விமானத்தில் தமிழகம் வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய 15 விதிமுறைகள்!
நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாவிட்டால், மாநிலத்துக்குள் நுழைய அனுமதி இல்லை என தெரிவித்துள்ளது.
இன்று முதல் விமானப் போக்குவரத்து நாடு முழுவதும் துவங்கும் நிலையில், மத்திய அரசு விமானப் பயணத்துக்கான வழிகாட்டுதல்களையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில நிலவரப்படி கட்டுப்பாட்டு விதிகளிலும், வழிகாட்டுதல்களிலும் மாற்றங்கள் செய்து அறிவிக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதை அடுத்து நேற்று தமிழக அரசு விமானம் மூலம் பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம் இதோ:
1. எல்லா பயணிகளும் காய்ச்சல் பரிசோதனைக்கான தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்படுவார்கள்.
2. அறிகுறி இல்லாத பயணிகள், 14 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். தமிழகத்தில் வீட்டில்லாதவர்கள் கட்டண அடிப்படையில் இயங்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அரசால் அனுப்பப்படுவார்கள். இதற்காக ஹோட்டல்கள் தயார் நிலையில் உள்ளது. பின்னர் அவர்களுக்கு அறிகுறிகள் தொடங்கினால், அவர்கள் மாவட்ட உதவி எண் 1077 தொடர்பு கொண்டு அல்லது அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனை அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.
3. வரும் பயணிகளில் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவ மையத்துக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களுக்கு பிசிஆர் டெஸ்ட் செய்யப்பட்டு அவரின் நிலை ஆராயப் படும்.
- கோவிட் பாசிடிவ் வந்த, மிதமான/அதிகமான அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள்.
- கோவிட் பாசிடிவ் வந்த, லேசான அறிகுறிகள் உள்ள பயணிகள் விருப்பத்தின் பேரில் வீட்டு தனிமைப்படுத்தலுக்குச் செல்ல அல்லது கோவிட் சிகிச்சை மையத்துக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
- கோவிட் நெகடிவ் வந்தவர்கள் வீட்டில் கட்டாய தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் இருக்கவேண்டும்.
4. தமிழகத்துக்கு வந்து இறங்கும் அனைத்து விமானப் பயணிகளும், தமிழக அரசின் இ-பாஸ் (E-pass) பெறுவது கட்டாயம் ஆகும். விமான டிக்கெட் புக் செய்த பின்னர் அவர்கள் உடனடியாக தங்களின் பெயர், பயண விவரம், ஊர் என அனைத்துத் தகவல்களையும் https://tnepass.tnega.org/ தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்கப் படுவார்கள்.
5. பயணிகள் இ-பாஸ் பெறுவதற்கு, சில விவரங்கள் மற்றும் தங்களைப் பற்றிய அறிவிப்புகளை பதிவிடுவது கட்டாயம் ஆகும்.
6. இ-பாஸ் பெற சில விவரங்களை பதிவிடாதவர்கள், தமிழகம் வர அனுமதிக்கப் படமாடார்கள்.
7. ஒருவருக்கு மேல் பயணிக்கும் பயணிகள் கூடுதல் பயணிகள் விவரங்களையும் பதிவிடுவது கட்டாயமாகும். இ-பாஸ் பெற எல்லாருடைய விவரங்களையும் தரவேண்டும்.
8. இ-பாஸ், பயணியின் மொபைல் போன் எண்ணிற்கு QR Code ஆக அனுப்பப்படும். அதை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளவேண்டும்.
9. தமிழகம் வரும் அனைத்து பயணிகளும் ‘Quarantine' என்று மையால் சீல் வைக்கப்படுவார்கள். அது இல்லாமல் அவர்கள் விமான நிலையம் விட்டு வெளியே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
10. தமிழகம் வரும் விமானங்களில் பயணிக்கும் பயணிகளிடம், விமான நிறுவனங்கள் இ-பாஸ் இருப்பதை உறுதி செய்தவுடன் போர்டிங் பாஸ் வழங்கக் கேட்டுக்கொள்ளப் படுகிறது.
11. தமிழகம் வந்து சேரும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து தங்கள் வீடுகள்/ஹோட்டல் செல்ல, இ-பாஸ்’ல் குறிப்பிட்டுள்ள சொந்த வாகனம் அல்லது வாடகை வாகனங்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
12. எல்லா விமான நிலையங்களின் வெளி வாயிலில், தமிழகத்தின் இ-பாஸ் காட்டினால் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படும். பாஸ் இல்லாதவர்கள் ஊருக்குள் அனுமதி இல்லை.
13. மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்ட விமான நிலைய வாயிலில், இ-பாஸ் மற்றும் ‘Quarantine' சீல் உள்ள பயணிகளை மட்டும் வெளியே அனுமதிப்பதை கண்காணிக்க வேண்டும்.
14. பயணிகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள் விமான நிலையம் உள்ளே ஓட்டுனர் மற்றும் ஒரு கூடுதல் நபரோடு அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பிட்ட இடத்தில் வாகனங்களை சமூக இடைவெளி விட்டு நிறுத்தவேண்டும்.
15. விமான நிலையத்தில் உள்ள டாக்சி பயன்படுத்துவோருக்கு வாகன விவரங்கள் அனுப்பப்படும். மேலும் அந்த தகவல்கள் இ-பாஸ்-ல் குறிப்பிடப்படும். டாக்சி, பயணியை ஏற்றிச்செல்லும் முன், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும். பயணிகள் முக்கக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். ஓட்டுனருடன் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை விமானப் பயணிகள் பின்பற்றினால் மட்டுமே தமிழகத்துக்குள் வரமுடியும் என தமிழக அரசின் அறிக்கை குறிப்பிடுகிறது.