ஆத்மநிர்பர் பாரத் ஆப் சேலஞ்சில் வெற்றிப் பெற்ற 8 செயலிகள் தொகுப்பு!
புதுமையான செயலிகளை உருவாக்குவதற்கான ஆத்ம நிர்பார் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட செயலிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த செயலிகள் பற்றி ஒரு பார்வை:
'ஆத்ம நிர்பர் பார்த்' ஆப் சேல்ஞ்ச் போட்டியில் வெற்றி பெற்ற செயலிகளை குறிப்பிட்டு பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, கம்ப்யூட்டர் விளையாட்டுகளை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் செயலி உருவாக்கம் மற்றும் புதுமையாக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆத்ம நிர்பார் பாரத் செயலி போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அலுவலக செயல்திறன், சமூக ஊடகம், இ-கற்றல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் செயலிகள் சமர்பிக்கப்பட்டன.
இப்போட்டியில் 7,000க்கும் மேற்பட்ட செயலிகள் பங்கேற்ற நிலையில், ஒவ்வொரு பிரிவில் இருந்தும் புதுமையாக்க அடிப்படையில் சிறந்த ஆப்’கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்நிலையில், அண்மையில் நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் நிகழ்த்திய மன்கிபாத் உரையில் பிரதமர் நரேந்திர மோடி இந்த போட்டியில் பங்கேற்ற செயலிகள் பற்றி குறிப்பிட்டார்.
ஆத்மநிர்பர் செயலி போட்டியில், 7,000 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றதாகவும், இவற்றில் பல ஆப்’கள் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை என்று பிரதமர் குறிப்பிட்டார். மேலும், இந்தியாவில் கம்ப்யூட்டர் விளையாட்டுகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
“கம்ப்யூட்டர் விளையாட்டுகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் அவற்றை விளையாடுகின்றனர். ஆனால் பெரும்பாலனோர் மேற்கு நாடுகளில் உருவாக்கப்பட்ட கேம்கள் ஆகும். இந்தியாவை மையமாகக் கொண்ட விளையாட்டுகளை நாம் உருவாக்க வேண்டும். இதிலும் நாம் தற்சார்பு பெற வேண்டும்,” என பிரதமர் கூறினார்.
அத்மநிர்பர் போட்டியில் பங்கேற்ற செயலிகளை பாராட்டிய பிரதமர், கிட்ஸ் லேர்னிங் செயலி ‘kutuki kids', இந்தியாவுக்கான டிவிட்டர் சேவையான 'koo' உள்ளிட்ட ஆப்’களையும் குறிப்பிட்டு பாராட்டினார். டிக்டாக் செயலிக்கு மாற்றான ‘சிங்காரி’ செயலி மற்றும் ‘ஆஸ்க்சர்கார்’ ஆப் உள்ளிட்ட செயலிகளையும் பிரதமர் பாராட்டினார்.
இந்தியாவில் புதுமையாக்கத்திற்கான ஊக்கமாக அமையும் ஆத்மர்நிர்பர் பாரத் செயலி போட்டியில் பங்கேற்ற செயலிகளில் கவனத்தை ஈர்த்த செயலிகள் பற்றி ஒரு கண்ணோட்டம்:
குட்டுகி கிட்ஸ் லேர்னிங் ஆப் (Kutuki Kids Learning App)
செயலி போட்டியில் இ-கற்றல் பிரிவில் வெற்றி பெற்ற இந்த ஆப், ஸ்னேகா சுந்தரம் மற்றும் பாரத் பெவினஹல்லி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ளனர். மழலையர்களுக்கான இந்த செயலி கதைகள் மற்றும் பாடல்கள் மூலம் அவர்கள் எளிதாகக் கற்றுக்கொள்ள வழி செய்கிறது.
வடமொழியில் ஆர்வம் உள்ளவர் என பொருள்படும், கவுட்டுகா எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட இந்த செயலி, குட்டு எனும் சிறுவன், கி எனும் சிறுமி மற்றும் மிங்கு எனும் யானை ஆகிய கதாப்பாத்திரங்கள் மூலம் கதைகள் சொல்கிறது.
இந்த செயலியை 1 லட்சம் அம்மாக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவின் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் உள்ள 130+ மழலையர் பள்ளிகள் ‘kutuki kids' ஆப்’பை பயன்படுத்துகின்றனர். அங்கன்வாடிகளிலும் இது பயனில் உள்ளது.
இந்திய டிவிட்டர் (Koo)
சமூக ஊடகப் பிரிவில் வெற்றி பெற்ற செயலி ‘கூ’ (Koo), டிவிட்டர் போன்ற குறும்பதிவு சமூக ஊடகச் சேவையான இது, இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பதிவுகளை வெளியிட வழி செய்கிறது.
இந்திய மொழிகளில் எளிதாக பயன்படுத்தக்கூடிய குறும்பதிவு சேவை வேண்டும் எனும் நோக்கத்துடன், அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயங்க் பிடாவாட்கா இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். உள்ளூர் மொழிகளுக்கான கேள்வி பதில் சேவையான வோகல் சேவையை உருவாக்கியவர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செயலிக்கு இதுவரை 2 லட்சம் டவுன்லோட்கள் உள்ளது. கூகிள் ப்ளேஸ்டோரில் டாப் 10 செயலிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.
