'ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள்' - முகேஷ் அம்பானி முதல் தமிழக பணக்காரர்கள் வரை!
கொரோனா தாக்கத்திலும் அதிகரித்த சொத்துமதிப்பு!
புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ், இந்த ஆண்டுக்கான இந்திய பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றுநோய்களின் போதும் இந்திய பணக்காரர்கள் 50 சதவீதம் அதிகமாகவே வருவாய் ஈட்டியுள்ளனர் என்று ஃபோர்ப்ஸ் இதழ் சொல்லியுள்ளது.
மேலும், உயரும் பங்குச் சந்தை, அதிக அளவு பணப்புழக்கம் மற்றும் புதிய கால டிஜிட்டல் சேவைகளுக்கான தேவை ஆகியவை தொற்றுநோய்களின் போது இந்தியாவின் பணக்காரர்களுக்கு அதிகமாக உதவியது என்றும் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையை எதிர்கொண்டாலும் கூட, 2021 ஃபோர்ப்ஸ் பட்டியலில் 100 பணக்கார இந்தியர்களின் சொத்து மதிப்பு 775 பில்லியன் டாலராக உயர்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த 12 மாதங்களில் 257 பில்லியன் டாலர் அல்லது 50% அதிகரிப்பு ஆகும் என்று ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது.
முதலிடத்தில் முகேஷ் அம்பானி!
இந்தப் பட்டியலில் வழக்கம் போல் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். அவர் முதலிடம் பிடிப்பது இது 14வது ஆண்டாகும். அவரின் சொத்து மதிப்பு 92.7 பில்லியன் டாலர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அம்பானி தனது நிகர மதிப்பில் 4 பில்லியன் டாலர்களைச் சேர்த்துள்ளார். டெலிகாம், டிஜிட்டல் மற்றும் சில்லறை வணிகங்களின் லாபங்கள் காரணமாக பங்குச் சந்தையில் ரிலையன்ஸின் நிலையான வளர்ச்சி அவருக்கு தொடர்ந்து ஏறுமுகத்தை கொடுத்துள்ளது.
கவுதம் அதானி 74.8 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்துள்ளார். ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி,
அதானி இந்தியாவின் பணக்காரர்களின் கூட்டுச் செல்வத்தின் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் அதானி சொத்துகள் கிட்டத்தட்ட 25.2 பில்லியன் டாலரிலிருந்து 74.8 பில்லியன் டாலர் என்ற அளவில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. அவரது அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் கடந்த 12 மாதங்களில் வெகுவாக உயர்ந்ததே இந்த புதிய உச்சத்துக்கு காரணம்.
இதனிடையே, மென்பொருள் நிறுவனமான HCL இன் நிறுவனர் ஷிவ் நாடார் 31 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டில் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் அதிகரித்ததால், அவரது நிகர மதிப்பு இந்த ஆண்டு 10 பில்லியன் டாலர்கள் அதிகரித்து இந்த நிலையை அடைந்துள்ளது.
சில்லறை விற்பனையாளர் ராதகிஷன் தமானி தனது நிகர மதிப்பு 15.4 பில்லியன் டாலரிலிருந்து 29.4 பில்லியன் டாலராக இரட்டிப்பாகி பட்டியலில் நான்காவது இடத்தை தக்க வைத்துள்ளார். அவரது அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் கடந்த ஆண்டு வலுவான வளர்ச்சியைக் கண்டது. மேலும் 22 புதிய கடைகளை இந்தியா முழுவதும் திறந்திருந்தார்.
சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனர் சைரஸ் பூனாவல்லா, 19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். தடுப்பூசி இயக்கத்தின் காரணமாக அவரது சொத்து மதிப்பு இந்த வருடத்தில் வேகமாக அதிகரித்துள்ளது.
லக்ஷ்மி மிட்டல் ($ 18.8 பில்லியன்), சாவித்திரி ஜிண்டால் ($ 18 பில்லியன்), உதய் கோடக் ($ 16.5 பில்லியன்), பல்லோன்ஜி மிஸ்திரி ($ 16.4 பில்லியன்) மற்றும் குமார் மங்கலம் பிர்லா ($ 15.8 பில்லியன்) ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு பட்டியலில் ஆறு புதியவர்கள் உள்ளனர் மற்றும் அவர்களில் பாதி பேர் வளர்ந்து வரும் கெமிக்கல் செக்டாரை தொழிலாக கொண்டவர்கள். 93வது இடத்தில் இருக்கும் அசோக் பூப் ($ 2.3 பில்லியன்), 97வது இடத்தில் இருக்கும் தீபக் நைட்ரேட்டின் தீபக் மேத்தா ($ 2.05 பில்லியன்) மற்றும் 100வது இடத்தில் இருக்கும் யோகேஷ் கோத்தாரி ($ 1.94 பில்லியன்) ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.
தமிழகத்தைச் சேர்ந்த பணக்காரர்கள்!
தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் மூன்றாம் பிடித்திருக்கும் நிலையில், 41வது இடத்தில் முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் பிடித்துள்ளனர்.
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது சகோதரர்கள் 3.75 பில்லியன் டாலர் மதிப்புடன் இந்தப் பட்டியலில் 55ம் பிடித்துள்ளனர். இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த கலாநிதி மாறன் பட்டியலில் 2.75 பில்லியன் டாலர் மதிப்புடன் 78வது இடம்பிடித்திருக்கிறார்.
இதேபோல், வேதாந்தா நிறுவனர் அனில் அகர்வால் 3 பில்லியன் டாலர் மதிப்புடன் 63வது இடத்தையும், அப்போல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி 2.53 பில்லியன் டாலர் மதிப்புடன் 88ம் இடமும் பிடித்துள்ளார்.
தகவல் உதவி: ஃபோர்ப்ஸ்