ஊரடங்கு சமயத்தில் மாரடைப்பு 50% குறைந்தும், சிகிச்சை தாமதிப்பால் உயிரிழப்பு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்!
’உலக இருதய தினத்தையொட்டி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நடத்திய ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் கோவிட் ஊரடங்கு சமயத்தில் இருதய நோய் தொடர்பான முடிவுகள் வந்துள்ளன.
தற்போதைய பொதுமுடக்க அமலாக்கத்தின் மூன்றுமாத கால அளவில் தீவிர மாரடைப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்திருக்கிறது.
’உலக இருதய தினம்’ அனுசரிக்கப்படுவதையொட்டி இது தொடர்பாக பேசிய மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இருதயவியல் சிகிச்சை நிபுணர்கள் இத்தகவலை தெரிவித்திருக்கின்றனர்.
கோவிட் தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தினால் மருத்துவச் சிகிச்சையைப் பெறுவதில் ஏற்படுகின்ற தாமதத்தின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீவிர மாரடைப்பு நோயாளிகள் மத்தியில் இறப்புவிகிதமும் அதிகரித்திருப்பது அறியப்பட்டுள்ளது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். என். கணேசன் இது தொடர்பாக பேசுகையில்,
“கோவிட்-19 பரவல் நிகழும் இக்காலகட்டத்தில் சிகிச்சைக்காக வரும் தீவிர மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதை நாங்கள் காண்கிறோம்,” என்றார்.
இந்த கோவிட்-19 மற்றும் பொதுமுடக்கம் அமலிலுள்ள 3 மாத காலஅளவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணைிக்கை 355. 2019 ஆம் ஆண்டில் இதே காலஅளவின்போது மாரடைப்புக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 820.
எங்களது இந்த புள்ளிவிவரத் தகவலானது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் நடத்தப்பட்ட இருதயவியல் சார்ந்த கணக்கெடுப்புகளோடு ஒத்துப்போகிறது. இந்த இரு பிராந்தியங்களிலும் அவர்களது நாடுகளில் தீவிர மாரடைப்பு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் 50-60% குறைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
“முன்பே இருதய நோய் இருப்பது கண்டறியப்படாத நபர்களுக்குக் கூட கோவிட் தொற்றின் காரணமாக, இதற்கு முன்பு வெளிப்படாமல் இருந்த இருதய பாதிப்பு அறிகுறிகளை வெளிப்படக் கூடும். இருதய நாள அடைப்புகள், தொற்று, காய்ச்சல் மற்றும் உறுப்பு வீக்கமுள்ள நபர்களிடம் இதன் காரணமாக இருதய நாளங்கள் பாதிப்படைந்து சீர்குலையக்கூடும்.
இதற்கும் கூடுதலாக, தொற்று ஏற்பட்ட நபர்களின் ஒரு துணைப்பிரிவு இருக்கிறது. இவர்களில் சிலர் இதற்கு முன்புவரை ஆரோக்கியமாக இருந்திருந்தாலும் கூட ரைவஸ் நேரடியாக இருதயத்தில் தொற்றை ஏற்படுத்துவதனால் வீக்கமும், அழற்சியும் ஏற்படுகின்றன.
இந்த வகையான அழற்சியும், வீக்கமும் இருதய துடிப்பு தொந்தரவுகளுக்கும் மற்றும் இருதய தசை சேதத்திற்கும் வழிவகுக்கக்கூடும்,” என்று கூறினார். மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையின் இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் எஸ். செல்வமணி பேசுகையில்,
“தீவிர மாரடைப்பு நேர்வுகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. வீட்டிலேயே தங்கியிருப்பதால் குறைவான மனஅழுத்தம், குறைந்திருக்கும் காற்றுமாசு, தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தினால் மருத்துவச் சிகிச்சைக்கு வர தயங்கும் நபர்கள், மருத்துவமனைக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதியின்மை ஆகியவை இக்காரணங்களுள் சிலவாகும்.
எனினும், இந்த கோவிட்-19 – பொதுமுடக்க காலத்தின்போது, மாரடைப்பு ஏற்பட்டதற்குப் பிறகு உரிய சிகிச்சையைப்பெற நோயாளிகள் தாமதிப்பதன் காரணமாக மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து காணப்பட்டிருக்கிறது.
இருதயவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ஆர். சிவகுமார் மேலும் பேசுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றானது பல வழிகளில் இருதய பிரச்சனைகளைத் தூண்டக்கூடும். பரவக்கூடிய நுரையீரல் நோயாக இருக்கும் இது, ஆரோக்கியமான நபர்கள் மற்றும் ஏற்கனவே இருதய நோய் பாதிப்புள்ள நபர்கள் ஆகிய இருதரப்பினரிடமும் இருதயத்தில் பாதிப்பையும், அழுத்தத்தையும் விளைவிக்கிறது.
இரண்டாவதாக, வழக்கமான மாரடைப்புகளை விளைவிக்கின்ற அடைப்புகள் அவர்களது சிரைகளில் இல்லையென்றாலும் கூட மாரடைப்பு போன்று வெளிப்படுகின்ற இருதய சேதத்தை இந்நபர்கள் பெறக்கூடும். ஆக்சிஜன் இல்லாமல் இருதய தசை தவிக்கின்றபோது இது நிகழக்கூடும்; ஆக்சிஜனின் தேவைக்கும் ஆக்சிஜன் கிடைக்கப்பெறும் நிலைக்குமிடையே உள்ள பொருத்தமின்மையின் காரணமாக கோவிட்-19 தொற்றுள்ள நபர்களிடம் இது ஏற்படக்கூடும்,” என்று கூறினார்.
இந்த ஆண்டு உலக இருதய தினத்தின் கருப்பொருள்,
“இருதய நாள நோய்களை (CVD) தோற்கடிக்க உங்கள் இருதயத்தை பயன்படுத்துங்கள்” என்பதாகும்.
உலகளவில் மொத்த உயிரிழப்புகளில் 31 சதவிகித பங்களிப்போடு கொண்டு மனிதர்களிடம் இறப்பிற்கான முதன்மை காரணமாக இருதயநாள நோய்கள் உருவெடுத்திருக்கின்றன. பெரும்பாலான உயிரிழப்புகள் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் (பக்கவாதம்) காரணமாக ஏற்படுகின்றன.
2015 ஆம் ஆண்டில் உலகளவில் தொற்று அல்லாத நோய்களின் காரணமாக, உரிய காலத்திற்கு முன்பே நிகழ்ந்த 17 மில்லியன் இறப்புகளுள் 82 % குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் நிகழ்ந்திருக்கிறது. இதில் 37% உயிரிழப்புகளுக்கு இரத்தநாள நோய்களே காரணமாக இருந்திருக்கின்றன.
எனினும், நம்பிக்கையின் ஒளிக்கீற்று தென்படுகிறது. புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற உணவுமுறை, உடற்பருமன், மதுபானத்தை தீங்கு விளைவிக்கும் முறையில் பயன்படுத்துவது போன்ற இடர் காரணிகளை கவனத்தில் கொண்டு அவற்றை தவிர்ப்பதன் வழியாகவும் மக்கள்தொகை முழுவதிற்குமான செயல்உத்திகளை பயன்படுத்துவதன் வழியாகவும் பெரும்பாலான இருதய நாள நோய்கள் வராமல் தடுக்கமுடியும்.