நாட்டுக்கே பட்ஜெட் போடப் போகும் முதல் பெண் நிதி அமைச்சர்!
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக பெண் நிதியமைச்சர் (தனி பொறுப்பு) ஒருவர் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். ஜூலை 5ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் நிதி பட்ஜெட்டை நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
மோடி சர்கார் 2.0 ஆட்சியில் இந்த நிதிநிலை ஆண்டிற்கான பட்ஜெட் ஜூலை 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் என்றாலே நிதி பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட் குறித்து மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முதல் அத்தியாயத்தில் செய்த மிகப்பெரிய மாற்றம் ரயில்வேக்கென தனி பட்ஜெட் வெளியிடாமல் நிதி பட்ஜெட்டுடனே இணைத்தது.
நிதி பட்ஜெட்டில் அரசின் அடுத்த 5 ஆண்டுக்கான திட்டங்கள் என்னென்ன, வருமானவரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இருக்குமா, நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை பட்ஜெட் குறைக்குமா என்ற கேள்விகளுக்கான பதில் பட்ஜெட் அறிவிப்பிலேயே இருக்கிறது.
மோடி சர்கார் 2.0வில் தாக்கல் செய்யப்படும் 2019 நிதி பட்ஜெட்டின் மற்றொரு சிறப்பு நாட்டிலேயே முதன்முறையாக பெண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனிப்பொறுப்பில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது கூடுதல் பொறுப்பாகத்தான் நிதித்துறை அவர் வசம் ஒப்படைக்கப்பட்டது. எனவே பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நிர்மலா சீதாராமன். பட்ஜெட் தாக்கலுக்காக முழுவீச்சில் தயாராகி வரும் நிதியமைச்சர் பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு தொழில் துறை சார்ந்தவர்களுடன் தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தையும் நடத்தி நடைமுறைப் பிரச்னைகள் என்னென்ன என்பதை கேட்டறிந்துள்ளார். பட்ஜெட் ஆவணங்களை அச்சிடும் பணி தொடங்கிய நிலையில் சம்பிரதாய அடிப்படையில் மத்திய நிதியமைச்சகத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அல்வா தயாரித்து வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
1959ம் ஆண்டு மதுரையில் பிறந்த நிர்மலா, திருச்சி சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொருளாதாரம் படித்த பயின்றுள்ளார். 1986ம் ஆண்டு பிரகலா பிரபாகரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் லண்டனுக்கு இடம்பெயர்ந்தார். லண்டனில் சாதாரண பணி வாழ்க்கையைத் தொடங்கி, பிரைஸ்வாட்டர் ஹவுஸில் மூத்த மேலாளராக பணியாற்றி இருக்கிறார்.
1991ம் ஆண்டு இந்தியா திரும்பியவர் பாஜக செய்தித் தொடர்பாளராக ரவிசங்கர் பிரசாத் தலைமையின் கீழ் செயல்படத் தொடங்கினார். 2006ம் ஆண்டில் பாஜகவில் இணைந்த நிர்மலா கட்சியில் பிரபலமடையத் தொடங்கினார். தனது மகள் இந்திய மண்ணில் பிறக்க வேண்டும் என்பதற்காகவே லண்டனில் வகித்து வந்த உயர் பொறுப்பை விட்டு விட்டு கணவருடன் இந்தியா திரும்பினார் நிர்மலா. குடும்பத்துடன் ஹைதராபாத்தில் குடியமர்ந்தவர் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள் தரமான கல்வி பெறுவதற்கான பள்ளியை ஹைதராபாத்திலேயே தொடங்கினார். பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர் 2003 – 2005 காலகட்டத்தில் தேசிய மகளிர் ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.
தனது 60வது வயதில் 17வது நாடாளுமன்றக் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். பொதுத்தேர்தலுக்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்ற பின்னர் நடைபெறும் பட்ஜெட் கூட்டம் என்பதால் இந்த நிதிநிலை அறிக்கையில் வேலைவாய்ப்புக்கென அரசு செய்துள்ள அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் மக்கள்.
நிதிநிலை அறிக்கையில் மக்களுக்கு பயனுள்ள அம்சங்களை சேர்ப்பதற்காக மக்களிடம் கருத்து கேட்பு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அரசின் இணையதள பக்கத்தில் நாட்டு குடிமக்கள் தெரிவித்த திட்டங்கள், யோசனைகளை நிதித்துறை அதிகாரிகள் குறிப்பெடுத்து பட்ஜெட் தயாரிப்பின் போது அதுகுறித்து ஆலோசித்ததாக நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிர்மலாவின் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனராக் சிங் தாகூர், முதன்மை பொருளாதார ஆலோசசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதார மந்த நிலை, நிதித்துறையில் நெருக்கடியை ஏற்படுத்தும் அம்சங்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீடுகள், ஏற்றுமதி ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் நிதிநிலை பட்ஜெட்டில் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ஜூலை 4ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து ஜூலை 5ம் தேதி நிதிநிலை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாட்டின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற பெருமையோடு தேசிய ஜனநாய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் தனக்குக் கொடுத்த பதவியில் சிறந்த முறையில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார் நிர்மலா.
அறிவாற்றல், திறமை, முழு ஈடுபாடுடன் பணியாற்றுதல் உள்ளிட்டவையே பிரதமர் நரேந்திர மோடி நிர்மலா சீதாராமனிடம் உயர் பொறுப்புகளை வழங்கக் காரணமாக இருந்துள்ளது. முதலில் பாதுகாப்புத் துறை அமைச்சராக திறம்பட செயல்பட்டவர் தற்போது நிதியமைச்சராக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அவரின் பட்ஜெட் அறிவிப்புகளுக்காக நாடே காத்திருக்கிறது.
கட்டுரையாளர் : கஜலெட்சுமி