இந்திய புராணங்கள்; பருப்பு சமையல்; ஒபாமா பகிர்ந்த 'இந்தியா மெமரீஸ்'
இந்தியா குறித்த தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார் அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா. சுவாரஸ்யமாக, இந்தியாவின் புராணங்களுக்கும், ஒபாமாவுக்கும் இடையிலான தொடர்பு ஹைலைட்டாக அமைந்துள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, 'எ பிராமிஸ்ட் லாண்ட்' என்ற நூலை எழுதியுள்ளார். 768 பக்கங்கள் உடன் இரு பகுதிகளாக எழுத்தப்பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதி இன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த நூலில் அவர் பேசியுள்ள விஷயங்கள் சில நாட்களாக செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. நூலில் உலக தலைவர்கள் குறித்து எழுதியிருக்கும் ஒபாமா, ராகுல் காந்தி, காங்கிரஸ் குறித்து பேசியிருந்தார்.
தற்போது தனது இளமை காலங்களில் இந்தியாவுக்கும் தனக்கும் இருந்து தொடர்புகள் குறித்து, ’உலக மக்கள் தொகையில் ஆறில் ஓர் பகுதி மக்கள் வாழும் நாடு இந்தியா. சிறப்புமிக்க அந்த நாட்டில் 2 ஆயிரத்துக்கும் மேலான தனித்துவமான இனக்குழுக்கள், 700க்கும் மேற்பட்ட மொழிகள் இருக்கின்றன. நான் 2010ல் தான் இந்தியா சென்றேன். அதுவும் அமெரிக்க அதிபராக சென்றேன். அதற்கு முன் அங்கு சென்றதில்லை என்றாலும், இந்தியா குறித்து என் மனதில் சிறப்பான நினைவுகள் இருந்தன.
நான் சிறுவயதில் இந்தோனேஷியாவில் வளர்ந்தபோது நான் கேட்டு வளர்ந்த இந்துக்களின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதக் கதைகள் அந்த நினைவுகளுக்குக் காரணம். சிறுவயதில் இந்த கதைகளை கேட்டுதான் எனது நேரத்தை செலவிட்டேன்.
கிழக்கு நாடுகளில் உள்ள மதங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த மாணவர்கள் என்னுடன் படித்தார்கள். அவர்கள் என் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.
”அவர்கள் தான் எனக்கு பருப்பு, கீமா சமையல் பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். இந்தி திரைப்படங்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் தான் எனக்கு ஏற்பட்டது," என மனம் திறந்துள்ளார்.
ஒபாமாவின் இந்தப் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.