சுத்தமான பால் தேடிய இவர் தொடங்கிய Whyte Farms இன்று ரூ.7 கோடி வருவாய் ஈட்டுகிறது!
வீட்டிலேயே கறக்கப்பட்ட சுத்தமான பசும்பாலை தனது 28 வயது வரை குடித்த கனிகா, அதே ஆரோக்கியத்தை பலரும் பெற பால் வர்த்தகத்தை தொடங்கினார்.
கனிகா யாதவ் ஆரோக்கியமான, சுத்தமான மாட்டுப் பாலைத் தேடி அலைந்தார். இந்தத் தேடலே வொயிட் ஃபார்ம்ஸ் (Whyte Farms) என்கிற ஸ்டார்ட் அப் தொடங்க உந்துதலளித்தது. இன்று இந்த ஸ்டார்ட் அப் கோடிகளில் வருவாய் ஈட்டி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த இந்தத் தொழில்முனைவர், வீட்டிலேயே கறக்கப்பட்ட சுத்தமான பசும்பாலை தனது 28 வயது வரை குடித்து வளர்ந்துள்ளார். டெல்லியில் ராஜோக்ரியில் உள்ள இவர்களது வீட்டில் குடும்பத்தினர் கால்நடைகள் வளர்த்து வந்தனர். 2014-ம் ஆண்டு அவற்றை கொடுத்து விடவேண்டிய சூழல் ஏற்பட்டது.
கனிகா தரமான பாலை தேடியது குறித்து பகிர்ந்துகொண்டபோது, “தலைநகர் டெல்லியில் பாலின் தரம் மோசமாக இருக்கும். உலகளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளபோதும் தரமான பால் கிடைக்கவில்லை. பேக் செய்யப்பட்ட பால் ஃப்ரெஷ்ஷாக இருப்பதில்லை. நீண்ட விநியோகச் சங்கிலியைக் கடந்த பின்னரே நம்மை வந்தடைகிறது.
“உள்ளூர் பால் வியாபாரிகளிடம் கிடைக்கும் பால் சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதும் சந்தேகம்தான். அங்குள்ள கால்நடைகளுக்கு எத்தகைய தீவனம் வழங்கப்படுகிறது என்பதும் தெரியாது. டெட்ரா பேக்குகளில் இறக்குமதி செய்யப்பட்ட பாலை ஒரு லிட்டர் 300 ரூபாய் என்கிற விலையில் வாங்கியும் முயற்சி செய்தேன்,” என்றார்.
28 வருடங்களாகக் குடித்த சுத்தமான பாலைத் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. இதுவே ‘வொயிட் ஃபார்ம்ஸ்’ என்கிற நிறுவனத்தை சஞ்சீவ் யாதவுடன் இணைந்து தொடங்க வழிவகுத்தது. இந்நிறுவனம் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
தொழில்முனைவு
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் உள்ள வேலை வாய்ப்பு குறித்து புரிந்துகொள்வதற்காக செய்யப்பட்ட கள ஆய்வு ஒன்றில் கனிகா பங்களித்திருந்தார். தொழில் தொடங்கவேண்டும் என்கிற அவரது எண்ணத்தை இந்த ஆய்வு மேலும் வலுவாக்கியது.
இந்த ஆய்வின்போது கடார்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் பால் விற்பனையில் ஈடுபட்டிருந்ததைத் தெரிந்துகொண்டார். ஆனால் அவர்களில் ஒருவர் வீட்டில்கூட கனிகா மாடுகளைப் பார்க்கவில்லை. அவை வெளியில் மேய சென்றிருப்பதாகவும் மாலை நேரத்தில் வீடு திரும்பும் என்றும் கிராம மக்கள் கனிகாவிடம் தெரிவித்துள்ளனர்.
“பால் கொடுக்கும் மாடுகளுக்கு ஊட்டச்சத்து அவசியம். இருப்பினும் பெரும்பாலான கிராம மக்களால் அவற்றைப் பராமரிக்க முடியவில்லை. கால்நடைகள் இவ்வாறு சுற்றித் திரியும்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை சாப்பிடக்கூடும். இதனால் மாடு வளர்க்கும் விவசாயி கலப்படமில்லாமல் பால் கொடுத்தாலும் அவை சத்து நிறைந்ததாக இருக்காது,” என்றார் கனிகா.
பால் பாக்கெட்டுகள் நுகர்வோரின் வீட்டை வந்தடைவதற்கு குறைந்தது நான்கு நாட்கள் ஆகிறது. இதனால் பாலின் தரம் மேலும் குறைந்துபோகிறது. மாட்டுப் பாலில் உடனடியாக பாக்டீரியா உருவாக்கத் தொடங்கும். அவை கெட்டுப்போவதைத் தவிர்க்க குளிரூட்டப்படுகிறது. நகர்புறத்தில் பாலை பதப்படுத்தும் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னரே கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது என்றார்.
