ஆலோசனைகளை முடித்த நிதியமைச்சர்: ஜூலை 23-ம் தேதி பட்ஜெட் தாக்கல்!
2047க்குள் விக்ஷித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா)க்கான பாதையை அமைக்கும் மோடி 3.0 இன் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
ஜூலை 23-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டிற்கான ஆலோசனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடித்துக் கொண்டார்.
இதன்படி, வரும் ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். பட்ஜெட்டுக்காக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
![Nirmala Sitharaman](https://images.yourstory.com/cs/18/7be5482008d911e9bb473d9d98ed1e05/Imagegwjv-1720426244136.jpg?fm=png&auto=format&w=800)
2047க்குள் விக்ஷித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா)க்கான பாதையை அமைக்கும் மோடி 3.0 இன் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.
இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டிற்காக தொழிற்துறை மற்றும் சமூகத்துறைப் பிரதிநிதிகளிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
18வது லோக்சபாவின் அரசியலமைப்பிற்குப் பிறகு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி தனது முதல் உரையில், "இந்த பட்ஜெட் அரசாங்கத்தின் தொலைநோக்கு கொள்கைகள் மற்றும் எதிர்கால பார்வைக்கு பயனுள்ள ஆவணமாக இருக்கும் முக்கிய பொருளாதார மற்றும் சமூக முடிவுகளுடன், பல வரலாற்று நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் காணப்படும்” என்று கூறியது நினைவுகூரத்தக்கது.
இந்தப் பட்ஜெட்டில் என்னென்ன தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதற்காக நிர்மலா சீதாராமன் 10 துறையினரின் 120 பிரதிநிதிகளை ஆலோசனை செய்துள்ளார். அதாவது விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய பொருளாதார நிபுணர்கள்; தொழிற்சங்கங்கள்; கல்வி மற்றும் சுகாதாரத் துறை; வேலைவாய்ப்பு & திறன்; சிறு, குறு நடுத்தர தொழில் துறையினர், வர்த்தகம் மற்றும் சேவைகள்; தொழில்; பொருளாதார வல்லுநர்கள்; நிதித் துறை மற்றும் மூலதனச் சந்தைகள்; அத்துடன், உள்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் நகர்ப்புறத் துறை ஆகிய பிரதிநிதிகளிடம் ஆலோசனைகளைப் பெற்றார்.
நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நிதி செயலாளர் மற்றும் செயலாளர் (செலவு), டி வி சோமநாதன்; பொருளாதார விவகாரங்கள் செயலர் அஜய் சேத், டிஐபிஏஎம் செயலர் துஹின் கே பாண்டே, நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி மற்றும் வருவாய்த்துறை செயலர், சஞ்சய் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனையின் போது, பங்கேற்பாளர்களுக்கு மதிப்புமிக்க ஆலோசனைகளைப் பகிர்ந்ததற்காக சீதாராமன் நன்றி தெரிவித்ததோடு 2024-25 மத்தியப் பட்ஜெட்டைத் தயாரிக்கும் போது அவர்களின் பரிந்துரைகள் கவனமாக ஆராயப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று நிபுணர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு உறுதியுமளித்தார்.