பாலியல் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு உதவும் கிரீஷ் குல்கர்னி!
மகாராஷ்டிராவைச் சேர்ந்த கிரீஷ் குல்கர்னி ஸ்னேகாலயா என்கிற என்ஜிஓ தொடங்கி சிகப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர்களுக்கு உதவி வருகிறார்.
கிரீஷ் குல்கர்னி மகாராஷ்டிராவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். குடும்பத்தில் பலர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள். காந்தியின் கொள்கைகளைப் பின்ற்றும் ஏராளமான சமூகப் பணியாளர்கள் மற்றும் தலைவர்கள் இவருக்கு பரிச்சயமாகியிருந்தனர்.
இப்படிப்பட்டவர்களுடன் பழகிய கிரீஷ் குல்கர்னிக்கு இயற்கையிலேயே சமூக அக்கறை இருந்தது. இந்த அக்கறையே 1989-ம் ஆண்டு ஸ்னேகாலயா (Snehalaya) என்கிற என்ஜிஓ தொடங்க ஊக்குவித்தது. 1991ம் ஆண்டு இந்த என்ஜிஓ அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
கிரீஷ் தனது என்ஜிஓ மூலம் கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, மறுவாழ்வு, விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் என பல விதங்களில் பாலியல் தொழிலாளர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் உதவி வருகிறார்.
பாலியல் தொழிலாளர்களுக்கு உதவத் தூண்டிய சம்பவங்கள்
கிரீஷ் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். கணிதம் படிப்பதற்காக அவரது பெற்றோர் அவரை டியூஷன் சேர்த்தார்கள். மகேஷ் டியூஷன் படிக்கும் இடத்தைச் சென்றடைய மகாராஷ்டிராவின் அகமதாபாத்தில் உள்ள சித்ர கல்லி என்கிற சிகப்பு விளக்கு பகுதியைக் கடந்து சென்றார்.
ஒருமுறை டியூஷன் வகுப்பிற்கு அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது உள்ளூர் தாதா ஒருவன் ஒரு சிறுமியை அடித்துக்கொண்டிருப்பதை கிரீஷ் கவனித்தார். சக வயதுடைய அந்த சிறுமி அடிவாங்குவதைக் கண்டு கிரீஷ் அதிர்ந்துபோனார்.
அந்தச் சிறுமிக்கு எஸ்.டி.டி எனப்படும் பால்வினை நோய் இருப்பதால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தமுடியவில்லை. இதற்காகவே அந்த தாதா கோபத்தில் சிறுமியைத் தாக்கியுள்ளார்.
”என் வயதுடைய ஒரு சிறுமி துன்புறுத்தப்படுவதைப் பார்த்து திடுக்கிட்டேன். இந்தச் சிறுமி போன்றோருக்கு உதவவேண்டும் என்று தோன்றியது,” என்று சோஷியல்ஸ்டோரி இடம் தெரிவித்தார் கிரீஷ்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கிரீஷ் கல்லூரியில் சேர்ந்தார். பல நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களில் ஒருவர் சிகப்பு விளக்கு பகுதியில் வசித்தார். அதனால் வழக்கமாக அந்த நண்பர் சக நண்பர்களை வீட்டிற்கு அழைப்பதில்லை. தர்மசங்கடமாக உணர்ந்தார்.
ஒருமுறை கிரீஷையும் மற்ற நண்பர்களையும் அவர் வீட்டிற்கு அழைத்தார். அவர்களும் சென்றிருந்தார்கள். அப்போது அந்த நண்பரின் அம்மா, சகோதரி, பாட்டி என அனைவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் அந்தத் தொழிலை விடமுடியாமல், கௌரவமாக வாழமுடியாமல் போராடிக் கொண்டிருப்பதைத் தெரிந்துகொண்டார். கிரீஷ் பல சமூக நலப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் சிகப்பு விளக்கு பகுதியில் உள்ள பெண்களுக்கு உதவுவதில் முழுகவனம் செலுத்தவேண்டும் என்று தீர்மானித்தார். இந்தத் தீர்மானத்தில் பிறந்ததுதான் ஸ்னேகாலயா என்ஜிஓ.
ஸ்னேகாலயா
பாலியல் தொழிலாளார்கள் பற்றிய பல எதிர்மறையான கருத்துக்கள் மக்கள் மனதில் இருப்பதாக கிரீஷ் கூறுகிறார்.
கிரீஷ் அகமதாபாத் பகுதியில் உள்ள பாலியல் தொழிலாளர்களை நேரில் சந்தித்து உரையாடினார். இவர்கள் வருவாயை தரகர்களே எடுத்துக்கொள்கிறார்கள். மிகவும் குறைவான பணத்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களுக்குக் கொடுக்கிறார்கள்.
“பாலியல் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியம் அவர்களது குடும்பத்தினரின் பசியைப் போக்கக்கூட போதுமானதாக இருப்பதில்லை,” என்கிறார்.
16 வயது சிறுமி ஒருவரைக் கண்டார். அந்தச் சிறுமி 13 வயதில் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இரண்டு குழந்தைகள். ஒரு குழந்தை வீட்டில் இருக்க மூன்று வயது குழந்தை மட்டும் அவருடன் இருந்தது. அந்தக் குழந்தைக்கும் தன்னைப் போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக கிரீஷின் உதவியைக் கேட்டுள்ளார்.
