வீடியோ காலில் தந்தையின் இறுதிச் சடங்கு; மொட்டைமாடி உரையாடல்; கொட்டகையில் முடக்கம்...
கொரோனா பிறருக்கு பரவாமல் தடுக்க அக்கறையுடன் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்ட சிலரின் எழுச்சியூட்டும் கதைகள் இவை...
மழையாலும், வெயிலாலும் வண்ணமிழந்து காணப்பட்டது இளஞ்சிவப்பான வீட்டின் ஓடுகள். மங்கலான ஓட்டின் மீது ரபீக் சின்னன் கால்களை கவனமாய் வைத்து வீட்டு சுவரின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அவரமர்ந்த வீட்டிற்கு எதிரே உள்ள வீட்டின் மொட்டை மாடியில் நின்ற மனைவி மற்றும் குழந்தையுடன், காற்றில் கைகளை அசைத்தப்படியும் கண்களால் கதைத்துக் கொண்டிருந்தார் - மனைவி, மகளுடன் ரபீக் சின்னன் உரையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் காட்சிகள் இவை.
இப்புகைப்படத்தினை ரபீக் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர, பலராலும் விரும்பப்பட்டது, புகழப்பட்டது, பகிரப்பட்டது. ஏனென்றால், துபாயில் இருந்து கோழிக்கோட்டில் உள்ள சொந்த ஊரான திரூருவிற்கு திரும்பிய ரபீக், உலகமே போரிட்டுவரும் கொரோனா எனும் போரில் ‘விலகியிரு, வீட்டிலிரு' எனும் ஆயுதத்தின் மூலம் வெல்ல, தனது குடும்பத்திலிருந்து விலகி வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கிறார். அவர் பதிவிட்ட அப்புகைப்படத்திற்கு மேலே ரபீக்,
“#Breakthechain save our #family and #community #covid19 Home #quarantine.” என்று கேப்ஷனிட்டுருந்தார்.
ரஃபீக்னுடைய கதைகள் உத்வேகம் தருவது மட்டுமல்ல, வேகமாய் பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முன்னெச்சரிக்கையும் வெகுமுக்கியமானது என்பதையும் உணர்த்துகிறது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய வைரஸிடமிருந்து முழு உலகமும் விடுபட்டு கொள்ள முடியாமலிருக்கையில், மக்கள் ரபீக்கை எடுத்துக்காட்டாய் கொண்டு, தங்களையும் மற்றவர்களையும் காப்பாற்றிட தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.
துபாயில் செஃப் ஆக பணிபுரியும் ரபீக், டிக் டாக்கிலும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், அவர் ஒரு வீட்டின் பால்கனியில் அமர்ந்திருக்க, அவருடைய குழந்தை அடுத்ததாக இருந்த வீட்டின் மொட்டை மாடியில் நின்று நெகிழ்ச்சியான உரையாடல் நிகழ்த்த பின்னொளியில் ‘குச்சு குச்சு ஹோதா ஹை' பாடல் இசைத்துக் கொண்டிருந்தது.
அவ்வீடியோவிற்கு கீழ் கமெண்ட் பாக்சில் ரபீக்-இடம் ஒருவர்,
‘நீங்கள் இப்போது ஏன் வீட்டிற்கு வந்தீர்கள்?' என்று கேட்க அதற்கு அவர், ‘14 நாட்கள் (தனிமைப்படுத்தல்) முடிந்ததும், நான் 45 நாட்கள் என் மகளுடன் செலவிட முடியும், அதனால்தான் நான் வந்தேன்,' என்றுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கேரளா திரும்பிய இளைஞர் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டதன் காரணமாய், தந்தையின் இறுதிச் சடங்கை ஜன்னல் வழியே பார்த்த துயரசம்பவமும் கொரோனாவின் ஆட்டத்தினால் நிகழ்ந்தவைகளுள் ஒன்று.
படுக்கையிலிருந்து கீழே விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தந்தையை உடனிருந்து கவனித்துகொள்ள, கத்தாரிலிருந்து கேரளாவிற்கு விரைந்துள்ளார் 30வயதான லினோ ஆபெல்.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்றான கத்தாரிலிருந்து லினோ திரும்பியதாலும், லேசான இருமல் இருந்ததாலும் மருத்துவர்களிடம் சோதனை செய்துகொண்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே, பக்கவாதத்தால் பாதிப்படைந்த அவரது தந்தையின் உடல்நிலை மோசமடைந்து மார்ச் 9ம் தேதி காலமானார்.