பால் ஃப்ரெஷ்ஷாக கிடைப்பதில்லை. இது ஒருபுறம் இருக்க 68 சதவீத பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் டிடெர்ஜெண்ட், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், ரீஃபைண்ட் ஆயில் போன்றவை கலக்கப்படுகிறது. அத்துடன் பால் கெடாமல் இருக்க இதர பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன.
வொயிட் ஃபார்ம்ஸ் ஆரோக்கியமான பால் வழங்குகிறது. குளிரூட்டப்படுதல், பதப்படுத்துதல், பேக்கேஜிங் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளும் டெல்லியிலிருந்து 90 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திஜாராவில் உள்ள 30 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
பால் கறக்கப்பட்ட 8 முதல் 12 மணி நேரங்களில் கண்ணாடி பாட்டில்களில் பேக் செய்யப்பட்டு 3,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு டெலிவர் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையில் எந்த ஒரு ஏஜென்சியும் வெளியிலிருந்து நியமிகப்படவில்லை.
பேக்கேஜ் செய்யப்பட்ட பாலில் அதிகளவில் பதப்படுத்தும் பொருட்கள் சேர்க்கப்படுவதால் விரைவில் கெட்டுப்போவதில்லை. ஆனால் வொயிட் ஃபார்ம்ஸ் பாலில் பதப்படுத்தும் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாததால் வெளியில் வைத்திருந்தால் இரண்டு மணி நேரத்தில் கெட்டுப் போய்விடும் என்கிறார் கனிகா.
ஒரு லிட்டர் பால் 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் டெல்லி-என்சிஆர் பகுதிகளில் மட்டுமே சேவையளிக்கப்படுகிறது. விரைவில் நொய்டா பகுதிகளில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்படும் என்று கனிகா நம்பிக்கை தெரிவித்தார்.
சுயநிதியில் இயங்கி வரும் இந்த ஸ்டார்ட் அப் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு ஓராண்டு செலவிட்டு ஆய்வு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 4 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில் ஆண்டு வருவாயாக 7 கோடி ரூபாய் ஈட்டப்படுகிறது.
கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்ய நிறுவனர்கள் இருவரும் 200 கன்றுக்குட்டிகளையும் வாங்கி பண்ணையில் வளர்த்து வருகின்றனர். இங்கு தீவனமும் வளர்க்கப்படுகிறது. பண்ணையில் கால்நடைகளுக்கான மசாஜ் மையமும் உள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஸ்டார்ட் அப் பனீர், தயிர் ஆகிய தயாரிப்புகளையும் விநியோகிக்க உள்ளது.
நிறுவனர்கள் இருவருக்கும் விவசாயம் குறித்து அதிகம் தெரியாது. தொழில்முறை கால்நடை மருத்துவரை உடன் இணைத்துக்கொண்டபோதும் பண்ணை அமைத்து கால்நடைகளுக்கு பொறுப்பேற்பது மிகப்பெரிய சவாலாக இருந்தாக இவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இவர்கள் கால்நடை வளர்ப்பு குறித்தும் படித்தனர்.
இந்நிறுவனர்கள் மற்றொரு சவாலையும் சந்தித்தனர். வாடிக்கையாளர்கள் ஆரம்பத்தில் இவர்கள் வழங்கிய பாலை ஏற்றுக்கொள்ளவில்லை. பெரிய பிராண்டுகள் வாங்கிப் பழகியவர்களுக்கு அந்த பிராண்ட் மீது நம்பிக்கை அதிகம் இருந்தது.
“பெரிய பிராண்டுகளில் பால் பதப்படுத்தப்படும் என்பது குறித்து அவர்களுக்கு எடுத்துரைத்தாலும் இதற்கு மாற அவர்கள் தயக்கம் காட்டினர்,” என்றார்.
இந்தப் பிரிவில் பல ஸ்டார்ட் அப்கள் செயல்படத் தொடங்கியதால் நம்பகத்தன்மை ஏற்பட உதவியதாக தெரிவிக்கிறார் கனிகா. அதேசமயம் இவ்வாறு வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்களை தற்போதைக்கு போட்டியாளர்களாக கருதவில்லை என்றும் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து இந்தத் தொழில்முனைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதல் ஆண்டில் 250 வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளனர். இந்திய குடும்பங்களில் படிப்படியாக மாற்றத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.
ஆங்கில கட்டுரையாளர்: டென்சின் நார்சம் | தமிழில்: ஸ்ரீவித்யா