டிக்டாக் மாற்று (Chingari)
சிறிய வீடியோக்களை பகிர உதவும் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகு, இந்திய செயலியான 'சிங்காரி' கவனத்தை ஈர்த்தது. சுமித் கோஷ் மற்றும் பிஸ்வத்மா நாயக் உள்ளிட்டோர் இணைந்து இந்த aap'pai உருவாக்கினர்.
கூகுள் பிளேஸ்டோரில் பத்து மில்லியன் முறைக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி, 25 மில்லியனுக்கும் மேல் பயனாளிகளைk கொண்டுள்ளது. இந்த செயலி டியோக்களை விநியோகிப்பதிலும் புதுமையான வழியை பின்பற்றுகிறது.
டிக்டாக் தடைக்குப் பின் இந்த ஆப் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அதோடு பல மொழி பயனர்களும் இதை பயன்படுத்தத்தொடங்கியுள்ளனர்.
ஆஸ்க்சர்கார் (AskSarkar)
ஆஸ்க்சர்கார் செயலி, சாட்பாட் எனப்படும் அரட்டை மென்பொருள் வகையைச் சேர்ந்தது. பெங்களுரூவைச் சேர்ந்த கோரோவர் நிறுவனம் இந்த செயலியை உருவாக்கியுள்ளது. அரசு சேவை தொடர்பான தகவல்களை தேடும் போது பயனுள்ள மற்றும் பொருத்தமான பதில்களை எளிதான கேள்வி பதில் வடிவில் அளிக்கும் வகையில் இந்த அரட்டை மென்பொருள் செயலி செயல்படுகிறது.
ஆத்மநிர்பர் ஆப் சேலஞ்சில் வெற்றிப்பெற்ற 24 செயலிகளில் இதுவும் ஒன்று. தற்போது இச்செயலி 12 இந்திய மொழிகளில் ஆடியோ, வீடியோ வடிவில் உள்ளது. இதுவரை 7 லட்சம் பயனர்களை இந்த ஆப் கொண்டிருப்பதாக நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்டெப்செட்கோ (StepSetGo)
உடல்நலம் மற்றும் சுகாதாரப் பிரிவில் வெற்றி பெற்ற ‘ஸ்டெப்செட்கோ’ செயலி, பயனாளிகள் நடை அளவை கணக்கிட்டு, அவர்கள் மேலும் ஊக்கம் பெற உதவுகிறது. நண்பர்களான மிசால் துக்காரியா, அபய் பாய் மற்றும் சிவஜீத் காட்கே இந்த செயலியை உருவாக்கியுள்ளனர்.
பயனாளிகள் தங்கள் உடல்நலத்தில் கேளிக்கை சார்ந்த முறையில் ஈடுபாடு கொள்ள இந்த செயலி உதவுகிறது. பயனாளிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு நாணயம் பெற்று அதை செயலியின் சந்தையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஃபிட்னெஸ் ஆப் ஆன இது தொடங்கிய நாள் முதலே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மாதாமாதம் இயற்கையாகவே புதிய பயனர்களைப் பெற்று வரும் StepSetGo, தற்போது 6 மில்லியன் பயனர்களை 1.5 ஆண்டில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கான வரைபடம் (MapmyIndia Move)
தில்லியைச்சேர்ந்த ‘MapmyIndia’ நிறுவனம் MapmyIndia Move செயலியை உருவாக்கியுள்ளது. இந்தியாவுக்கான வரைபட சேவையான இந்த செயலி, உள்ளூர் கண்டறிதலுக்கான புதுமையான தீர்வை வழங்குகிறது.
டிஜிட்டல் வரைபட சேவைகள் பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், உள்ளூர் சார்ந்த தகவல்களை சிறந்த முறையில் இந்த செயலி கொண்டுள்ளது.
MapmyIndia தொழில்நுட்பம் மற்றும் மேப்கள் 5ஆயிரத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் 80% கார்கள் இந்தியாவில் இந்த மேப் சேவையை பயன்படுத்தும் என்றும் 20 கோடி இந்தியர்கள் இதை பயன்படுத்துவார்கள் என்றும் நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிட்விக்கெட் (Hitwicket)
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹிட்விக்கெட் நிறுவனம், Hitwicket Superstars செயலியை உருவாக்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ-போன்களில் இயங்கும் இந்த செயலி, இந்தியாவுக்கான மொபைல் விளையாட்டாக உருவாக்கப்பட்டுள்ளது.
Hitwicket Superstars, 2020ல் அறிமுகம் செய்யப்பட்டது. கீர்த்தி சிங் மற்றும் காஷ்ய ரெட்டி இதன் நிறுவனர்கள். இந்த கேம் இதுவரை 9 லட்சம் பதிவிறக்கங்களை 100 நாடுகளில் பெற்றுள்ளது. இது வேகமாக பிரபலமாகி வரும் கேம்களில் ஒன்றாக உள்ளது.
சமூக வர்த்தகம் (Mall91)
நொய்டாவைச் சேர்ந்த நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Mall91 செயலி சமூக ஊடகங்கள் மூலம் ஷாப்பிங் செய்வது மற்றும் பொருட்களை விற்க வழி செய்கிறது. இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் இயங்குகிறது.
2018ல் நிதின் ராஜ் மற்றும் ஷுபம் பரம்ஹன்ஸ் என்பவர்களால் உருவாக்கப்பட்ட Mall91 ஷாப்பிங் ஆப், இந்தியாவில் 2000 இடங்களுக்கு டெலிவரி செய்கிறது. இவர்கள் 400 மில்லியன் பயனர்களை அடைவதை இலக்காக கொண்டுள்ளனர்.