‘சூசைட் மிஷன்’ல் பணியாற்றிய மருத்துவ ஹீரோக்களைக் கொண்டாடும் சீனா!
கொரோனா சிகிச்சை மருத்துவப் பணி செய்துவிட்டு வீடு திரும்பும் மருத்துவர்ககளை பெருமைப்படுத்த சீனாவின் 18 நகரங்களில் கிட்டதட்ட 50 ஆயிரம் பிரம்மாண்ட எல்.ஈ.டி திரைகளில் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, வரவேற்று வருகிறது சீன அரசு.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கிய ‘கொரானோ வைரஸ்’ பாதிப்பு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. மருத்துவர்களும், மருத்துவமனைப் பணியாளர்களும் மாதக்கணக்கில் வீட்டை மறந்து உறவுகளை மறந்து, குழந்தைகளைப் பிரிந்து ரா பகலாக பணியாற்றியதன் பலனாகவே கொரானோவின் தாக்கம் குறைந்துள்ளது.
கொரானோ சிகிச்சைக்காகவே சீனாவில் 10 நாட்களில் 1000 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஓர் மருத்துவமனையே கட்டப்பட்டது. இங்கு கொரானோ பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இந்த வைரஸால் பாதிப்பேற்பட்டது. இதில் சிலர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, வீட்டுக்குக்கூடச் செல்லாமல் தூக்கிமின்றி தங்கள் உயிரையும் துச்சமென மதித்து பணியாற்றிய மருத்துவர்களும், மருத்துவமனைப் பணியாளர்களும் தற்போது சீனாவில் ரியல் ஹீரோக்களாக தூக்கி வைத்து கொண்டாடப்படுகின்றனர்.
கரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும்போது தொற்று ஏற்பட்டு உயிரிழந்த முதல் சீன மருத்துவர் லீ. இவரைத் தொடர்ந்து மேலும் சில மருத்துவர்களும், மருத்துப் பணியாளர்களும் இந்நோய் பாதிப்பேற்பட்டு உயிரிழந்தனர். இவர்களை தற்போது சீன அரசு கெளரவித்து வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் உள்ள மருத்துவர்களை அந்நாட்டு அரசு அழைத்தது. இந்த ஆப்ரேஷனுக்கு 'சூசைட் மிஷன்' என்றும் சீன அரசு பெயரிட்டு அழைத்தது. சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், சூசைட் மிஷனில் 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தாமாக முன் வந்து பங்கேற்றனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்களும் அடக்கம். குறிப்பாக இந்த சூசைட் மிஷனில் பெருமளவில் பெண் மருத்துவர்கள் பங்கேற்றது சீன மக்களை மட்டுமன்றி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த மிஷனில் பங்கேற்க யாரையும் சீன அரசு வற்புறுத்தவில்லை, தங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லை எனத் தெரிந்தபின்பும், தங்களின் செயல் தற்கொலைக்கு நிகரானது எனத் தெரிந்தபின்பும் மக்கள் உயிரைக் காக்கவேண்டும் என்ற துடிப்போடு இவர்கள் அனைவரும் இந்த மிஷனில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதற்காக சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து நோய் பாதித்த பகுதிகளுக்கு இவர்கள் அனைவரும் தனி ரயில் மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
காட்டுத் தீ போல பரவிய கொரோனோவை கட்டுப்படுத்த இந்த மருத்துவர்களும், செவிலியர்களும், சுகாதாரப் பணியாளர்களும் இரவு பகலாக உழைக்க வேண்டியிருந்தது. இவர்கள் பணிபுரியும் நேரத்தில் உணவோ, குடிநீரோ எடுத்துக் கொள்ள முடியாது. கழிப்பறைக்கு போக முடியாது, முகக் கவசம் மற்றும் மூன்று அடுக்கு உடையை நீண்ட நேரம் அணிவதால் தோல் தடிப்பு மற்றும் அரிப்பு போன்ற ஓவ்வாமையையும் பொறுத்துக்கொள்ளவேண்டும். நோய்த் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மருத்துவமனைக்கு என தனி செல்போன்களையும் வாங்கியிருக்கிறார்.
பணி முடிந்தாலும் வீட்டுக்குச் செல்ல முடியாமல் ஹோட்டல்களில் தங்கி, அங்கிருந்தபடியே தங்கள் குழந்தைகளுடன் வீடியோ கால் மூலம் பேசி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வது மட்டுமே இவர்களின் ஓரே ஆறுதல்.
கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் பலி அதிகரித்து வரும் நிலையில், இந்நோயின் கோரப்பிடியில் இருந்து மக்களை காப்பாற்ற உயிர்த் தியாகத்துக்கும் தயாராக இந்த மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் இருந்து செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ஓர் தொற்று வியாதி, நோய்த் தொற்று உதிரும் தலைமுடி வழியாகக்கூடப் பரவுவதற்கான வாய்ப்புள்ளதெனக் கூறப்படுகிறது. இதற்காக, சீனாவில் இந்த நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்கும் பெரும்பாலான செவிலியர்களில் மொட்டை அடித்துக் கொண்டு பணிபுரிந்து வந்ததும் இவர்களின் தியாகத்தின் உச்சம்.
இதன்மூலம் தொற்றுப் பரவும் அபாயம் குறையும் என்பதால் மற்றவர்களும் இதேபோல முயலலாம் எனக்கூறி, மொட்டைத் தலையுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை தொடர்ச்சியாகத் தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் சீன செவிலியர்கள். இவர்களின் தியாகத்துக்கு உலக நாடுகளில் இருந்து பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் 3 மாதங்களுக்குப் பிறகு இயல்பு நிலை திரும்பி வருவதால், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வரத் தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த ஹூபே மாகாணத்தில் மருத்துவப் பணி செய்துவிட்டு வீடு திரும்பும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக சீனாவின் 18 நகரங்களில் கிட்டதட்ட 50 ஆயிரம் பிரம்மாண்ட எல்.ஈ.டி திரைகள் மூலம் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்களை வரவேற்கும் விதமான வாசகங்களையும் வெளியிட்டு சீன அரசும் மக்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.