'கொரோனாவிற்கு பிறகு இளம் தலைமுறையின் மனநிலை கடும் பாதிப்பு' - ஆய்வு முடிவு சொல்வது என்ன?
கொரோனாவிற்கு பிறகு 18 முதல் 24 வயதுடையவர்களில் 51 சதவீதம் பேர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
World Mental Health Day: கொரோனாவிற்கு பிறகு 18 முதல் 24 வயதுடையவர்களில் 51 சதவீதம் பேர் மிகுந்த மன உளைச்சலுக்கும், மனநலத்தை காக்க போராடி வருவதாகவும் சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இந்தியர்களின் மன ஆரோக்கியம்:
இந்தியாவின் க்ரியா பல்கலைக்கழகத்தில் உள்ள மனித மூளை மற்றும் மனதிற்கான Sapien Labs மையம் 'இந்தியாவின் மன நிலை' பற்றிய புதிய ஆய்வுத் தகவல்களை வெளியிட்டுள்ளது. 18 முதல் 24 வயதுடைய ஆங்கிலம் பேசக்கூடிய, இணையதளத்தை பயன்படுத்த அறிந்த இளம் தலைமுறையினரை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 2023ம் ஆண்டு வரை இளம் தலைமுறையினரின் மன நலம் எவ்வாறு மாறியுள்ளது என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது.
குளோபல் மைண்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏப்ரல் 2020 மற்றும் ஆகஸ்ட் 2023க்கு இடையில் பெறப்பட்ட 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 106,427 பேரிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இளம் தலைமுறை பாதிப்பு:
சமூக தொடர்புகள் குறைந்தது, வேலையின்மை விகிதங்கள் அதிகரிப்பு, இணையம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரிப்பு போன்ற காரணங்களால் தொற்றுநோய்க்கு பிறகான 2020 முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் இந்தியர்களின் மன நலம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக 18 முதல் 24 வயதுடையவர்களுடைய மனநல மதிப்பெண்கள் அதிக அளவில் சரிந்துள்ளது.
பெரியவர்களை விட 18-24 வயதுடையவர்களிடையே மன ஆரோக்கியத்தில் மிகவும் குறைவான மாறுபாடு இருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
மேலும், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரண்டும் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் 200 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் தொழிலாளர் சந்தையில் நுழையலாம் என்பது வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கக்கூடும் என்பது, அதிகம் படித்த, குறிப்பாக ஆங்கிலம் பேசக்கூடிய இளைஞர்களைக் கூட கவலை மனநிலையில் ஆழ்த்தியுள்ளது.
இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய Sapien Labs Center for Human Brain and Mind, இந்தியாவின் இயக்குநர் ஷைலேந்தர் சுவாமிநாதன்,
“இந்தியாவில் உள்ள மாநிலங்கள் முழுவதும், இளைஞர்கள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். இந்த ஆய்வானது உளவியல் ஆதரவு மற்றும் நெருக்கடி தலையீடுகள் மூலம் மனநல கோளாறுகளை நிர்வகிப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முயல்கிறது. சிக்கலின் அளவு மற்றும் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, இன்னும் தடுப்பு அணுகுமுறை தேவைப்படலாம். முன்கூட்டிய எச்சரிக்கை சமிக்ஞைகளை வழங்குவதற்கு, இளைஞர்களின் திறன், வலுவான தரவு ஆகியவை காலத்தின் தேவையாகும். உதாரணமாக ஸ்மார்ட்போன்களுக்கு முந்தைய 18-24 வயதுடைய தலைமுறையினரின் மன நல ஆரோக்கியம் சிறப்பாக இருந்ததை கண்டறிந்துள்ளோம்,” என்றார்.
இந்தியாவில் உள்ள மனித மூளை மற்றும் மனதிற்கான Sapien Labs மையம், Sapien Labs (USA) மற்றும் Krea பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இது மனித மூளை மற்றும் மனம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கற்றலைத் தொடரும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து ஆங்கிலம் பேசும் பங்கேற்பாளர்களுக்கு அப்பால், பிற மொழி குழுக்களையும் சேர்த்து ஆய்வு பணிகளை விரிவுபடுத்த மையம் திட்டமிட்டுள்ளது.