'எனக்குள் இருந்த திறமையை வெளிப்படுத்தியவர் ஏஆர் ரஹ்மான்' – பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி!
ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் பிரபல பின்னணிப் பாடகி ஜோனிதா காந்தி தனது குழந்தைப்பருவம், கனடாவில் வளர்ந்த காலகட்டம், பாலிவுட் அறிமுகம், ஏஆர் ரஹ்மான் உடனான அறிமுகம் என பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
விஷால் சேகரின் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் ஜோனிதா காந்தி பாடிக் கேட்டிருப்பீர்கள். ஆனால் இவர் பாலிவுட்டில் பின்னணிப் பாடகியாக உருவாவதற்கு வெகு நாட்கள் முன்னரே தனது 17 வயதில் ஆகாஷ் காந்தியுடன் இணைந்து வீடியோக்களை பதிவிட்டு யூட்யூப் நட்சத்திரமாக வைரலானவர். இவர் இந்தியாவில் பிறந்து கனடாவில் வளர்ந்தார். ஹைவே, மன்மர்ஜியான், ஓகே கண்மணி, சர்கார், பேட்மேன் போன்ற திரைப்படங்களில் பாடல்கள் பாடி பிரபலமானவர். ஏ.ஆர் ரஹ்மானின் ‘ரௌனக்’ ஆல்பத்திலும் இடம்பெற்றுள்ளார்.
ஜோனிதா; கனடாவில் வளர்ந்த காலகட்டம் குறித்தும் தனது இசைப் பயணம் குறித்தும் ஹெர்ஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
அந்த நேர்காணலின் தொகுப்பு இதோ:
ஹெர்ஸ்டோரி: நீங்கள் வளர்ந்த பருவம் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஜோனிதா காந்தி: எனக்கு ஒரு வயதாகும் முன்பே என் குடும்பம் டெல்லியில் இருந்து கனடாவிற்குக் குடிபெயர்ந்தது. எனவே நான் கனடாவிலேயே வளர்ந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்னரே மும்பைக்கு மாற்றலானேன். சுகாதார அறிவியல் மற்றும் வணிகப் பிரிவில் பட்டம் படித்தவாறே பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டதும் கரோக்கே பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்ந்ததும் மறக்க முடியாத அனுபவங்கள்.
ஹெர்ஸ்டோரி: உங்களுக்கு சிறு வயதிலேயே பாடுவதில் ஆர்வம் இருந்ததா? இசையில் முறையான பயிற்சி எடுத்துக்கொண்டீர்களா?
ஜோனிதா காந்தி: சிறுவயதிலேயே பாட்டு பாடியவாறும் நடனம் ஆடியவாறும் வீட்டை வலம் வருவேன். ஆரம்பத்தில் எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். என் அப்பா எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்தார். நான் வாய்ப்பாட்டு பயில ’அண்டாரியோ கன்சர்வேட்டரி ஆஃப் மியூசிக்’கில் சேர்த்தார். அத்துடன் ஓரிரு முறை இந்தியா வந்த போது ஹிந்துஸ்தானி வகுப்புகளுக்கும் சென்றேன். பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மேற்கத்திய பாரம்பரிய வாய்ப்பாட்டு பயிற்சி வகுப்பிற்கும் சென்றேன்.
ஹெர்ஸ்டோரி: கனடாவில் வளர்ந்த அனுபவம் எப்படி இருந்தது? பாடும் திறமையை எவ்வாறு மெருகேற்றிக்கொண்டீர்கள்?
ஜோனிதா காந்தி: கனடாவில் வளர்ந்ததால் மேற்கத்திய இசை, இந்திய இசை என இரண்டு இசை வகைகளுக்கும் பரிச்சயமாகும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு இசை வகைகளுமே என்னுடைய பாடல் பாணிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் இவை இரண்டையும் இணைத்துப் பாடுவேன். என்னுடைய படிப்புடன் பாடலும் சேர்ந்தே பயணித்தது எனக்கு பலனளித்தது. இரண்டையும் முறையாக சமன்படுத்தவும் முடிந்தது.
ஹெர்ஸ்டோரி: நீங்கள் ஏன் பாடுவதைத் தொழிலாகத் தேர்வு செய்தீர்கள்?
ஜோனிதா காந்தி: முழு நேரப் பாடகியாகக் களமிறங்குவதற்கு முன்பு படிப்பை முடிக்கத் தீர்மானித்தேன். ஒருவேளை தொழில்முறையாகப் பாடுவது பலனளிக்காத சூழலில் உதவும் என்பதால் படிப்பை முதலில் முடித்தேன். என் வாழ்க்கையில் கட்டாயம் இசை இடம்பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதன் பிறகு யூடியூபில் பதிவிடத் துவங்கினேன். சலீம் மெர்சண்ட், ஏஆர் ரஹ்மான், அமிதாப் பச்சன் போன்ற பிரபலங்களின் அங்கீகரிப்பு கிடைத்தது.
இந்தியாவில் உள்ள பாடகர்கள் இந்தத் தளத்தை அதிகம் பயன்படுத்தாத சமயத்திலேயே நான் பயன்படுத்தத் துவங்கினேன். பட்டப்படிப்பை முடித்ததும் இசைப்பிரிவில் தொழில்முறையாக செயல்படத் தீர்மானித்தேன்.
ஹெர்ஸ்டோரி: உங்களை பிரபலமாக்கிய முதல் பாடல் குறித்து சொல்லுங்கள்.
