சரியும் ஐபோன் விற்பனைக்கு காரணம் என்ன?
ஐபோன் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது, இதற்கான காரணம் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஐபோனுக்கான வாடிக்கையாளர் தேவையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளதை அடுத்து, ஐபோன் விற்பனை சரிவுக்கான காரணம் என்ன எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஐபோன் விற்பனை குறைந்து வருவதால் ஆப்பிள் நிறுவனம் கவலை அடைந்துள்ளது. அண்மையில், ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் 9 பில்லியன் டாலர் அளவுக்கு குறையும் என நிறுவன சி.இ.ஓ டிம் குக் தெரிவித்திருந்தார்.
முதலீட்டாளர்களுக்கு எழுதிய கடிதத்தில் இதற்கான காரணத்தையும் குக் குறிப்பிட்டிருந்தார். வாடிக்கையாளர்கள் தங்கள் போனை அப்கிரேட் செய்வதற்கான காலம் அதிகமாகி வருவதால், புதிய ஐபோன்களுக்கான தேவை குறைந்திருப்பதாக அவர் கூறியிருந்தார்.
குறிப்பாக சீனாவில் தேவை குறைந்திருப்பதாகவும் கூறிய குக், ஐபோன் மாற்று பாட்டிரிக்கான செலவு குறைந்திருப்பதையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்வதால், விடுமுறைக்கால விற்பனை எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐபோன் பாட்டரி தொடர்பான சர்ச்சை 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெடித்தது நினைவிருக்கலாம். ஆப்பிள் நிறுவனம் பழைய ஐபோன்களின் செயல்திறனை திட்டமிட்டு குறைப்பதாக அப்போது குற்றம்சாட்டப்பட்டது,. புதிய ஐபோன் மாதிரிகளை வாங்க வைப்பதற்கான உத்தி இது என்றும் பலரும் குற்றம்சாட்டினர்.
இந்த சர்ச்சயை அடுத்து, ஓராண்டு காலத்திற்கு மாற்று பாட்டரியை 79 டாலருக்கு பதிலாக 29 டாலருக்கு வாங்கிக் கொள்ளலாம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது. இதன் காரணமாக ஐபோன் 6 அல்லது பழைய மாதிரி ஐபோன் வைத்திருந்தவர்கள் குறைந்த விலையில் புதிய பாட்டரி வாங்கிக்கொள்ளலாம். இதுவும் புதிய ஐபோன் விற்பனைக் குறைய ஒரு காரணம் என கருதப்படுகிறது.
முதல் காலாண்டுக்காக வருவாய் 9 பில்லியன் டாலர் குறைவாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக குக் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் விற்பனை 89 பில்லியன் டாலர் முதல் 93 பில்லியன் டாலராக இருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. தற்போது இது 84 பில்லியன் டாலராக மாற்றி மதிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஆப்பிள் நிறுவன பங்குகள் விலையில் 10 சதவீதம் சரிந்தது. எனினும், ஐபோன் தவிர்த்த மற்ற பிரிவுகளில் நிறுவனம் ஆண்டு அடிப்படையில் 19 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்பாக ஐபோன் விளங்கும் நிலையில் அதன் விற்பனையில் தேக்கம் நிகழ்ந்திருப்பதாக வெளியான செய்தி முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.
ஆசிய நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளில் விலை உயர்ந்த புதிய ஐபோன்களை விற்பது சவாலாக இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. டாலரின் தடுமாற்றம் மற்றும் சர்வதேச நாணய சந்தையின் போக்கும் ஐபோன் விற்பனையை பாதித்துள்ளது.
ஆண்ட்ராய்ட் போன்களுக்கான சந்தை அதிகரித்து வருவதும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தும் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு ஐபோன் சந்தைப்பங்கு ஒரு சதவீதமாக குறைந்தது.
இதனிடையே இந்திய பயனாளிகள் பலர், ஐபோன் விற்பனை குறைவுக்கு அதன் கட்டுப்படியாகாத விலையே காரணம் என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
’ஆப்பிள் மீது தான தவறு இருக்கிறது.” என ஒரு பயனாளி குறிப்பிட்டுள்ளார். ’ தேவைக் குறைவு என்று காரணம் சொல்லி பிரச்சனை வேறு எங்கோ இருப்பதாக சொல்வதை நிறுத்துங்கள். ஆப்பிள் சந்தைக்கு கட்டுப்படியாகாத விலையை நிர்ணயித்துக்கொண்டுள்ளது. நான் ஐபோன் வைத்திருக்கிறேன். புதிய ஐபோன் மாற்ற வேண்டும் என்றாலும் அதன் விலை அபதமாக இருக்கிறது,” என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஐபோனுக்கு பதில் நான் பிக்சல் 3 வாங்கினேன், ஐபோன் விலை அபத்தமாக இருக்கிறது,“ என்று தெரிவித்துள்ளார். இன்னொரு பயனாளி, ”6 டி(ஒன்பிளஸ் ஒன்) அற்புதமான போனாக இருக்கிறது. அதோடு ஐபோனில் பாதி விலை தான். புதிய ஐபோனை வாங்க எந்த காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஆப்பிளின் வருவாய்க்கு ஐபோன் முக்கிய பங்காற்றும் நிலையில், விற்பனைக் குறைவு சவாலை நிறுவனம் எப்படி எதிர்கொள்கிறது என பார்க்க வேண்டும். குறிப்பாக ஐபோன் கைக்கு எட்டாத விலையில் உச்சத்தில் இருக்கிறது எனும் இந்தியர்களின் கருத்தை அது கவனத்தில் கொள்கிறதா என்று பார்க்க வேண்டும்.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில் சைபர்சிம்மன்