அப்போதுதான் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்கவேண்டும் என்று தீர்மானித்தார். சிகப்பு விளக்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கத் தொடங்கியுள்ளார். இரண்டு மாதங்களுக்குள் ஸ்னேகாலயா மூலம் 80 குழந்தைகளுக்கும் மேலாகக் கற்றுக்கொண்டனர். குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் கொடுப்பார். பொழுதுபோக்கிற்கு கதை சொல்லுவார்.
ஆரம்பத்தில் அவருடன் இணைந்து வேலை செய்த நண்பர்கள் பின்னர் என்ஜிஓ-வை விட்டு விலகியுள்ளனர்.
அப்போதுதான் பாலியல் தொழிலாளார்களுக்காக பணியாற்றவேண்டும் என்கிற தீர்மானத்தில் பாலியல் தொழிலாளர்களையே ஏன் ஈடுபடுத்தக் கூடாது என்கிற கேள்வி கிரீஷ் மனதில் எழுந்தது.
பாலியல் தொழிலாளர்கள் ஆறு பேரை டிரஸ்டீயாக நியமித்தார், இது அவர்களை ஊக்கமளிக்கும் வகையிலும் கௌரவப்படுத்தும் வகையிலும் அமைந்தது.
ஒருமுறை பாலியல் தொழிலாளர்கள் விடுதியில் இருந்த தொழிலாளர்கள் பலர் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொருத்துக்கொள்ள முடியாமல் அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டார்கள். அவர்களது குழந்தைகளை தங்கவைத்துக்கொள்ளுமாறு விடுதி உரிமையாளர் கிரீஷிடம் கேட்டுள்ளார்.
”நான் அந்தக் குழந்தைகளுக்கு தங்குமிட வசதியை செய்து கொடுக்க சம்மதித்தேன். ஆனால் விடுதி உரிமையாளர்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே அனுப்புவேன் என்றும் பெண் குழந்தைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவேன் என்றும் கூறினார்,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் கிரீஷ்.
கிரீஷின் செயல்பாடுகளுக்கு அவரது பெற்றோர் ஆதரவளித்தார்கள். என்றாலும் அவர்களால் குழந்தைகளைத் தனியாகப் பார்த்துக்கொள்ள முடியாது. எனவே பாலியல் தொழிலாளர்களில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களை குழந்தைகள் பராமரிப்பில் ஈடுபடுத்தினார்.
கல்வி, சுகாதார பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு
ஸ்னேகாலயாவிற்காக கிரீஷ் நிலம் வாங்கினார். தங்குமிடம் கட்டினார். கல்வி, சுகாதார பராமரிப்பு, மறுவாழிவு, விழிப்புணர்வு, பிரச்சாரங்கள் என ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
மருத்துவமனை: ’Caring Friends’ மருத்துவமனை மூலம் எச்.ஐ.வி எய்ட்ஸ் உள்ளிட்ட தொற்று நோய்களுக்கு சிகிச்சையளிக்கத் தொடங்கினார்.
பயிற்சி: ‘Smile Project’ மூலம் தொழிற்கல்வி வழங்கினார். சானிட்டரி பேட் தயாரிப்புப் பணிகள் மேற்கொண்டு மாதவிடாய் சுகாதாரத்தையும் உறுதிசெய்தார்.
பிரச்சாரங்கள் : Malala Fund என்கிற பிரச்சாரத்தை தரமான கல்விக்காகவு Her Voice என்கிற பிரச்சாரத்தை பாலின சமத்துவத்திற்காகவும் ஏற்பாடு செய்தார். இதுபோல் ஏராளமான பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்துள்ளார்.
இதுபோன்ற ஸ்னேகாலயாவின் பிராஜெக்டுகளை சிகப்பு விளக்கு பகுதியில் வளர்ந்த குழந்தைகளே நடத்தி வருகிறார்கள்.
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்
ஸ்னேகாலயா செயல்பாடுகளுக்கு உலகம் முழுவதும் இருந்து பலர் நன்கொடை வழங்குகிறார்கள்.
“கிட்டத்தட்ட 65 சதவீத நன்கொடைகள் தனிநபர்களிடமிருந்தும் மற்றவை கார்ப்பரேட் நிதி மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலமாகவும் பெறப்படுகிறது,” என்கிறார் கிரீஷ்.
ஸ்னேகாலயா நடவடிக்கைகள் தவிர மகாராஷ்டிராவில் உள்ள கல்லூரி ஒன்றில் கிரீஷ் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
“மக்கள் என் மீதும் என் நிறுவனத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்கிறார்.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக இவரது சேவையை பாராட்டி கொண்டாடுவோரை மட்டுமல்ல கேலி பேசுவோரையும் மனதைப் புண்படுத்துவோரையும் கடந்தே வந்துள்ளார். இருப்பினும் பாலியல் தொழிலாளார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தில் உறுதியாக இருப்பதால் எதற்கும் முக்கியத்துவம் அளிக்காமல் இலக்கு நோக்கிய தனது பயணத்தில் மட்டுமே உறுதியாக இருக்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யு | தமிழில்: ஸ்ரீவித்யா