ஆபெல் அதே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த போதிலும், அவர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்ததால் கடைசியாக ஒரு முறை அவரது தந்தையை பார்க்க முடியவில்லை. ஆம்புலன்சில் அவரது தந்தையின் உடலை எடுத்து சென்றபோது, ஆபெல் அவரது அறையின் ஜன்னலிலிருந்து இறுதியாக ஒருமுறை அவரது அப்பாவை பார்த்துள்ளார். அவரது தந்தையின் கடைசி சடங்குகளை வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது தந்தையை சந்திப்பதற்காக நாடு திரும்பிய போதிலும், தனிமைப்படுத்தல் என்ற சமூக அர்ப்பணிப்புமிகு முடிவினை எடுத்த ஆபெல்-ஐ, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட பலரும் பாராட்டினர்.
‘தனிமை வார்டு ஒரு வதை முகாம் அல்ல' என்று குறிப்பிட்டு ஆபெல், அவரது அவலநிலையை ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 12 அன்று பதிவிட்டார். நெஞ்சை கணக்கச் செய்யும் அப்பதிவு, வெளிநாட்டிற்கு சென்று திரும்பியவர்கள் தங்கள் குடும்பங்களை பாதுகாக்க தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றது. அப்பதிவில்,
‘‘நான் என்னைப் பற்றி தகவல்களை மருத்துவர்களுக்கு தெரிவிக்கவில்லை என்றால், என்னால் கடைசியாக ஒரு முறை என் அப்பாவின் முகத்தை பார்த்திருக்க முடியும். ஆனால் நான் அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால், ஒருவேளை நான் பாதிக்கப்பட்டிருந்தால் நோயைப் பரப்ப வேண்டாமே என்று தனிமைப்படுத்திகொள்ள முடிவு செய்தேன். நாட்டிலுள்ள வெளிநாட்டவர்கள் சுகாதார அதிகாரிகளிடம் உங்களது பயணத்தை பற்றிய தகவல்களை தெரிவியுங்கள். நீங்கள் ஒரு சில நாட்கள் தனித்திருக்கலாம். ஆனால், மீதமுள்ள காலத்தை உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவிடலாம்,'' என்று அவர் எழுதியிருந்தார்.
இதற்கு நேரெதிராய் கேரள மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது காசர்கோடை சேர்ந்த ஒருவரது செயல். ஏனெனில், துபாயிலிருந்து கேரளா திரும்பிய அவரை தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறித்திய நிலையில், அவர் கிளப்கள், பொதுநிகழ்ச்சிகள், திருமணம் என பல்வேறு இடங்களுக்கு பயணித்து முற்றிலும் பொறுப்பற்றவராய் நடந்து கொண்டார்.
ஒரு தனிமனிதனின் செயலால் அம்மாநில சுகாதாரத்துறைக்கும் கூடுதல் பளுவாகி, மாநிலம் எங்கும் நெகட்டிவிட்டி பரவியது. பொறுப்பற்ற இத்தகுச் செயலை கேரள சேட்டன் செய்த அதே வேளையில், மற்றொரு ‘காசர்கோட்கரன்' -இன் கதையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
குவஹாத்தியை தளமாகக் கொண்ட ஆராய்ச்சி அறிஞர் தீரஜ் பலேரி, அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வளைகுடா நாட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை அடைந்த அம்மனிதரைப் பற்றி பதிவிட்டிருந்தார்.
‘‘மத்தியக் கிழக்கு நாடுகளிலிருந்து சொந்த ஊரான காசர்கோட்டின் செங்கலாவை வந்தடைய திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு வந்துள்ளார் அவர். அவரது வீட்டிற்கு அருகே உள்ள விமானநிலையத்தில் உள்ள விமானம் டிக்கெட் கிடைக்காததால், திருவனந்தபுரம் வந்தடைந்துள்ளார்.
அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்ற போதிலும், அவர் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் இருந்து வருவதால் விமான நிலையத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் தொண்டையிலிருந்து உமிழ்நீரை சேகரிக்கும்படி கட்டாயப்படுத்தினார். அவரிருக்கும் பகுதியிலிருந்து வெகு தொலைவிலுள்ள அவரது வீட்டிற்கு செல்லவதற்காக ஆம்புலன்சை அழைத்து இடையில் எங்கும் நிற்காமல், எவரிடமும் எவ்வித தொடர்புமும் இல்லாமல் பயணித்துள்ளார். அதற்காக ரூ.18,000 ஆம்புலன்சிற்கு கட்டணமாக செலுத்தியுள்ளார்.