ஜோனிதா காந்தி: மக்களிடையே என்னை பிரபலமாக்கிய முதல் பாடல் ’டிஷூம்’ திரைப்படத்தில் வெளியான ’சௌ தரஹ் கே…’ என்கிற பாடல். இது ப்ரீதம் உடனான முதல் பாடல் என்பதால் அதிக உற்சாகமளித்தது.
ஹெர்ஸ்டோரி: பாலிவுட்டில் எப்போது, எவ்வாறு அறிமுகமானீர்கள்?
ஜோனிதா காந்தி: சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் டைட்டில் பாடல் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானேன். விஷாலின் ஸ்டூடியோவில் சவுண்ட் என்ஜினியராக இருந்த என்னுடைய நண்பர் அபிஷேக் கத்தக்கை சந்திக்கவே ஸ்டூடியோ சென்றிருந்தேன். அப்போது விஷால் தத்லானியை ஸ்டூடியோவில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஹெர்ஸ்டோரி: இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளீர்கள். உங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஜோனிதா காந்தி: வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்த அனுபவம் தனித்துவமானதாக இருந்தது. ஒவ்வொருவரது பாணியும் பணிபுரியும் விதமும் மாறுபட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்த பயணத்தில் பாட்டு தொடர்பாக மட்டுமின்றி என்னைப் பற்றியும் என்னுடைய குரலைப் பற்றியும் அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது.
ஹெர்ஸ்டோரி: ஏஆர் ரஹ்மானுடன் பணிபுரிந்த அனுபவம் எப்படி இருந்தது?
ஜோனிதா காந்தி: ஏஆர் ரஹ்மான் அவர்களுடன் பணிபுரிவது ஒரு மிகப்பெரிய பாக்கியம் என்றே கருதுகிறேன். அவரது இசைக் குடும்பத்தில் பங்கேற்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவருடன் பணிபுரிவதன் மூலம் ஏராளமாகக் கற்றுக் கொள்ளமுடியும். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.
எனக்குள் இருந்த திறமையை அவர்தான் வெளிக்கொணர்ந்தார். ஒரு பாடகியாகவும் பார்வையாளர்கள் முன் நேரடியாக நிகழ்ச்சி நடத்துபவராகவும் மாற்றினார்.
ஹெர்ஸ்டோரி: சுயாதீன இசைப் பிரிவு குறித்த உங்களது கருத்து என்ன? இந்தத் துறையில் ஏதேனும் செயல்படுத்த விரும்புகிறீர்களா?
ஜோனிதா காந்தி: சுயாதீன இசைப் பிரிவு வளர்ச்சியடைந்து வருவதைப் பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது. பாலிவுட்டிற்கு வெளியே இருக்கும் கலைஞர்களின் திறமையிலும் கவனம் செலுத்தப்படுகிறது. எனினும் இந்த வளர்ச்சி மேலும் அதிகரித்தால் பாலிவுட்டில் இருக்கும் பின்னணிப்பாடகர்கள் போன்றே கலைப்பிரிவில் உள்ள தனிநபர்களும் பிரபலமாக அதிக வாய்ப்பு கிடைக்கும்.
என்னைப் பொறுத்தவரை எனக்கு சுயாதீன இசையை ஆராய்வதில் விருப்பம் உள்ளது. இதற்கு முன்பு சில சுயாதீன இசை நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளேன். எதிர்காலத்தில் மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்புகிறேன்.
ஹெர்ஸ்டோரி: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இசையமைப்பாளர்களின் பாணி உங்களுக்கு உந்துதலளித்துள்ளதா?
ஜோனிதா காந்தி: ஒவ்வொரு நாளும் பல்வேறு இசையமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்களைக் கண்டு உந்துதல் பெறுகிறேன். சில சமயம் அவர்களது இசை உந்துதலளிக்கும். மற்றுமொரு சமயம் அவர்களது பணி நெறிமுறைகள் உந்துதலளிக்கும். நான் எப்போதும் அனைத்தையும் உள்வாங்கிக்கொள்ள முயற்சி செய்வேன்.
ஹெர்ஸ்டோரி: நீங்கள் எந்த விஷயத்தில் அதிக விருப்பத்துடன் ஈடுபடுவீர்கள்?
ஜோனிதா காந்தி: இசை அல்லது பணி தொடர்பான விஷயங்களைத் தவிர நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நேரம் செலவிடுவேன். இருப்பினும் குடும்பத்தினர் அனைவரும் ஒரே பகுதியில் இருக்கும் சமயத்தில் அவர்களுடன் நேரம் செலவிடவே விரும்புவேன்.
ஹெர்ஸ்டோரி: இசைத்துறையில் இசையமைப்பாளர்களாகவும் பாடலாசிரியர்களாகவும் பெண்கள் அதிகம் பங்களிக்கவில்லை என நினைக்கிறீர்களா?
ஜோனிதா காந்தி: பாலிவுட் துறையில் நிச்சயமாக ஆண்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண் இசையமைப்பாளார்களோ அல்லது பாடலாசிரியர்களோ இல்லை.
ஹெர்ஸ்டோரி: உங்களது வருங்கால திட்டம் என்ன?
ஜோனிதா காந்தி: இந்த சமயத்தில் குறிப்பிட்ட நோக்கங்களைப் பட்டியலிடுவது கடினம். ஆனால் இசையின் புதிய பிரிவுகளை நிச்சயம் ஆராய விரும்புகிறேன். தொடர்ந்து பல்வேறு இசை வகைகளையும் மொழிகளையும் ஒன்றிணைத்து விரிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன்.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில் : ஸ்ரீவித்யா