கொரோனா வைரஸ் காலத்தில் 1 நாளைக்கு ரூ.14 லட்சம் ஈட்டும் ஜோதிட நிறுவனம்!
கொரோனா வைரஸ், லாக்டவுன் என மன உளைச்சலில் இருக்கும் மக்கள் ஜோதிடம் பக்கம் அதிகம் திரும்பி இருப்பதாக AstroTalk நிறுவனர் தெரிவிக்கிறார்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று மக்களிடையே பயத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. குறிப்பாக ஆரோக்கியம், பணம், உறவுமுறைகள், பணி வாழ்க்கை என பல்வேறு பிரச்சனைகள் மக்கள் மனதில் பதட்ட உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி கொரோனா வைரஸ் பரவல் வணிகங்களை வெகுவாக பாதித்துள்ளது. இவர்களில் பலர் செய்வதறியாது ஸ்தம்பித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் சில நிறுவனங்கள் மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது. இத்தகைய சூழலில் ஜோதிடப் பிரிவில் செயல்படும் ஸ்டார்ட் தனது வருவாயை இரட்டிப்பாக்கியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஆஸ்ட்ரோடாக் (AstroTalk) என்கிற ஸ்டார்ட் அப் ஜோதிடம் சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான சூழலில் இரட்டிப்பு வருவாய் ஈட்டியுள்ளது.
“கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டப்பட்ட நிலையில் தற்போது சராசரியாக ஒரு நாளில் 14 லட்ச ரூபாய்க்கு வணிகம் நடைபெறுகிறது,” என்றார் ஆஸ்ட்ரோடாக் நிறுவனர் புனீத் குப்தா.
இந்த ஸ்டார்ட் அப் ஒருநாள் அதிகபட்சமாக 17 லட்ச ரூபாய் வரை வணிகம் செய்துள்ளது.
2017-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஸ்டார்ட் அப் சாட் மூலமாகவும் தொலைப்பேசி வாயிலாகவும் ஜோதிடம் சம்பந்தப்பட்ட பல்வேறு சேவைகளை வழங்குகிறது. இந்நிறுவனம் நிலையாக வளர்ச்சியடைந்து வருகிறது. 22 முதல் 40 வயதுள்ளவர்களே வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள்
கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வணிகம் 20 சதவீதம் வரை சரியத் தொடங்கியதாக தெரிவிக்கிறார் புனீத். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதும் வணிகம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
“மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே தீர்வைத் தேடி எங்களது தளத்தை தொடர்பு கொள்கின்றனர்,” என்றார் புனீத்.
தொழில் வாழ்க்கை சம்பந்தப்பட்ட வழிகாட்டலைத் தேடியே பலர் அணுகுகின்றனர். அதைத் தொடர்ந்து நிதி, உறவுமுறை, பணி போன்றவை தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தற்போதைய சூழலில் பணி மற்றும் தொழில் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பயம் அதிகரித்துள்ளது. ஜொமாட்டோ, ஸ்விக்கி, ஓலா போன்ற எத்தனையோ நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இது போன்ற அறிவிப்புகளால் மக்களின் பாதுகாப்பற்ற உணர்வு மேலும் அதிகரிக்கிறது.
பணியை இழப்பது என்பது நிதி ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இயல்பே. அதிலும் குறிப்பாக தங்களது தொழில் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்திருக்கும் இளம் தலைமுறையினருக்கு வேலையிழப்பின் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.
மக்கள் தொழில் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டுமல்லாது உறவுமுறை சார்ந்த ஆலோசனைகளுக்காகவும் ஆஸ்ட்ரோடாக் நிறுவனத்தைத் தொடர்புகொள்கின்றனர்.
“கொரோனா வைரஸ் பரவும் இன்றைய சூழலில் பல இளம் தலைமுறையினரால் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ள முடிவதில்லை. இதனால் உறவுமுறைகளுக்குள் பதட்டம் அதிகரித்து வருகிறது,” என்றார் புனீத்.
நிபுணர்கள் இணைந்துள்ளனர்
இந்த வலைதளத்தை எண்ணற்ற வாடிக்கையாளர்கள் பார்வையிடுவதுடன் பல்வேறு நிபுணர்களும் இதில் இணைந்து தங்களது சேவைகளை வழங்க விரும்புகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு இதில் இணைந்திருந்த ஜோதிட நிபுணர்கள் கூடுதல் பணி ஒதுக்குமாறு நிறுவனரைத் தொடர்பு கொண்டு கேட்பார்கள். ஆனால் தற்போது பணி அதிகரித்துள்ளது.
“சில ஜோதிடர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும் நாள் ஒன்றிற்கு 12 மணி நேரம் வரை வேலை பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்,” என்கிறார் புனீத்.
அதேபோல் பணி மும்முரமாக நடைபெறும் நேரமும் மாறியுள்ளது. கொரொனா வைரஸ் பரவலுக்கு முன்பு இரவு 7 மணி முதல் 11 மணி வரை பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது இரவு 8.30 மணி முதல் அதிகாலை 1 மணி வரை மாறியிருப்பதாக தெரிவிக்கிறார்.
மேலும் மக்கள் நிபுணர்களைத் தொடர்புகொள்ள விரும்பும் விதத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொலைபேசி உரையாடலுக்கு பதிலாக சாட் சார்ந்த சேவைகளையே அதிகம் விரும்புகின்றனர்.
புனீத் ஆஸ்ட்ரோடாக் தொடங்குவதற்கு முன்பு சில சவால்களை சந்தித்துள்ளார். இவையே இந்த வணிகம் தொடங்கக் காரணமாக அமைந்தது.
“தனிப்பட்ட விதத்தில் ஜோதிடம் என் வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளது. மற்றவர்களும் இதன் மூலம் பலனடையவேண்டும் என்பதால் அதிகம் பேரை சென்றைடைய விரும்புகிறேன்,” என்று முன்னர் யுவர்ஸ்டோரி உடனான உரையாடல் ஒன்றில் புனீத் தெரிவித்துள்ளார்.
இந்த ஸ்டார்ட் அப் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பேக்கேஜ்களை வழங்குகிறது. ஜோதிடரைப் பொறுத்து ஒரு நிமிடத்திற்கு 10 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 60 ரூபாய் முதல் ரிசார்ஜ் பேக் சேவையும் வழங்கப்படுகிறது. எனினும் புதிய பயனருக்கு முதல் முறை இலவசமாக ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்தத் தளத்தில் இணைந்துள்ள ஜோதிடர்களுடன் வருவாயைப் பகிர்ந்துகொள்ளும் வகையிலான வருவாய் மாதிரியை ஆஸ்ட்ரோடாக் பின்பற்றுகிறது. ஆஸ்ட்ரோடாக் ஸ்டார்ட் அப்பிற்கு நாடு முழுவதும் பல்வேறு பயனர்கள் உள்ளனர். நகர்புறங்கள் மட்டுமல்லாது பல பகுதிகளையும் இந்த நிறுவனம் சென்றடைந்துள்ளது.
இரண்டாம் நிலை நகரங்களில் இருப்போரும் தளத்தைப் பார்வையிடுகின்றனர். இந்தத் தளத்தின் சேவையை விரிவுபடுத்த நிறுவனர் திட்டமிட்டுள்ளார். கூடுதல் சேவைகளை இணைக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்தத் தளத்தில் அதிக பயனர்களை இணைக்கவேண்டும் என்பதே இந்நிறுவனரின் நோக்கம்.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா பூஜரி | தமிழில்: ஸ்ரீவித்யா