வீடு தேடி வரும் கறந்த பால்: கிராம இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, வருவாய் தரும் கோவை நிறுவனம்!
கோவையைச் சேர்ந்த VilFresh விவசாய விளைபொருட்கள் மற்றும் பால் பொருட்களை நகரத்துக்கு கொண்டு சேர்த்து வருவாயை அதிகரித்து கிராமப்புற இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் விவசாயமே வாழ்வாதாரத்திற்கான முக்கியத் தொழிலாகக் கருதப்பட்டாலும் இந்தத் துறையில் எத்தனையோ பிரச்சனைகள் இருந்து வருகின்றன. விவசாயிகளின் ஏழ்மை நிலை, மண் வளம் குன்றுவது, உள்ளீட்டு செலவு அதிகரிப்பு, பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர்மட்டம் குறைவது, சந்தைப்படுத்தும் அமைப்பில் காணப்படும் ஒழுங்கற்ற தன்மை போன்றவற்றால் விவசாயம் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் குறைகிறது. இதனால் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் இந்தத் துறையில் முதலீடு செய்து செயல்படும் அளவிற்கு லாபகரமானதாக இருப்பதில்லை.
விவசாய உற்பத்தி தொடர்ந்து மந்தமாகவே இருந்து வருகிறது. பல்வேறு இடைத் தரகர்களின் தலையீட்டால் உணவுப் பொருட்களின் விலையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இவைதவிர இந்தியாவின் நகர்புறங்களில் வசிப்பவர்களுக்கு கலப்படம் நிறைந்த பாலும் உணவுப் பொருட்களுமே கிடைக்கின்றன. இதனால் மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
இந்தத் துறையில் இத்தனை பிரச்சனைகள் இருப்பினும் இதிலுள்ள சாதகமான அம்சங்களால் உந்தப்பட்டு செயல்படுகிறது Laymen Agro Ventures. இந்நிறுவனம் விவசாயம் குறித்த கண்ணோட்டத்தை மாற்றியமைக்கிறது. பொருளாதார ரீதியான லாபகரமான துறையாக விவசாயத்தை மாற்றுகிறது.
Laymen Agro Ventures 2016-ம் ஆண்டு செல்வகுமார் வரதராஜன் என்பவரால் தொடங்கப்பட்டது. கோவையில் உள்ளவர்களுக்கு கலப்படமில்லாத விவசாய உற்பத்திப் பொருட்களையும் பால் பொருட்களையும் அவர்களது வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் இந்நிறுவனம் VilFresh பிராண்டைத் தொடங்கியது.
36 வயது செல்வா, கிராமப்புறத்தைச் சேர்ந்தவர். தமிழ் வழிக் கல்வி கற்றவர். கோவை எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கலைப் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்த பிறகு நிதி மற்றும் கட்டுப்பாடு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றார். அதன் பின்னர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பிரிவில் எம்.ஃபில் முடித்தார்.
இளம் தொழில்முனைவர்களையும் தலைவர்களையும் வளர்த்தெடுக்கும் ஆர்வத்துடன் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2,000-க்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
செல்வா விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் பட்டப்படிப்பு மேற்கொள்ளத் தீர்மானித்த காலகட்டம் வரை விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்.
“என்னுடைய 6ம் வகுப்பு முதல் எங்களது விளைச்சலை சந்தையில் கொண்டு சேர்ப்பதில் பங்களித்து வந்தேன். சிறு வயதிலேயே என்னுடைய பள்ளி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள நுகர்வோர்களுக்கு நேரடியாக விளைச்சலைக் கொண்டு சேர்க்கலாம் என்று என் தாத்தாவிடம் சொல்வேன். நகரங்களில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்போது மண்டியில் 15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளிக்கு 80 ரூபாய் மட்டுமே எங்களுக்குக் கிடைக்கும். நான் என்னுடைய சைக்கிளில் கீரை, காய்கறி போன்றவற்றை எடுத்துச் சென்று நகரில் விற்பனை செய்வேன். இதனால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நூறு சதவீத தொகையும் என் தாத்தாவிற்குக் கிடைத்தது,” என்று நினைவுகூர்ந்தார்.
செல்வா திருமணம் முடிந்து மனைவியுடனும் மகளுடனும் பெங்களூருவில் வசித்து வந்தார். குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக ஃப்ரெஷ்ஷான பால் எங்கு கிடைக்கும் என்று செல்வா தேடியபோதுதான் பழைய நினைவுகள் அவருக்குத் திரும்பியது. இவர்கள் தங்கியிருந்த பகுதிகளுக்கு அருகே கிடைக்கும் பாலின் தரம் கிராமத்தில் கிடைக்கும் பால் போன்று தரமானதாக சந்தையில் இல்லை என்பதை நினைத்து வருந்தினர்.
