செப்டம்பர் மாதத்தில் 22 லட்சம் இந்திய கணக்குகள் தடை- வாட்ஸ் அப் அறிக்கையில் தகவல்!
செப்டம்பர் மாதம் தனது மேடையில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய கணக்குகளை தடை செய்துள்ளதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், செப்டம்பர் மாதம் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்குகள் தடை செய்யப்பட்டதாகவும், 560 முறையீடுகள் பெறப்பட்டதாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் அரசிடம் சமர்பித்துள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் மாதம் 2,209,000 இந்திய கணக்குகள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது. இந்திய கணக்கை +91 என துவங்கும் போன் எண் கொண்டு அடையாளம் காண்பதாகவும் தெரிவித்துள்ளது.
"என்கிர்ப்ஷன் வசதி கொண்ட மெசேஜிங் சேவைகளில், தவறான பயன்பாட்டை தடுக்கும் செயல்பாட்டில் வாட்ஸ் அப் முன்னணியில் விளங்குகிறது. பயனர்களின் நலன் காக்க, கடந்த ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு விஞ்ஞானிகள், வல்லுனர்கள், செயல்முறையில் உள்ளிட்ட வசதிகளில் சீராக முதலீடு செய்து வந்துள்ளோம்,” என வாட்ஸ் அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஐடி சட்டம் 2021 விதிகளின் படி, வாட்ஸ் அப் தனது நான்காவது அறிக்கையை சமர்பித்துள்ளது,
"இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கை பயனர்களிடம் இருந்து பெறப்பட்ட புகார்கள் மற்றும் அவை தொடர்பான நடவடிக்கை உள்ளிட்ட விவரங்களைக் கொண்டுள்ளதோடு, தனது மேடை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வாட்ஸ் அப் மேற்கொண்ட நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ் அப், தடை செய்யப்பட்ட கணக்குகளில் 95 சதவீதம் தானியங்கி மொத்த செய்திகளை அனுப்பியதற்காக தடை செய்யப்பட்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்தது. சர்வதேச அளவில் வாட்ஸ் அப் மேடையில் மாதந்தோறும் 80 லட்சம் கணக்குகள் தடை செய்யப்படுகின்றன.
பயனர்களிடம் இருந்து 560 புகார்கள் வந்ததாகவும், இதில் 309 தடை கோரிக்கை என்றும் வாட்ஸ் அப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கால கட்டத்தில் 51 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை வாட்ஸ் அப் அக்கவுன்ட்ஸ் ஆக்ஷன்ட் எனக் குறிப்பிடுகிறது. இது கணக்கு தடை செய்யப்படுவதை அல்லது ஏற்கனவே தடை செய்யப்பட்ட கணக்கு மீண்டும் செயலுக்கு வருவதை குறிக்கிறது.
மேலும், புகார்கள் பெறப்பட்டு, சீராய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்பட்ட கணக்கின் கீழ் பலவித காரணங்களினால் பட்டியலிடப்படாமல் இருக்கலாம். பயனர்கள் தங்கள் கணக்கை அணுக உதவி கோருவது, தடை செய்யப்பட்ட கணக்கை மீண்டும் பயன்படுத்த அனுமதி கோருவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.
ஆகஸ்ட் மாதம் இருபது மில்லியனுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகள் தடை செய்யப்பட்டன. மே மாதம் அமலுக்கு வந்த புதிய ஐடி விதிமுறைகள், 5 லட்சம் பயனாளிகளுக்கு மேல் கொண்ட தொழில்நுட்ப மேடைகள், மாதந்தோறும் பயனர்கள் புகார்கள் தொடர்பான அறிக்கையை சமரிக்க வேண்டியது அவசியமாகிறது.
செய்தி- பிடிஐ | தொகுப்பு: சைபர் சிம்மன்