பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கான் அகதிப்பெண் பெங்களுருவில் இலவச மருத்துவ சிகிச்சை பெற இந்தியா வருகை!
சர்பத் குலா என்ற அந்த ஆப்கானிய அகதிப் பெண்ணின் புகைப்படம், 1984 இல் நேஷனல் ஜியோக்ராபிக் இதழில் வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. அந்த பெண் பெங்களுருவிற்கு மருத்துவ சிகிச்சைக்காக வரவுள்ளார் என்பது புதிய தகவல்.
சில வாரங்களுக்கு முன் சர்பத், பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்டார். போலி அடையாள ஆவணங்களை வைத்திருந்த காரணங்களுக்காக அவரை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியது. 40 வயதாகும் சர்பத், தற்போது ஹெபாடிடிஸ் சி நோயால் பாதிக்கப்பட்டு மேலும் பல உடல்நலக்கோளாறுகளுடன் அவதிப்பட்டு வருகிறார்.
மனிதாபிமான அடிப்படையில், பெங்களுருவில் உள்ள நாராயணா மருத்துவமனை அவருக்கு இலவச சிகிச்சை வழங்குவதாக அறிவித்துள்ளனர் என்று ஸ்க்ரோல் செய்தி வெளியிட்டது. ஆப்கானின் தூதர் ஷைதா அப்தாலி தனது நன்றியை தெரிவித்து ட்வீட் செய்தார். அதில்,
“உலக பிரபலமான சர்பத் குலா விரைவில் இந்தியா வந்து தனது சிகிச்சையை மேற்கொள்வார். இலவசமாக அவருக்கு சிகிச்சை வழங்கவுள்ள இந்திய நாட்டிற்கு நன்றி. நீங்கள் உண்மையான நண்பர் என்று காட்டியுள்ளீர்கள்,” என்று பதிவிட்டார்.
பளிச்சிடும் பச்சை கண்களை கொண்ட சர்பதின் முகத்தை பிரபல புகைப்படக்கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி படம் பிடித்து, ஆப்கானிஸ்தான் அகதிகள் பிரச்சனை எழுந்தபோது வெளியிட்டிருந்தார். சிறிய பெண்ணாக இருந்த சர்பத், அப்போது ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி, பல ஆண்டுகளை பாகிஸ்தானில் கழித்தார். இவர் மூன்று குழந்தைகளின் தாயார் ஆவார் என்று பிடிஐ செய்தி வெளியிட்டது.
அண்மையில் பாகிஸ்தான் நடத்திய போலி ஆவண கணக்கெடுப்பில், சர்பத் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆய்வுகளின் படி, பாகிஸ்தானில் தற்போது சுமார் 30 லட்சம் ஆப்கான் அகதிகள் வசிப்பதாக தெரியவந்துள்ளது. இவர்கள் பெரும்பாலானோரிடம் போலியான ஆவணங்களும், போலி பாஸ்போர்ட்டும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கட்டுரை: Think Change India