“எங்கள் மகளுக்காக தரமான விவசாயப் பொருட்களை நகர்புறங்களில் தேடியபோது கிடைக்கவில்லை என்று என் மனைவி கவலைப்பட்டார். எங்களைப் போன்ற பலரின் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையிலும் பரஸ்பரம் லாபமடையும் வகையிலும் செயல்பட திட்டமிட்டேன்,” என்றார்.
இந்தத் தம்பதி கோயமுத்தூர் திரும்பி சொந்த வணிக முயற்சியைத் தொடங்கத் தீர்மானித்தனர்.
“எங்களது செயல்பாட்டு மாதிரியில் விவசாயிகளை மேம்படுத்துதல், கிராமப்புற இளைஞர்களுக்கு சக்தியளித்தல், நகர்புற வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தல் ஆகிய மூன்று அம்சங்களுக்கு முக்கியத்துவமளிக்கவேண்டும் என்பதைக் கண்டறிந்தோம்,” என்றார்.
செல்வா; நிறுவனம் தொடர்பாக ஆராய்ந்து வந்தபோது விவசாயிகள் விவசாய உள்ளீடுகளை சில்லறை வர்த்தக விலையில் வாங்குவதையும் விளைச்சல்களை மொத்த விலைக்கு விற்பனை செய்வதையும் தெரிந்துகொண்டார்.
“நாங்கள் விளைச்சல் பொருட்களின் விநியோகத்தை முறைப்படுத்துகிறோம். விவசாய உள்ளீடுகளின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தி விவசாயச் செலவுகளையும் குறைக்கிறோம்,” என்றார்.
விவசாயிகளின் விளைப் பொருட்களை வாங்கிக்கொள்ளும் விலை 25 சதவீதம் அதிகரித்தது. அத்துடன் விவசாய உள்ளீடுகளும் மொத்த விலையில் கிடைக்கிறது. நுகர்வோர்களின் கட்டணத்தில் 80 சதவீதம் மீண்டும் கிரமாப்புற பொருளாதாரத்திற்கே வந்தடைகிறது.
வழக்கமாக நுகர்வோர்கள் செலுத்தும் தொகைக்கும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் தொகைக்கும் இடையே மிகப்பெரியளவில் வித்தியாசம் காணப்படும்.
விவசாயிகள் உயர்தரமான, இயற்கைக்குக் உகந்த உள்ளீடுகள் பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்கின்றனர்.
இந்த நடவடிக்கைகளால் விவசாயிகள் சிறந்த விலையில் விற்பனை செய்கின்றனர். அதேபோல் நுகர்வோரும் கலப்படமில்லாத, பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படாத உணவுப் பொருட்களை சிறந்த விலையில் வாங்குகின்றனர்.
Laymen Agro நிறுவனத்தின் VilFresh ஒவ்வொரு மாதமும் 30 சதவீத வளர்ச்சி விகிதத்துடன் செயல்படுகிறது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு நேட்டிவ் ஏஞ்சல்ஸ் நெட்வொர்க் மூலம் 1.15 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றுள்ளது. நேடிவ் ஏஞ்சல்ஸ் உடன் Upaya Social Ventures, Sangam Ventures ஆகிய நிறுவனங்களும் இணைந்து இந்த நிதியுதவியை வழங்கியுள்ளது.
Laymen Agro கோவையின் கிராமப்புற இளைஞர்கள் மீண்டும் தங்களது கிராமங்களுக்குப் புலம்பெயர்ந்து மாதத்திற்கு 40,000 ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்ட உதவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த ஸ்டார்ட் அப் தற்சமயம் 17 கிராமப்புற இளைஞர்களை பணியமர்த்தியுள்ளது.
“நாங்கள் இவர்களுக்கு ஒரு வாகனத்தைக் கொடுக்கிறோம். இவர்கள் நகர்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் சென்று திரும்புகின்றனர். இவர்களுக்கு 35,000 ரூபாய் மாத வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இவர்கள் காலை நேரங்களில் நான்கு மணி நேரமும் மாலையில் மூன்று மணி நேரமும் பயணத்தில் செலவிடுகின்றனர். மீதமுள்ள நேரத்தை நிலத்தில் செலவிடுகின்றனர்,” என்றார் செல்வகுமார்.
இந்நிறுவனம் ‘Coca Cola Sustainable Enterprise 2017’ விருது வென்றுள்ளது. மேலும் 40க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள், Radisson Blu, Marriot, Lemon Tree, Accor, Ibis போன்ற சங்கிலித் தொடர் உணவகங்கள், கோயமுத்தூரில் நடுத்தர அளவில் செயல்படும் சில உணவகங்கள் போன்றவற்றிற்கு சேவையளித்து வருகிறது.