகிறேன்," என்றார் சாகர்.
அவர்களது ஆரம்ப நாட்களை நினைவுக்கூர்ந்த தர்யானி, இரு இணை நிறுவனர்களும் ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மிச்சப்படுத்த தினமும் மோமோக்களை விற்றுவிட்டு காலியான ஜோல்னா பைகளுடன் நடந்தே வீடு திரும்புவோம் என்றார். அன்று சேமித்த ஒவ்வொரு ஒரு ரூபாயும் இன்று 10 ரூபாய் சம்பாதிப்பதற்காக என்றார்.
"இதன் வாயிலாகவே நீங்கள் ஒரு இலாபகரமான வணிகத்தை உருவாக்க இயலும். வணிகம் மந்தமாக இருக்கக்கூடாது. வியாபாரத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும். வியாபாரத்தில், வாடிக்கையாளர்கள்தான் கடவுள். அப்படித்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இந்த ஆண்டில் முதல் மருத்துவமனையை எங்களது ஆதிப்புள்ளியான கொல்கத்தாவில் தொடங்கவுள்ளோம். 25 படுக்கைகளைக் கொண்ட எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக மருத்துவமனையைத் திறக்கிறோம்," என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2019ம் ஆண்டை வணிகத்தின் "சிறந்த ஆண்டு" என்று குறிப்பிட்டார். வாவ்! மோமோ ஃபுட்ஸ் டாப்லைனில் ரூ.180 கோடி வசூலித்ததுடன் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் மூலம் பணம் திரட்டியதாக கூறினார்.
"டைகர் நிறுவனம் தொழில்நுட்ப வணிகங்களில் மட்டுமே முதலீடு செய்கிறது என்ற கட்டுக்கதையை உடைத்தோம். கோவிட் தொற்றுக்கு முன்பு வரை நிறுவனத்திற்கு எல்லாம் நன்றாகவே இருந்தது. லாக்டவுன் காலத்தில் 300 அவுட்லெட்டுகளில் 60 மட்டுமே திறந்திருந்தன. நிறுவனத்தில் 3,000 பணியாளர்கள் இருந்தனர். இருப்பினும், தொற்றுநோய் வாவ்! மோமோ ஃபுட்ஸின் 2.0 வெர்ஷனை உருவாக்கியது.”
முன்னதாக, பத்தில் ஒரு பங்கு வணிகம் மட்டுமே டேக்அவே டெலிவரி மூலம் இருந்தது. ஆனால் தொற்றுநோய் கிட்டத்தட்ட எல்லா ஆர்டர்களையும் ஆன்லைன் டெலிவரிக்கு மாற்றியது. இணையவழி வணிகம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டோம்.
நுகர்வோருக்கு நேரடியாக வணிகம் (டி2சி) செய்வது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம். 'க்ளிக்கு செலவு' என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டோம். பொதுமுடக்கக் காலத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம், என்று தர்யானி, நிறுவனம் எவ்வாறு தன்னைத்தானே புதுப்பித்து, ஒரு தடையை ஒரு வாய்ப்பாக மாற்றியது என்பதை விளக்கினார்.
’வாவ் மோமோ’ ஃபுட்ஸ் நிறுவனமானது தலைமை நிதி அதிகாரியாக ஷா மிஃப்தார் ரஹ்மான் மற்றும் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரியாக முரளி கிருஷ்ணன் ஆகிய இரண்டு கூடுதல் இணை நிறுவனர்களை அணியில் இணைத்துள்ளது. இணை நிறுவனர்களை நிரப்பு திறன்களுடன் பெறுவது முக்கியம் என்ற தர்யானி,
"உங்களின் மனநிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்கள் இணை நிறுவனரின் திறன்கள் உங்களிடமிருந்து வேறுபட்டது. முற்றிலும் எதிர்மாறான ஒரு இணை நிறுவனரை பெறுங்கள். ஏனெனில் சமநிலை பெற இது மிக மிக முக்கியமானது," என்று அவர் கூறினார்.
தமிழில்: ஜெயஸ்ரீ
கிரிக்கெட் முதல் ஸ்டார்ட்அப் வரை - Techsparks மும்பையில் சுவாரஸ்ய விஷயங்களைப் பகிர்ந்த தினேஷ் கார்த்திக்!