வீட்டிற்கு வந்த அவர், யாரையும் சந்திக்க மறுத்துவிட்டார். வீட்டிற்குள்ளும் செல்லாமல், அவர் கழிவறை மற்றும் அடிப்படை வசதிகளைக் கொண்ட சிறிய கொட்டகையில் தங்கத் தொடங்கினார். யாரையும் அவர் அருகில் வர விடாமல், அவருக்கென தனி தட்டில் உணவு உட்கொண்டு அதை அவரே சுத்தப் படுத்தி வந்துள்ளார்.
சுகாதார அதிகாரிகள் முகமூடிகளை அளிக்க வந்தபோதும், அவர் ஏற்கனவே ஒரு மருத்துவ கிட் வாங்கி வைத்திருந்ததால் அவற்றைத் திருப்பிக் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது சோதனையின் முடிவு பாசிட்டிவ்வாக வந்த நிலையில் அவர் தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு எவ்விதமான சுமையும் அளிக்காமல் சிகிச்சைக்காக மருத்துவமனையின் தனிமைப்படுத்தல் வார்டில் அனுமதிக்கப்பட்டார்!'' என்று தீரஜ் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு ஃபேஸ்புக் பயனரான டாக்டர் நெல்சன் ஜோசப், மலப்புரத்தை சேர்ந்த ஒருவரது கதையை பகிர்ந்திருந்தார்.
‘‘ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து சொந்த ஊர் திரும்பிய அவர், விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று கொரோனா வைரஸை பரிசோதித்துள்ளார். பின், அவர் வீட்டிற்குச் சென்று தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவரது சோதனை முடிவு நேர்மறையாக வந்தநிலையில் அவர் ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகை பற்றி அக்கறை கொண்டவரை பற்றி உலகம் தெரிந்து கொள்ள வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும்,'' என்று எழுதி டாக்டர் நெல்சன் பதிவிட்டுள்ளார்.
இப்படியான இக்கட்டான காலகட்டத்தில் எவ்வாறு சுகாதாரம் பேணுவது குறித்தும், சமூக விலகலின் முக்கியத்துவம் குறித்தும் பிரபலங்களும் குறுகிய வீடியோக்களில் பேசி வெளியிட்டு வருகின்றனர்.
லண்டனிலிருந்து திரும்பி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நடிகை சுஹாசினி மணிரத்னத்தின் மகன் நந்தனுடன், 10 அடி தூரம் தள்ளி சுஹாசினி பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கொச்சியைச் சேர்ந்த ஜார்ஜ் நினன், பத்து நாட்களுக்கு முன்பு கென்யாவிலிருந்து திரும்பி வந்ததிலிருந்து அவர் எவ்வாறு சுய தனிமைப்படுத்தலில் இருந்தார் என்பதை தி நியூஸ் மினிட்டிடம் பகிர்ந்தார்.
‘‘விமான நிலையத்தில் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் பரிசோதிக்குமாறு கூறினர். எனக்கு ஏதேனும் அறிகுறிகள் இருக்கிறதா என்று மருத்துவர்கள் பரிசோதித்தனர். தொடர்ந்து என்னை கண்காணிப்பதற்காக செவிலியர் ஒருவரை நியமித்தார். அன்றிலிருந்து நான் வீட்டிற்குள் தனிமைப்பட்டுள்ளேன். என் மனைவியுடன் மட்டுமே தொடர்பு கொண்டுள்ளேன். நாங்கள் இருவருமே எதற்கும் வெளியே செல்வதில்லை. வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியங்களையும்கூட சூப்பர் மார்க்கெட்டில் இருந்து ஆன்லைனில் ஆர்டர் செய்துகொள்கிறோம்,'' என்று அவர் கூறியுள்ளார்.
அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகையில், சில சேட்டன்களது சமூகப் பொறுப்புணர்வு மிக்க சம்பவங்கள் இவைகள்... அடுத்தவர்களுக்கு நோய் தொற்றலை ஏற்படுத்திவிடக் கூடாதென தங்களைத் தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் இவர்களை போன்று செயல்படும் அனைவரும் பாராட்டுக்குரியவர்களே.
அனைவரும் இதை கடைப்பிடிக்கையில், வைரஸ் பரவலை எளிதில் தடுக்கலாம். ஆதலால், விலகியிருங்கள்... வீட்டிலிருங்கள்!