'Friends of Police' அமைப்பு என்றால் என்ன? இதைத் தொடங்கியது யார்?
நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை- மகன் விசாரணை மரணம் விவகாரத்தில் தொடர்புடையதாக சொல்லப்படும் ‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பு குறித்து ஒரு பார்வை:
கொரோனாவுக்கு எதிராக தேசமே போராடி வரும் நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளத்தில், வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் காவல்துறை விசாரணையில் இருந்த போது மர்மமான முறையில் இறந்த சம்பவம் திடுக்கிட வைத்தது.
காவல்துறையினர் விசாரணையின் போது கொடூரமாக தாக்கியதால் தான், இருவரும் இறந்ததாக கூறப்படுவது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த சம்பவம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவத்தில் ‘ஃபிரன்ஸ்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்தை சிபிசிஐடி போலிசார் விசாரித்து வரும் நிலையில், இந்த சம்பவத்தின் போது, Friends of Police அமைப்பைச்சேர்ந்த ஆறு பேருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
வியாபாரிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக பிரண்ட்ஸ் ஆப் போலில் அமைப்பைச்சேர்ந்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள் என சிபிசிஐடி போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ஃபிரன்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை காவல் துறையினர் தங்கள் பணிக்காக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது என்றும் தற்காலிகமாக இந்த அமைப்பை தடை செய்திருப்பதாகவும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாத தகவல் வெளியானது.
இந்த அமைப்பினரை ரோந்து பணியின் போது அழைத்துச்செல்லக்கூடாது, குற்றவாளிகளை பிடிக்க அழைத்துச் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friends of Police (FoP) அமைப்பு என்றால் என்ன? இதை தொடங்கியது யார்?
காவல்துறை பணியில் உதவுவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’. இந்த அமைப்பு 1993ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒரு சமூக காவல்துறை முன்னெடுப்பு என்றும், இது பொதுமக்கள் மற்றும் காவல்துறையை நெருக்கமாகக் கொண்டு வரும் அரசு கூட்டு அமைப்பு என்றும் இந்த அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
FOP என்று சுருக்கமாக அழைக்கப்படும் Friends of Police அமைப்பு, டாக்டர்.பிரதீப் வி பிலிப்ஸ் என்ற ஐபிஎஸ் அதிகாரி முன்வைத்த ஒரு ஐடியா ஆகும். இவர் 1993ல் இளம் அதிகாரியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் எஸ்பி ஆக இருந்தபோது, இந்த அமைப்பை முதன்முறையாக நிறுவினார். ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் செயல்பாட்டு வெகுவாக பாராட்டைப் பெற்றதை அடுத்து, அடுத்த ஒரே ஆண்டில் இது தமிழகம் எங்கும் எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டது.
டாக்டர்.பிரதீப் வி பிலிப்ஸ் ‘Friends of Police’ என்ற தலைப்பில் ஆய்வுகள் செய்து, முனைவர் பட்டமும் பெற்றார். இவரின் இந்த முனைவுக்கு பல பரிசுகளும், பாராட்டுகளும் கிடைத்தது. 2002ம் ஆண்டு Her Majesty the Queen's Award for Innovation in Police Training and Development விருதும், 15ஆயிரம் பவுண்டுகள் பரிசும் பெற்றார்.
பொதுமக்கள் மத்தியில் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, குற்றங்களை குறைப்பது இந்த அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை செயல்பாட்டில் வெளிப்படையான தன்மையை இந்த அமைப்பு கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
FOP- ‘Connecting the Police and the People at their Best' - அதாவது காவல்துறையை, மக்களுடன் சிறந்த வழியில் இணைக்கும் பாலமாக ஃப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் இருக்கும் என்ற கோட்பாடுடன் தொடங்கினார் டாக்டர்.பிரதீப்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த அமைப்பு தற்போது இருக்கிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தன்னார்வலர்கள் என்பதால் ஊதியம் கிடையாது.
தமிழகத்தில் 4,000க்கும் மேல் இளைஞர்கள் இந்த அமைப்பில் இணைந்து காவல்துறைக்கு உதவி வருவதாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்தை சரிசெய்வது, மூத்த காவலர்களுடன் உதவிக்குச் செல்வது, திருவிழா காலங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவது, குற்றங்களைத் தடுப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஆகிய பணிகளை செய்து வருகின்றனர்.
காவலர்களாகும் கனவில் உள்ளவர்களும் இந்த அமைப்பில் இணைந்து செயல்படுவதாக கூறப்படுகிறது.
எனினும், சாத்தான்குளம் விசாரணை மரணத்தில், இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
இந்த அமைப்பு நல்ல நோக்கத்துடன் துவக்கப்பட்டாலும் இதில் சேர்ந்தவர்களில் சிலர், காவல்துறையுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் புகார்கள் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் இந்த அமைப்பைச்சேர்ந்த சிலர் பொதுமக்களிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
எனினும், இந்த சம்பவத்தில் தங்கள் தன்னார்வலர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுரை: சைபர் சிம்மன், இந்துஜா