கேன்சர் மருந்து தயாரிக்கும் மாற்று மூலப் பொருளை உருவாக்கிய ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள்!
பொருளாதார ரீதியில் பயனுள்ள உற்பத்தி முறையில் புதிய சாதனை!
ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் கேம்ப்டொதெஸின் என்னும் புற்றுநோய் மருந்துக்கான நீடித்து நிலைத்திருக்கும் அதிகப் பலன் தரக்கூடிய மாற்று மூலப் பொருளைக் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்து சீனாவிலும், இந்தியாவிலும் உள்ள மரங்களின் வகைகளில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
மெட்ராஸ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் ஆராய்ச்சியாளர்கள் Camptothecin என்னும் புற்றுநோய் மருந்தைத் தயாரிப்பதற்கான மாற்று மூலப்பொருளை கண்டறிந்துள்ளனர்.
நீடித்து நிலைத்திருக்கக்கூடிய, அதிகப் பலனைத் தரக்கூடிய இந்த மாற்று மூலப்பொருள் புதுமையான மைக்ரோபியல் நொதிமம் முறையில் உருவாக்கப்படுகிறது. இது மார்க்கெட்டின் தேவைகளை பெரிய அளவில் நிறைவேற்றக்கூடிய பொருளாதார ரீதியில் பயனுள்ள உற்பத்தி முறையாகும்.
டோப்போடெக்கன் மற்றும் ஐரினோடெக்கன் என்னும் இரண்டு மருந்துகளும் பரவலாகப் பயன்படுத்தப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளாகும். இவற்றின் முக்கிய மூலப்பொருளாக கேம்ப்ட்டொதெஸின் உள்ளது. இதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட மருந்து ஃபார்முலாக்கள் புற்றுநோய்க்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்காக பல்வேறு கிளினிக்கல் பரிசோதனை நிலைகளில் உள்ளன.
கேம்ப்ட்டொதெஸின் என்பது சீனாவில் உள்ள Camptotheca acuminata என்னும் மரத்தில் இருந்தும், இந்தியாவில் உள்ள Nothapodytes nimmoniana என்னும் மரத்தில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்ட ஒருவகை காரப்பொருளாகும். ஒரு டன் கேம்ப்ட்டொதெஸின் மட்டும் பிரித்து எடுப்பதற்காக கிட்டத்தட்ட 1000 டன் தாவரப் பொருட்கள் தேவைப்படுகின்றன.
மார்க்கெட்டில் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்த இரண்டு மரவகைகளும் விரிவான அளவில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால் இவை இரண்டும் இப்போது அழியும் அபாயத்தில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் நிம்மோனியானா மரங்களின் எண்ணிக்கை 20%-க்கும் அதிகமாக குறைந்து விட்டது.
மெட்ராஸ் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் இப்போது Camptothecin-ன் தயாரிப்பதற்கான மாற்று முறை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது இயற்கை வளங்களைப் பாதுகாப்பதோடு, தேவைகளையும் நிறைவு செய்வதாக உள்ளது. இதற்காக, மைக்ரோபியல் நொதிமம் முறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது பொருளாதார ரீதியில் பயனளிப்பதோடு, மார்க்கெட்டின் தேவைகளை பெரிய அளவில் நிறைவு செய்யக்கூடியதாக இருக்கும்.
மெட்ராஸ் ஐஐடி-யின் ஆராய்ச்சியை பயோடெக்னாலஜி துறையின சார்பு பேராசிரியர் டாக்டர் ஸ்மிதா சிரிவாஸ்தவா தலைமையிலான ஆய்வாளர்கள் நடத்தினார்கள். இந்த ஆராய்ச்சிக் கட்டுரை அண்மையில் ஜர்னல் ஆஃப் சயன்ட்டிபிக் ரிப்போர்ட்ஸ என்னும் (ஓர் இயற்கை ஆராய்ச்சி வெளியீடு) சர்வதேச இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆராய்ச்சியின் பயன்களை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் பயோடெக்னாலஜி துறையின் சார்பு பேராசிரியரும், முதன்மை ஆய்வாளருமான டாக்டர் ஸ்மிதா சிரிவாஸ்தவா,
“இதுவரை தெரிவிக்கப்பட்டுள்ள மைக்ரோபியல் இழைகளைப் போலன்றி, இந்த இழை 100 தலைமுறைகளுக்கு அப்பாலும் நீடித்து நிலைத்திருக்கக் கூடியது என்பது இதன் புதுமையான அம்சமாகும். இந்த பிரித்து எடுக்கப்பட்ட புதுமையான இழையைப் பயன்படுத்தி மைக்ரோபியல் நொதிமத்தை உருவாக்குவது இப்போதைய திட்டமாகும்.
”கேம்ப்ட்டொதெஸின் மூலப்பொருளை செயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்காக நீடித்து நிலைத்திருக்கும் உயிரி செய்முறை அடிப்படையில் இந்த நொதிமம் உருவாக்கப்படும். இதில் பெரும்பாலும் ஆர்வமுள்ள தொழில்துறை பார்ட்னர்கள் சேர்ந்து கொள்வார்கள்,’’ என்று கூறினார்.
இந்தியா உள்பட உலகெங்கும் மரணத்தை உண்டாக்கக்கூடிய முக்கியக் காரணமாக புற்றுநோய் உள்ளது. இந்தியாவில் 2026 ஆம் ஆண்டுக்குள் ஆண்டு தோறும் ஆண்களிடையே 0.93 மில்லியன் மற்றும் பெண்களிடையே 0.94 மில்லியன் நோயாளிகளுக்கு புதிதாக புற்றுநோய் ஏற்படும் என ஆசியன் பசிபிக் ஜர்னல் ஆஃப் கேன்சர் பிரிவென்ஸன் என்னும் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.