ஒலிம்பிக் ஊக்க பாடல்: ஏ.ஆர்.ரஹ்மான் உடன் பணியாற்றியது பற்றி அனன்யா பிர்லா!
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஊக்க பாடலான, இந்துஸ்தானி வே, ஏற்கனவே யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ள நிலையில், பாடகரும் கவிஞருமான அனன்யா பிர்லா, இந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றியது பற்றி விவரிக்கிறார்.
பெருந்தொற்று சூழலுக்கு மத்தியில் விளையாட்டு உணர்வு மற்றும் அணி செயல்பாட்டிற்கு அடையாளமான ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் துவங்கியுள்ளது.
டோக்கியோவில், இந்தியாவில் இருந்து 228 பேர் கொண்ட குழு, 18 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கிறது. இந்தியர் வீரர்கள், வீராங்கனைகளுக்காக கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயம் துடிப்பதோடு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாடகர் அனன்யா பிர்லா இணைந்து தி இந்துஸ்தானி வே, ஊக்கப்பாடலை உருவாக்கியுள்ளனர்.
இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த பாடல் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று நிமிடம் கொண்ட இந்த பாடல், ஒலிம்பிக் விளையாட்டு மீது இந்திய குடும்பத்தின் ஈடுபாட்டை விவரிக்கிறது. இடையே இந்த போட்டியில் சாதித்த இந்தியர்கள் இடம்பெறுகின்றனர்.
“பெரும்பாலான நாடுகள் ஒலிம்பிக்கிற்கான ஊக்கப் பாடலை கொண்டுள்ளன. இதுவரை நமக்கு இத்தகைய பாடல் இருந்ததா எனத் தெரியவில்லை. இந்த பாடலை உருவாக்க விரும்பியதும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் நினைவில் வந்தார்,” என்று ஹெர்ஸ்டோரியிடம் பேசும் போது அனன்யா பிர்லா கூறினார்.
ரஹ்மான் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பிறகு அனன்யா பாடலுக்கான பணிகளைத் துவக்கினார். பெருந்தொற்று காலத்திலும் தீவிரமாக பயிற்சி செய்து தயாராகியுள்ள வீரர்கள், வீராங்கனைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்த இந்த பாடல் முக்கியமானது என்கிறார் அனன்யா.
லாஸ் ஏஞ்சல்சில் ரஹ்மானுடன் ஒராண்டுக்கு முன் பணியாற்றிய அனுபவம் இருந்ததால், இந்த பாடலுக்கான பணிக்கு அவர் தயாராக இருந்தார்.
“15- 20 கருத்தாக்க எண்னங்களை கேட்டிருந்தார். இது நல்ல துவக்கமாக அமைந்தது. விளையாட்டுத்துறை அமைச்சகம் சில வீடியோ குறிப்புகளை அனுப்பியது. அவையே பிரதானமாக இருக்க வேண்டும் என விரும்பினேன். இவற்றைக் கொண்டு ஒரு கதை வடிவத்தை யோசித்த போது தான், வீரர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊக்கம் அளிக்கும் இந்திய குடும்பத்தின் கதையை தீர்மானித்தோம்,” என்கிறார் அனன்யா.
கதையின் பெரும்பகுதி மும்பையில் எடுக்கப்பட்டது. ரஹ்மானுடன் துபாயில் பணியாற்றினார் அனன்யா. பாடலை உருவாக்க நான்கு மாதங்கள் ஆன நிலையில், வீடியோ உடனே உருவானது.
ரஹ்மான், அனன்யா, மற்றும் பல்வேறு கலைஞர்கள் இணைந்து பாடல்வரிகளை உருவாக்கினர்.
“அவர் வியக்க வைப்பவர், எனக்கு வழிகாட்டி போன்றவர். என்னுடைய கருத்துகளை அனைத்தையும் ஏற்கும் அவளவுக்கு அவர் பெரிய மனதுடன் இருந்தார். அவரை நான் பல கேள்விகள் கேட்டேன். என்னை அச்சமின்றி கேள்விகள் கேட்க அனுமதித்து, படைப்பூக்கத்தை வெளிப்படுத்த உதவினார். ஆறு நிமிடம் கொண்ட டிராக்கை அனுப்பினார். அதை 2 நிமிடம் 58 விநாடிகள் கொண்டதாக உருவாக்கினோம்,” என்று ரஹ்மானுடன் பணியாற்றிய அனுபவம் பற்றி அனன்யா கூறுகிறார்.
இந்த பாடலுக்கான வரவேற்பு குறித்து அனன்யா மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.
“எந்த பாடல் வெளியீட்டையும் எதிர்பார்ப்பின்றி அணுகுவேன். ஆனால் இந்த பாடல் வைரலானது, இதில் அங்கம் வகித்தது குறித்து எனக்கு பெருமையாக இருந்தது. இந்த பாடல் இந்தியாவின் Waka Waka சொல்வது மிகப்பெரிய பாராட்டாக அமைகிறது ,” என்கிறார் அவர்.
“இந்திய வீரர்கள், வீராங்கனைகள் உலக அளவிலான போட்டிக்கு வந்திருப்பதே பெரிய விஷயம். பெருந்தொற்று காலத்தில், இதற்கு கடின உழைப்பும், ஈடுபாடும் தேவை,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
இசையை பொருத்தவரை மெய்நிகர் தன்மைக்கு பழக்கம் விட்டதாக அனன்யா கூறுகிறார்.
தனது அம்மாவுடன் இணைந்து MPower துவக்கியுள்ளவர் மன நலம் பற்றியும் முக்கியமாக பேசுகிறார்.
“கொரோனா சூழலில் மூன்று மொழிகளில் உதவி சேவையை துவக்கினோம். மன நலம் பற்றி பேசுவதை இயல்பாக மாற்ற விரும்புகிறோம். நாம் பரஸ்பரம் அன்பும், பரிவும் காட்ட வேண்டும்,” என்கிறார் அனன்யா.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: ஸ்ரீவித்யா