'பட்ஜெட் 2021' - கோவிட்-19 நிவாரணியை எதிர்பார்க்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்!
வளர்சிக்கான மூலதனம் பெறுவதற்கான வழிகள் மற்றும் விதிக்முறைகளின் சுமை குறைப்பு ஆகிய நடவடிக்கைகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.
2020ம் ஆண்டில் கொரோனாவால் பலவித சோதனைகளை எதிர்கொண்ட நிலையில், இந்த ஆண்டு புதுமையாக்கம் மற்றும் தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என இந்திய ஸ்டார்ட் அப் துறை எதிர்பார்க்கிறது.
கொரோனா உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் பல விதங்களில் பாதிப்பை எதிர்கொண்டன. முதலீடுகள் குறைந்த நிலையில், பல நிறுவனங்கள் போராடி தாக்குப்பிடித்து நிற்கின்றன.
இந்நிலையில், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ஸ்டார்ட் அப் துறையின் கருத்துக்களை யுவர்ஸ்டோரி தொகுத்தளிக்கிறது.
வளர்ச்சிக்கான வழி
ஸ்டார்ட் அப் சூழலின் அடிப்படை பிரச்சனையை கவனித்து, வளர்ச்சிக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என 3one4 Capital நிறுவன பாட்னர் சித்தார்த் பை கூறுகிறார். வரி விதிப்பு, வர்த்தகம் செய்வது எளிதாவது, நிதி வரத்து ஆகியவை இந்தத் துறையின் பிரச்சனைகளாக இருக்கின்றன.
“2020 நிதியாண்டில் 50 சதவீத ஏற்றுமதிக்கு காரணமாக விளங்கிய 63 மில்லியன் எம்.எஸ்.எம்.இ (குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்), நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்பு பதிவு பெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன,” என்கிறார் பிளாக்சாயில் கேபிடல் இணை நிறுவனர் அங்கூர் பன்சால்.
“வர்த்தகம் செய்வதை எளிதாக்கி, நிறுவனங்களில் முதலீடுகளை ஈர்க்கும் சாதகமான விதிமுறைகள் தேவை.”
“வரி மற்றும் வெளியேறும் தன்மையில் சீர்திருத்தம் அவசியம் என்பதால், வரி விதிப்பு தொடர்பாக மத்திய பட்ஜெட் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார் சித்தார்த்.
நாட்டில் மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் வரி அதிகம் இருப்பதால், முதலீட்டாளர்கள் வரி குறைவாக உள்ள சிங்கப்பூருக்கு நிறுவன பதிவை மாற்றிக்கொள்ள சொல்வதாக அங்கூர் கூறுகிறார்.
“இந்திய நிறுவனங்கள் மற்ற நாடுகளுக்கு மாற்றப்படுவதை தவிர்க்கும் வகையில் வரி குறைவாக இருக்க வேண்டும் மற்றும் மூலதன ஆதாய வரி மற்றும் டிவிடெண்ட் வரி போன்ற இரட்டை வரி விதிப்பு குறைக்கப்பட வேண்டும்,” என்கிறார்.
டிஜிட்டல் திறன்கள்
சாதகமான கொள்கை இல்லாத சூழலில், திறன் மிக்கவர்கள் வெளியேறுவதும் ஸ்டார்ட் அப் துறைக்கு பிரச்சனையாக இருக்கிறது. தகுதிவாய்ந்த தொழில்முறையினர் வெளியேறுவது உண்மையான பிரச்சனையாகும்.
”இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை வலுவாக்கும் வகையில் ஸ்டார்ட் அப் துறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்பதை துறையினர் சுட்டிக்காட்ட விரும்புகின்றனர். டிஜிட்டல் திறன்களுக்கு ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகளை நிதி அமைச்சரிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.”
இதை வாய்ப்பாகக் கொண்டு, பல்கலைக்கழக பாடதிட்டத்தை பரிசீலனை செய்து, டிஜிட்டல் யுக திறன்களுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டும் என அப்ஸ்கில்லிங் நிறுவனமான குலோவர் அகாடமி துணைத்தலைவர் லக்ஷ்மி மித்ரா கூறுகிறார்.
கொரோனா தொற்று கல்வித்துறையை பெருமளவில் பாதித்தது, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், கல்வி நுட்ப நிறுவனங்கள் ஆன்லைன் திட்டங்களை அளித்தன. கல்வித்துறையை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் தகுந்த நடவடிக்கைகள் தேவை என்கிறார் கல்வி நுட்ப நிறுவனமான லீட் ஸ்கூல் இணை நிறுவனர் சுமீத் மேத்தா.
50 சதவீத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 80 சதவீதம் வரையான கட்டணத்தொகை பாக்கியை வசூலிக்கவில்லை எனும் செய்தியை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“கோவிட்-19 காரணமாக மோசமான சூழலை எதிர்கொண்ட தனியார் கல்வி நிறுவனங்களுக்கான நிவாரண நிதி அல்லது ஆசிரியர் சம்பள நிதியை அரசு உருவாக்கலாம் என்கிறார்.
லாஜிஸ்டிக்ஸ் துறை
கொரோனா தொற்று ரியல் எஸ்டேட் துறையையும் பெருமளவு பாதித்துள்ளது.
“ரியல் எஸ்டேட் துறை எதிர்கொள்ளும் பணப் புழக்க பிரச்சனை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்கிறார், ஹவுசிங்.காம் உள்ளிட்ட இணையதளங்களின் பின்னே உள்ள Elara Technologies குழும சி.இ.ஓ துருவ் அகர்வால்.
“முடங்கிக் கிடக்கும் திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு ரூ,25,000 கோடி நிதி அறிவித்திருந்தாலும், இதன் பட்டுவாடா மிகவும் மெதுவாக உள்ளது. இந்தத் திட்டத்தை விரைவுப்படுத்துவது முக்கியம்,” என்கிறார்.
அரசின் தற்சார்பு இந்தியா மற்றும் ஏற்றுமதி முனையமாக இந்தியாவை மாற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் லாஜிஸ்டிக்ஸ் துறையும் பட்ஜெட்டில் சலுகைகளை எதிர்பார்க்கிறது.
“இந்தியாவை பொருத்தவரை இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானதாகும். உலகம் மாறியிருக்கிறது. கொரோனா தொற்று லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது,” என்கிறார் லாஜிக்நெக்ஸ்ட் ஸ்டார்ட் அப் சி.இ.ஓ துருவில் சங்வி.
தற்போது அதிக அளவில் விதிகள் மற்றும் காகித பணிகள் இருப்பது, தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிப்பதை சிக்கலாக்குகிறது மற்றும் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேற காரணமாகிறது என்கிறார்.
மூலதனம்
வளர்ச்சியை எதிர்நோக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உள்ளூர் மூலதனம் முக்கியம் என்கிறார். அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களிடம் உள்ள நிதி பயன்படுத்தப்பட வேண்டும் ஆனால் இதற்குத் தேவையான விதிமுறை மாற்றம் அவசியம் என்கிறார் சித்தார்த்.
வர்த்தகம் எளிதாக செய்யும் தன்மை, வரி விதிப்பு மற்றும் வெளியேறும் தன்மை ஆகியவை இந்திய ஸ்டார்ட் அப் சூழலில் முக்கியம் என்கின்றனர்.
ஆங்கில கட்டுரையாளர்: திம்மையா புஜாரி | தமிழில்- சைபர்சிம்மன்